மதுரை: மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் சசிகலா ராணி, மதுரை கலைச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர், மதுரை அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றோம். எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லேப்டாப்கள் திருடப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை ரத்து செய்து ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி பட்டு தேவனாந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு திருப்தியாக இல்லை. இதனால் மதுரை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் டிச. 14-ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துமாரி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: எனது மூத்த மகன் டேவிட், ஓட்டுனராக உள்ளார். இளைய மகன் கார்த்திக், 12-ம் வகுப்பும் படித்து வருகிறார். கடந்த 7.11.2021-ல் கேணிக்கரை காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர் என் வீட்டிற்கு வந்த இரு மகன்களையும் கட்டாயப்படுத்தி ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து என் மகன்களை உதவி ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் போலீஸார் கடுயையாக தாக்கியுள்ளனர். என் மகன்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய உதவி காவல் ஆய்வாளர் ஜோதிமுருகன் மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கேகே ராமகிருஷ்ணன் விசாரித்து, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிச. 18-க்கு ஒத்திவைத்தார்.