அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் எவரும் பணியமர்த்தப்படவில்லை: அமைச்சர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி" என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி. அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது. அந்தச் செய்தியை பார்த்தவுடன், காவல் துறை உதவி ஆணையரை அங்கு அனுப்பி, அப்படி ஏதாவது சம்பவம் இருக்கிறதா என்று விசாரித்தபோது, அவ்வாறு இல்லை என்பது தெரியவந்தது.

ஒரு தனிநபர் தன்னுடைய போராட்டத்தை முன்னெடுக்க ஒரு சில நபர்களை அழைத்து வந்துள்ளார். அந்த நபருக்கும் அவரை பணியமர்த்திய நிறுவனத்துக்கும் சம்பளம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், சிறார்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது தவறான செய்தி என்பதையும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நானும் அதிகாரிகளும் அங்கு சென்று உடனடியாக விசாரணை மேற்கொண்டோம். எங்களுடைய விசாரணையிலும், அங்கு எந்த சிறாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனவே, இந்தத் திட்டமிட்ட செயல், ஆவினுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற நிலையிலும், எங்களுடைய வளர்ச்சிக்கு ஒரு குந்தகம் விளைவிக்கின்ற விதத்திலும் இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புவதற்கான பணி நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகளை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கு எதிராக போராடுவது போன்று திட்டமிட்டு நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதேபோல், ஆவின் பால் போக்குவரத்தில் நிறைய மாற்றங்கள் இருப்பதைக் கண்டறியவும், மாற்றங்களைக் கொண்டு வரவும் நாங்கள் அறிவுரைகளை கூறியிருக்கிறோம். அனைத்து வண்டிகளும் எஃப்சி (FC) செய்திருக்க வேண்டும். முறையான உரிமங்கள் வைத்திருக்க வேண்டும். எந்தத் தவறுகளும் இருக்கக் கூடாது. இதன் அடிப்படையில், எங்களது துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஒரே பதிவெண் கொண்ட இரு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. எங்களுடைய அறிவுறுத்தலின் பேரில், எங்களது அதிகாரிகள்தான் இதனை கண்டுபிடித்தனர்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை, அம்பத்தூரில் இயங்கிவரும் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30-க்கும்மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், சிறார்கள் ஐஸ்கிரீம் பேக்கிங் பிரிவில் பணியாற்றியது தொடர்பான வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட சிறார்கள் ஆவின் நுழைவு வாயில் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்