நில அபகரிப்பு | ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரும் உறவினரின் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நில அபகரிப்பு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அவரது உறவினர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த ஜெயக்குமார் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, காவல் துறையில் மகேஷ் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார், ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்தச் செய்தி வெளியாகி தனது நற்பெயரும், நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கக் கோரியும், தன்னை பற்றி அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் மகேஷுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்க கூடாது என மகேஷ் தரப்பிலும் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க மகேஷுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் சுப்ரமணியன் , "கடந்த 2016-ம் ஆண்டில் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது. எனவே மான நஷ்டஈடு கோரி, தனது தரப்பில் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி மகேஷ் தொடர்ந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

அப்போது புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கடந்த 2016-ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்த காரணத்தால் அவர் மீது புகார் அளிக்க முடியவில்லை. எனவேதான், கடந்த ஆண்டு புகார் அளித்தேன். ஊடகங்களில் ஜெயக்குமார்தான் பேட்டி அளித்து வருகிறார்" எனத் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஜெயக்குமார் தொடர்ந்துள்ள வழக்குக்கு எதிராக மகேஷ் தாக்கல் செய்த நிராகரிப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்