முருகனைச் சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

வேலூர் சிறையில் உள்ள முருகனைச் சந்திக்க அவரது மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சமீபத்தில் தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்ததால் முருகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கக் கோரியும், அவரின் மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க அனுமதிக்கக் கோரியும், தனிமைச் சிறையில் உள்ள அவரை சாதாரண சிறைக்கு மாற்றக் கோரியும் அவரது உறவினர் தேன்மொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவ.14) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறைத்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், முருகன் வைக்கப்பட்டிருந்த ப்ளாக்- 1 சிறையில் கடந்த அக்டோபர் 18 மற்றும் நவம்பர் 19-ம் தேதிகளில் சிறைத்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில், அவரது அறையில் இருந்து செல்போன், சார்ஜர், கத்தி, பழைய ப்ளேட் உள்ளிட்ட 13 பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

சிறை விதிகளை மீறி தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த காரணத்தினால், 3 மாதத்திற்கு முருகனை யாரும் சந்திக்கக் கூடாது என தண்டனை வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, முருகன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும், செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ள ப்ளாக்-2 சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, முருகனுக்கு வழங்கப்பட்டுள்ள 3 மாத தண்டனை (யாரையும் சந்திக்கக் கூடாது) திரும்பப் பெற்றுக் கொள்ள சிறைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், முருகன் அவரது மனைவி மற்றும் உறவினர்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், முருகனை வேறு ப்ளாக்குக்கு மாற்றியது தொடர்பான நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், முருகன் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட அறிவுறுத்துமாறு மனுதாரர் வழக்கறிஞரிடம் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

6 hours ago

மேலும்