தமிழகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி எப்போது? - வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயத்தில் விவசாயிகள்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கிராமப்புறங்களின் பெரும் வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைவளர்ப்புதான். இதனை நம்பி பெருமளவில் குடும்பங்கள் உள்ளன. இந்த நிலையில் எருமை மற்றும் மாடுகளை தாக்கும் சப்பைவாய் எனப்படும் கோமாரி நோய்க்கு தமிழ்நாடு முழுவதும் செலுத்த தடுப்பூசி வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுதொடர்பாக ஊத்துக்குளியை சேர்ந்த கால்நடை விவசாயி சின்னசாமி கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு இருமுறை செலுத்தப்படும் கோமாரி நோய்க்கான தடுப்பூசி, நடப்பு மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு நோய் தாக்க ஆரம்பித்துவிட்டது.

இனி அடுத்தடுத்த கால்நடைகள் மற்றும் சந்தைக்கு கொண்டுவரப்படும் மாடுகள் மூலமாக எளிதில் பரவும் சூழல் இருப்பதால், உடனடியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க வேண்டும். இந்நோய் வந்தால், வாயில் இருந்து உமிழ்நீர் சுனைபோல வந்துகொண்டே இருக்கும். தீவனம் சாப்பிடாமல், எருமைகள் மற்றும் மாடுகள் எளிதில் சோர்வடைந்துவிடும். பால் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கும். இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறோம்” என்றார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தமற்றொரு கால்நடை விவசாயி அ.பாலதண்டபாணி கூறும்போது, "கால்நடைகளை எளிதில் தாக்குபவை சப்பைவாய் எனப்படும் கோமாரி நோய். நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்துக்கான தடுப்பூசி இன்னும் செலுத்தப்படவில்லை. கலப்பின பசுக்களுக்கு எளிதில் ஏற்படும் நோய் தாக்குதலை கால்நடை விவசாயிகள் சமாளிக்க வேண்டிய சூழல் பெரும் சவாலாக உள்ளது.

அக்டோபர் மாதம் பிறக்க உள்ள சூழலில், இன்னும் தடுப்பூசி செலுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் மாநில அளவில் இல்லாததால், தடுப்பூசிகள் எப்போது செலுத்தப்படும் என்பது தற்போது வரை விடை தெரியாத கேள்வியாக உள்ளது. கோமாரி நோய் எளிதில் ஒரு மாட்டில் இருந்து மற்றொரு மாட்டுக்கு பரவுவதுதான், கால்நடை விவசாயிகளின் பெரும் கவலை.

தடுப்பூசிகளை மாநில அரசுக்கு இன்னும் மத்திய அரசு தரவில்லை. ஏற்கெனவே, தென் மேற்கு பருவமழை பொய்த்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் பருவம் தப்பியும், குறைந்த அளவே பெய்யும் எனவும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கால்நடைகளை வைத்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் தஞ்சையில் இருந்துவைக்கோல் கொள்முதல் செய்து,விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது. தற்போது,அதே நடைமுறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை மண்டல இணைஇயக்குநர் பணியிடம் கடந்த ஓராண்டாக காலியாகஉள்ளது.

பொறுப்பு அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால், விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கும் சூழல்உள்ளது. அந்த இடத்தை உடனடியாக பூர்த்தி செய்வதுடன், திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களிலுள்ள கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்