மத்திய அரசின் மனிதவளத் துறை யின் கீழ் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வரு கிறது. தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். தமிழ் மொழியின் வளர்ச் சிக்காகப் பாடுபடுவர்களுக்கு, இந் நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.
அதேபோல, அறக்கட்டளை விருது என்ற பிரிவின் கீழ் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இந்த விருதை வழங்குவதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி, தனது சொந்த நிதி ரூ.1 கோடியை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு வழங்கியிருந்தார். அதில் இருந்து கிடைக்கக் கூடிய வட்டித் தொகையைக் கொண்டு, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்களுக்கு ஆண்டு தோறும் விருது, பொற்கிழி வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, முதன்முதலாக கடந்த 2009-ம் ஆண்டுக்கான ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ மற்றும் ரூ.10 லட்சம் பொற் கிழி ஆகியவை பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலாவுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரானார்.
அதன்பின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் தொல்காப்பியர் விருது, குறள் பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகியவை வழங்கப்பட்டன. ஆனால், கருணாநிதி பெயரிலான விருது மட்டும் யாருக்கும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 2011 முதல் 2016 வரையிலான 6 ஆண்டுகளுக்கான ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ தற்போது வழங்கப்பட உள்ளதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, ஐம்பொன்னால் ஆன கருணாநிதி சிலை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளதாகவும், தகுதியுடைய நபர்கள் குறித்த பரிந்துரைகளை வரும் ஜூலை 10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங் களவை எம்.பி.யுமான திருச்சி சிவா கூறும்போது, ‘செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வரவேற்கக்கூடிய செயல். இனிவரும் காலங்களில் எவ்விதத் தடையோ, தாமதமோ இன்றி இந்த விருதை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.