‘லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
“உச்சநீதிமன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
‘தமிழகத்தின் முதல்வராக ஆனால், என்னுடைய முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகத்தான் இருக்கும்’ என கமல்ஹாசன் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.