புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க, மாநில மக்கள்தொகை அடிப்படையில் கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க முடியாது. எனவே, இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தும் வரை, தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் புதிய அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற அடிப்படையிலேயே, 50, 100 அல்லது 150 இடங்கள் கொண்ட ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கடிதம் அளிக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இது, அனைத்து மாநிலங்களின் உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பு. மேலும், கடந்த பல ஆண்டுகளாக மாநிலத்தின் சுகாதார கட்டமைப்புக்காக அதிக அளவில் முதலீடு செய்து வரும் மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கும் செயல்.
தற்போது இந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ள அளவுகோலின்படி, மருத்துவர் - மக்கள்தொகை அளவு என்பது மாநில அளவிலான விதிமுறைகளை ஒப்புநோக்கும்போது பொருந்தாததாக உள்ளது. மாநில அளவில் போதிய மருத்துவர்கள் இருந்தாலும், மாவட்ட அளவில் கிடைப்பது தொடர் பிரச்சினையாகவே இருக்கும். அந்தந்த பின்தங்கிய பகுதிகளில் மருத்துவ கல்லூரியை திறப்பதன் மூலமாகவே இப்பிரச்சினையை தீர்க்க முடியும்.
மாநில அளவிலான அளவுகோல் அடிப்படையில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, தகுதியான மாவட்டங்களில் இதுபோன்ற சுகாதார நிறுவனங்கள் வருவதை தடுத்துவிடும்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறையினரின் தொடர் முதலீடுகளாலேயே, மருத்துவர்கள் - மக்கள்தொகை விகிதம் அதிகமாக உள்ளது. மத்திய அரசின் முதலீடு இதில் இல்லை என்ற உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நாங்கள் பல்வேறு திட்டங்களை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியபோதும், மதுரை எய்ம்ஸ் திட்டம் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. இந்த சூழலில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு விதிக்கப்பட்டுஉள்ள கட்டுப்பாடுகள், எதிர்காலத்தில் மருத்துவ துறையில் மத்திய அரசின் புதிய முதலீடுகளை முற்றிலும் தடுத்துவிடும். மேலும், கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்கான அடிப்படை உரிமை மீது எந்த ஒரு நிர்வாக அறிவுறுத்தல் மூலமாகவும் கட்டுப்பாடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு, இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவும், அதுவரை தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிக்கையை நிறுத்தி வைக்கவும் மத்திய சுகாதாரத் துறைக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 secs ago
இந்தியா
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
31 mins ago
வணிகம்
27 mins ago
இந்தியா
42 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago