மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட சிறுமி பலி

கலர் கலராக இருந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஏழுகிணறு அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (31). இவரது மனைவி பாளையம் (26). இவர்களின் மகள் நித்திகா (4). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாளையத்துக்கு 2–வதாக ஆண் குழந்தை பிறந்தது. அதனால் அவருக்கு டாக்டர்கள் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மாத்திரைகளை கொடுத்திருந்தனர். மாத்திரைகளை வீட் டில் வைத்து பாளையம் சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி மாலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நித்திகா கலர் கலராக இருந்த அந்த மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த மகளைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகளை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுமி நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொத்தவால் சாவடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE