புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: என்.ஆர்.காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததையும், மாநில அக்கறை அரசுக்கு இல்லை என எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி குற்றம் சாட்டினார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான ரூ. 2468 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது ஆளுநர் உரையைப் புறக்கணித்த காங்கிரஸ் எம்எல்ஏ பாலனும் அவைக்கு வந்து நிகழ்வுகளில் பங்கேற்றார்.

அப்போது எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி எழுந்து, "புதுச்சேரி அரசானது மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் இல்லை. இதனால் மாநில நலனில் அரசு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது. இப்படி இருந்தால் எப்படி புதுச்சேரி வளர்ச்சியடையும். அதனால் வெளிநடப்பு செய்கிறோம்" என்று குறிப்பிட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

முதல்வர் நாராயணசாமி குறுக்கிட்டு, மாநில நலனில் அக்கறை இருக்கிறது. அதனால்தான் டெல்லி சென்று பிரதமரை, மத்திய அமைச்சர்களை சந்தித்து நிதி தொடர்பாக கோருகிறோம் என்று விளக்கம் அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE