குற்ற வழக்கில் 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எவ்வாறு அமைச்சராக நீடிக்கிறார்? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: குற்ற வழக்கில் கடந்த 230 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி எந்தஅடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து தள்ளுபடி செய்தது. இதையடுத்து, 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

‘இந்த வழக்கில் ஜாமீன் கோருவதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறவில்லை’ என்று முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியிருப்பது தவறு. ஆவணங்கள் திருத்தப்பட்டபோதே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் மாறிவிட்டன. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம்: வழக்கின் புலன்விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அனைத்து ஆவணங்களும் அமலாக்கத் துறையிடம்தான் உள்ளன. வழக்கில் தேடப்பட்டு வரும் அசோக் குமார்தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க முடியாது. இதை பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்: கடைநிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே, உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 230 நாட்களுக்கும் மேலாகசிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் மக்களுக்கு தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம்என்பதை மறந்துவிட கூடாது. கண்டன தீர்மானத்தை எதிர்கொள்ளும் நீதிபதி, பதவியில் நீடிக்க முடியுமா. அதுபோலத்தான் இதுவும்.

வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம்: உச்ச நீதிமன்றத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி, ‘‘விருப்பம் உள்ளவர்கள் அவர் முன்பு ஆஜராகலாம்’’ என்றார். தீர்மானம் கொண்டு வரப்பட்ட நீதிபதியும் தொடர்ந்து பதவியில் நீடித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்துவிட்டது. அமைச்சரை நீக்கும் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ்: இந்த வழக்கில் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். இவ்வாறு வாதம் நடந்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்