உலக அளவில் அவ்வப்போது வெளியிடப்படும் குறியீடுகளில் சில துறைகளில் முன்னணி நாடுகள் வரிசையில் இந்தியா இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் முன்னிலையில் இருக்க வேண்டாம் என நினைக்கக்கூடிய ஒரு பட்டியலில் இந்தியா இடம் பிடித்திருப்பதுகவலை அளிக்கிறது. பிரபலமான `நேச்சர் (Nature)’ என்கிற அறிவியல் பத்திரிகை பிளாஸ்டிக் கழிவுகளை அதிகமாக உருவாக்கும் நாடுகள் குறித்த ஒரு பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்து இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. மற்ற நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகமாக உருவாக்கினாலும் நவீன முறைகளைப் பயன்படுத்தி அவற்றில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்து விடுகின்றன. இதனால் அந்த நாடுகளின் சுற்றுச்சூழல் அவ்வளவாக பாதிக்கப்படுவதில்லை. ஆனால், பிளாஸ்டிக் உமிழ்வைப் (plastic emissions) பொறுத்தவரையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.
இந்தியாவில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளில் சுமார் 12% மட்டுமே மறுசுழற்சிச் செய்யப்படுகிறது. மீதமுள்ள 88% கழிவுகள் திறந்த வெளிகளில் குவிக்கப்பட்டும், ஆற்றிலிருந்து நீர் செல்லும் வழிகளை அடைத்துக் கொண்டும் இருக்கின்றன. அத்துடன் தனிநபர்களாலும், கழிவுகளைச் சேகரிப்பவர்களாலும் பொது வெளியில் எரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மேலும் மாசுபடுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு சுமார் 9.3 மில்லியன் டன் பிளாஸ்டிக் உமிழ்வு நமது நாட்டில் உருவாகிறது. இது உலகளவில் ஐந்தில் ஒரு பகுதியாகும். இதில் 5.8 மில்லியன் டன் எரிக்கப்படுவதால் சுற்றுப்புறத்துக்கும், மனித ஆரோக்கியத்துக்கும் தீங்கிழைக்கும் பல வாயுக்கள் வெளியாகின்றன. மீதமுள்ள 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை மேட்டில் குவிக்கப்படுகின்றன. இதனால் நமது நிலம், நீர், காற்று ஆகியவை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இந்தியர்கள் சராசரியாக நாளொன்றுக்கு 120 கிராம் பிளாஸ்டிக் கழிவை உருவாக்குவதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவைக் காட்டிலும் சீனா 4 முதல் 6 மடங்கு அதிக பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்தாலும் அதனுடைய பிளாஸ்டிக் உமிழ்வு 2.8 மில்லியன் டன்தான் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய பிளாஸ்டிக் மாசுபடுத்தி என்கிற நிலையில் இருந்த சீனா, அதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் இன்றைக்கு இந்தியாவுக்குப் பின்னால் இருக்கிறது. இதற்குக் காரணம் அது பின்பற்றும் சிறந்த மறுசுழற்சி முறைகளும், கடுமையான ஒழுங்கு நெறிமுறைகளும் ஆகும்.
ரூ.3.5 லட்சம் கோடி வர்த்தகம்: உலகளவில் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வோடு ஒப்பிடுகையில் நமது நுகர்வு சராசரி 43% தான். அதாவது, அவர்கள் 30 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்தால் நாம் 13 கிலோதான் உபயோகிக்கிறோம்.
ஆனால் அவற்றை மறுசுழற்சி செய்வதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்படாத துறையே இல்லை எனும் அளவுக்கு அதன் பயன்பாடு எங்கும் வியாபித்திருக்கிறது. 2023-ம் நிதியாண்டில் பிளாஸ்டிக் தொழிலின் மதிப்பு சுமார் ரூ.3.5 லட்சம் கோடி.
இது நமது நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் 1.4 சதவீதமாகும். நமது நாட்டில் ஏறக்குறைய 30,000 பிளாஸ்டிக் செயலாக்க அலகுகள் (processing units) இருக்கின்றன. இதில் 90% சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள். இந்தத் தொழிலில் பணிபுரிவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 லட்சமாகும்.
இத்தொழிலின் வளர்ச்சி விகிதம் 10 முதல் 15%. 2025-ம் நிதியாண்டில் இந்தியா ஏற்றுமதி செய்த பிளாஸ்டிக் பொருள்களின் மதிப்பு சுமார் 12.5 பில்லியன் டாலர் (ரூ.1.07 லட்சம் கோடி). எனவே, பிளாஸ்டிக் என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாட்டின் பொருளாதாரத்திலும் ஒரு தவிர்க்க முடியாத பொருளாகும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 2022-ல் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும் 19 பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது. அதாவது, `குறைவான பயன்பாடு; அதிகக் கழிவு’ எனக் கருதப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் - தட்டுகள், அலங்காரப் பொருள்கள், ஸ்ட்ராக்கள், சமையலறையில் பயன்படுத்தும் பல பொருள்கள் இதில் அடங்கும்.
அதுபோல 100 மைக்ரானுக்கு அதிக அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் பைகள் மட்டுமே அரசாங்கத்தால் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மற்ற எல்லாவற்றையும் போலவே இந்தியாவில் நல்ல நடவடிக்கைகள் எல்லாம் செயல்படுத்தலின்போது தடுமாறுவது போல இதுவும் அதன் நிறைவேற்றத்தில் எதிர்பார்த்த முடிவை எட்டவில்லை.
