உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் அரசு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க கிரண்பேடி அனுமதி மறுப்பு: நீதிமன்றத்தை நாடப்போவதாக முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதிக்க மாட்டேன் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவித்துள்ளார். இவ்விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாட இருப்பதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, புதுவையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இச்சிலை அமைப்பதற்காக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "அரசு இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கிடையாது. 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தத் தீர்ப்பை புதுவை மாநில தலைமை செயலாளர் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இதுதொடர்பாக புகார் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். தனியார் இடத்தில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, "இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலேயே அனுமதி கோரி முடிவெடுப்போம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு புதுச்சேரியில் சிலை எதுவும் வைக்கப்படவில்லை" என்றார்.

அரசு அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சிலை வைப்பது தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி சிலை வடிவமைப்பு பற்றி முதலில் முடிவு செய்யும். அதன்பிறகே சிலை அமையும் இடம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இக்கமிட்டி கூட்டம் இதுவரையில் நடைபெறவில்லை" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE