அதிமுக பொதுக்குழு விவகாரம் | பதவிப் பசியால் ஓபிஎஸ் வழக்கு தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு வாதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப் பசி காரணமாகவே வழக்கு தொடர்ந்துள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஒரு மாத இடைவெளிக்கு பின் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், "கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் அடிப்படை தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்றில்லை. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது என்று கூறினாலும், அவர்களைவிட உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எம்எல்ஏவாக செயல்படுவது மனுதாரர்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்து விளக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும் ஓபிஎஸ் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும் எனத் தெரியவில்லை. மேலும், ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியில் 2500 பேர் கொண்ட பொதுக்குழு எப்படி ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டது.

கட்சி செயல்பாடு முடங்கி விட்டது என்ற வாதம் கற்பானையானதல்ல; உச்ச நீதிமன்றமே அதை ஏற்றுக் கொண்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாகவே பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை. கட்சியின் அடிப்படை விதிகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது.

கட்சி செயல்பாடு தொடர்ந்து முடங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் நியமனத்துக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் ஓபிஎஸ் எந்த உரிமையும் கோர முடியாது. ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வந்ததன் மூலம் கட்சியின் பழைய நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளின்படியே, விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனவே, அதில் எந்த தவறும் இல்லை.

பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் தலைவராக, முதல்வராக இருந்திருக்கலாம். தலைவர்கள் வரலாம், போகலாம். மக்களின் விருப்பப்படிதான் கட்சி தொடர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளும் கட்சி நலன்கருதியே எடுக்கப்பட்டன. நிர்வாகிகளை நியமித்து இணையாக கட்சி நடத்தும் நபர், பதவிப்பசி காரணமாகவே இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்" என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களுக்காக வழக்கு வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 9) ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சுற்றுலா

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

மேலும்