கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணையில் வீடியோ கான்பரன்சில் ஏமூர் புதூரை சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய், உயிரிழந்த 40 வயது பெண்ணின் கணவர் ஆஜராகினர். மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் இவ்வழக்கில் சட்ட உதவி கேட்டு கோரிக்கை வைத்தனர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஏமூர் புதூரைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் பிரித்திக் (9), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி சந்திரா (40) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் சிறுவன் பிரித்திக்கின் தந்தை பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றவேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து பன்னீர்செல்வத்தின் மனைவி சர்மிளா தன் கணவர் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதாகவும் மகனின் இறுதி சடங்கிற்குக்கூட வரவில்லை என் றும் பணத்திற்காக அவர் சிபிஐ விசாரணை கோரியிருக்கலாம் அவர் உச்ச நீதிமன்றம் சுயமாக செல்லும் அளவுக்கு விபரமானவர் அல்ல என தெரிவித்திருந்தார்.
சந்திராவின் கணவர் செல்வராஜ் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டிருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து செல்வராஜ், அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணனிடம் மகனின் வேலை தொடர்பாகவும், மனைவி இறந்தது தொடர்பாக உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எனக்கூறி கையெழுத்து பெற்றதாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று (அக். 13ம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது கரூரில் இருந்து சர்மிளா, செல்வராஜ் ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராகினர். மேலும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் சட்ட உதவி கேட்டு இருவரும் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் தமிழ்முரசு கூறியது: கரூரில் செப். 27ம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற விசாரணை நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரங்கோலி தவகலின் பேரில் பசுபதிபாளையத்தில் உள்ள எனது அலுவலகத்தில் சர்மிளா, செல்வராஜ் இருவரும் வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆஜராகினர்.
இதில் செல்வராஜ் உச்ச நீதிமன்றத்தில் தான் மனு செய்யவில்லை என்றும் தன் கையெழுத்தை வைத்து இன்னொருவர் ஆள்மாறாட்டமாக வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். சர்மிளா அவர் கணவர் பன்னீர்செல்வம் பிரிந்து 8 ஆண்டுகளாகிறது. குழந்தையின் நல்லது, கெட்டது எதுவிலும் பங்கேற்கவில்லை எனவும் யாரோ சொல்லிக்கொடு த்து பணத்தாசைக்காக வழக்கு தொடர்ந்துள்ளார் எனவும் இவ்வழக்கில் தங்களுக்காக வாதாட வழக்கறிஞர் வேண்டும் என சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் மனு அளித்துள்ளனர் என்றார்.