உலகளவில் பிளாஸ்டிக் என்பது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பொருளாக உருவெடுத்துள்ளது. மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் எனில், அது எங்கும் எப்போதும் இந்த பூமியில் நிறைந்திருக்கும்.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும், நீர்வாழ் உயிரினங்களுக்கும் இது பேராபத்தாக இருக்கிறது. சமீபத்தில் குஜராத்தில் பசு மாடு ஒன்று சினையாக இருக்கிறது என 9 மாதங்கள் வரை நினைத்து வந்த அதன் உரிமையாளர், கன்று எதுவும் ஈனாத பட்சத்தில் அதை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது அதற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அதன் வயிற்றிலிருந்து சுமார் 65 கிலோ பிளாஸ்டிக் பைகள், கப்புகள், ஒரு முறை மட்டும் உபயோகிக்கக்கூடிய ஸ்பூன்கள் ஆகியவற்றை எடுத்திருக்கிறார். இதுபோல நீர் நிலைகளில் நாம் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களை உணவு என்று எண்ணி சாப்பிட்டு உயிரிழக்கும் உயிரினங்கள் கணக்கிலடங்காது.
உற்பத்தியாளர் பொறுப்பு: பிளாஸ்டிக் உபயோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலும் அதிகமாக மறுசுழற்சி செய்யும் வகையிலும் இந்திய அரசு 2022-ம் ஆண்டு ”பிளாஸ்டிக் பேக்கேஜிங்கிற்கான நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு குறித்த வழிகாட்டுதல்களை (Guidelines on Extended Producer Responsibility – EPR – for Plastic Packaging) அறிவித்தன.
அதன்படி பிளாஸ்டிக் பொருள் தயாரிப்பாளர், இறக்குமதியாளர், பிராண்டு உரிமையாளர் ஆகியோர் தாங்கள் உற்பத்தி செய்யும் அல்லது பேக்கேஜிங்குக்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக பிளாஸ்டிக் பொருள்களை சேகரிப்பது, மறுசுழற்சி செய்வது, மறுமுறை பயன்படுத்துவது என ஒவ்வொன்றுக்கும் இலக்கு நியமித்துச் செயல்படுவதைக் கட்டாயமாக்கி இருக்கிறது.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் அவை உபயோகிக்கும் பாட்டில்களில் சுமார் 30% மறுசுழற்சிச் செய்த பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது கட்டாயமாகும். அதுபோல பல்வேறு விதமான நுகர்வோர் பொருள்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவரும் மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேக்கேஜிங் பொருள்கள் உபயோகிப்பதை 58,000 டன்னிலிருந்து 1 லட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது. இது போல வேறு பல நிறுவனங்களும் அரசின் EPR வழிமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கின்றன.
உலகளாவிய நடவடிக்கை அவசியம்: இப் பெரும் பிரச்சினையைக் கருத்தில் கொள்ளும்போது இதற்கு உலகளாவிய நடவடிக்கை அவசியம் எனக் கருதி 2022-ம் ஆண்டு, 175 ஐ.நா. உறுப்பு நாடுகள் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, முதல் முறையாக சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க ஒப்புக்கொண்டன.
இருப்பினும், பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக, கடந்த ஆண்டு தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்த ஒப்பந்தத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்துக்கு எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி செய்யும் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது சம்பந்தமான அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் ஜெனீவாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் மாசுபாடு எனும் பேராபத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் விரைவாக செயல்பட வேண்டும் இல்லையெனில் 2050-ம் ஆண்டில் பூமியில் பிளாஸ்டிக்கின் எடை மீன்களின் உயிர்திரள் (biomass) எடையான 158 மில்லியன் டன்னைவிட அதிகமாகிவிடும், அது மட்டுமல்லாமல் இந்த பூமியில் வாழும் அனைவரின் ஒட்டுமொத்த உயிர்திரளைவிட அதிகமாகிவிடக் கூடிய அபாயம் உள்ளது.
பிளாஸ்டிக் கழிவைத் தடுக்க சில வழிகள்
1 பிளாஸ்டிக் உற்பத்தி, நுகர்வு, மறுசுழற்சிஆகியவை குறித்த தரவுகளை அரசு தீவிரமாக சேகரிக்க வேண்டும். இப்போது பல மாநில மாசு கட்டுப்பாட்டு அமைப்புகள் ஒழுங்கான தரவுகளை வழங்குவதில்லை.
2 பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இப்பிரச்சினையை அதன் மூலாதார நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.
3 பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் அவை பயன்படுத்திய அளவு, சேகரித்த அளவு, மறுசுழற்சி செய்த அளவு போன்றவற்றை வருடந்தோறும் அரசுக்குத் தெரிவிக்கும் முறையை மேம்படுத்துவதோடு கட்டாயப்படுத்தவும் வேண்டும். அதுபோல நவீன கழிவு மேலாண்மை முறைகளைக் கண்டறிந்து அதைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.
4 மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஊக்குவிப்பதோடு அதற்கு சவாலாக இருக்கும் பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும்.
5 அரசு தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதோடு தனிநபர்களும் சமூகமும் நிலைநிறுத்தத்தக்க நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளவும், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் உபயோகிப்பைக் குறைக்கச் சொல்லியும் ஊக்கப்படுத்த வேண்டும்.
மக்கக்கூடிய அல்லது மறுசுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் வகைகள்: Polyethylene Terephthalate (PET), High Density Polyethylene (HDPE) பெரும்பாலும் மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் வகைகள்: Polyviny Chloride (PVC), Polypropylene (PP) மறுசுழற்சியே செய்யமுடியாத பிளாஸ்டிக் வகைகள்: Low Density Polyethylene (LDPE), Polystyrene (PS).
- sidvigh@gmail.com