அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது: தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பெயர், கொடி, சின்னம்,லெட்டர்பேடு ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் இபிஎஸ் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த கூடாது என தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது என தடை விதித்து கடந்த மார்ச் 18-ம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அவர் கூறியிருந்ததாவது:

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதா, இல்லையா என்பதை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மூல வழக்கில்தான் முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளன.

இந்த சூழலில் கடந்த 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், தமிழக முதல்வர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு பயன்படுத்த கூடாது என தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு சரியானதல்ல. இதன்மூலம் எனக்கும், ஆதரவாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் கொடி, சின்னம் போன்றவற்றை நாங்கள் பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக கட்சித் தொண்டர்களோ, பொதுமக்களோ புகார் அளிக்காத நிலையில், பழனிசாமி தனது சுய அரசியல் ஆதாயத்துக்காக தாக்கல் செய்திருந்த வழக்கில் தனி நீதிபதிஎங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்து இருப்பது ஏற்புடையதல்ல.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் இன்னும் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும். இவ்வாறு அதில் கோரிஇருந்தார்.

நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, இரட்டை இலை சின்னத்தை தங்களது தலைமையில் அவைத் தலைவராக இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியதாகவும், எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னம்கோரி நாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கூடாது என்றும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர்.

அதேநேரம் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக எந்த தடையும் கிடையாது என்று கூறி, இந்த வழக்கில் இபிஎஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

தமிழகம்

32 mins ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

50 mins ago

உலகம்

18 mins ago

க்ரைம்

41 mins ago

சுற்றுச்சூழல்

45 mins ago

தமிழகம்

54 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்