தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை: 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார். நியோ டைடல் பூங்கா திறப்பு, புதுமைப் பெண் விரிவாக்க திட்டம் தொடக்கம் என 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

இதுகுறித்து தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்றும் (டிச. 29), நாளையும் தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தருகிறார். இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட நியோ டைடல் பூங்காவை அவர் திறந்துவைக்கிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு மாணிக்கம் மஹாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு - தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

நாளை காலை 8.30 மணியளவில் காமராஜ் கல்லூரியில் நடைபெறும் விழாவில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ விரிவாக்கத் திட்டத்தை தொடங்கிவைக்கிறார். பின்னர் கன்னியாகுமரி செல்கிறார். அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT