திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டியின் ரூ.75 கோடி மதிப்புள்ள இடத்தை குத்தகை விடுவதன் மூலமாக கையகப்படுத்த முயன்றதாக கூறப்படும் புகார் காரணமாக திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செங்கம் ஜி.குமார் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் ஒன்றான பே கோபுரத் தெருவில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை, திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு, காங்கிரஸ் நிர்வாகி அண்ணாமலைப் பிள்ளை என்பவர் கடந்த 1960-ல் தானமாக வழங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுபோது, 1.40 ஏக்கர் இடமும் ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்டுப்பாட்டில், கடந்த 1977-ம் ஆண்டு முதல் உள்ளன.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்டுப்பாட்டில் உள்ள 1.40 ஏக்கர் இடமானது, திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமானது என வருவாய் துறையிடம் முறையிடப்பட்டது. நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் பட்டா மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிச்செல்வன் மனு கொடுத்துள்ளார். இது தொடர்பான விசாரணை 7 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது.
இதில், 1.40 ஏக்கர் இடம் தொடர்பாக நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து, வருவாய் துறையினர் ஏற்றுக் கொண்டனர். மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போதிய ஆவணங்களை வழங்காததால், அவர்களது கோரிக்கையை நிராகரித்து, ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளுக்கு பிறகு நகர காங்கிரஸ் கமிட்டி வசம் கடந்த ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் என பெயர் பலகை வைக்கப்பட்டன.
இதற்கிடையில், நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான இடத்தை மீட்க ரூ.1 கோடி வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஈடாக, 36,667 சதுரடி (ரூ.75 கோடி மதிப்பு) இடத்தை குத்தகைக்கு விட்டு, வருவாய் ஈட்டிக் கொள்ள காய்கள் நகர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை நகரம் ரமணாஸ்ரமம் அருகே வஉசி நகர் 1-வது தெருவில் வசிக்கும் அருணாசலம் மகள் நிரஞ்சனா என்பவருக்கு கடந்த மார்ச் 11-ம் தேதி, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெற்றிசெல்வன் குத்தகைக்கு விட்டுள்ளார்.
இதன் பின்னணியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் இருந்ததாக தகவல் வெளியானது. அகில இந்திய தலைமையின் அனுமதியின்றி, குத்தகை விடுவதன் மூலமாக 36,667 சதுரடி இடத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அகில இந்திய தலைமைக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைமை மூலம் அமைக்கப்பட்ட குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்பித்து இருக்கின்றனர். இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்ட(தெற்கு) காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செங்கம் குமார் நேற்று (ஜுலை 14-ம் தேதி) நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவர் வகித்து வந்த, ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இதனிடையே, குத்தகை ஒப்பந்தமும் கடந்த 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
உண்மையை நிலைநாட்டுவேன்: இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள செங்கம் ஜி.குமார் இன்று(15-ம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான சொத்து, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டு, கட்சி பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன. இந்த சொத்து காரணமாக சிலர் கூறிய புகாரின் அடிப்படையில், தவறான புரிதலால், என்னை பதவி நீக்கம் செய்துள்னர். நான், எந்த தவறும் செய்யவில்லை. உண்மையின் பக்கம், நான் நிற்கிறேன். காங்கிரஸ் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனது பக்க நியாயத்தை ஆதாரத்துடன் காங்கிரஸ் தலைமையிடம் சமர்த்து உண்மையை நிலைநாட்டுவேன்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
7 mins ago
தமிழகம்
18 mins ago
இந்தியா
25 mins ago
க்ரைம்
43 mins ago
விளையாட்டு
38 mins ago
சினிமா
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago