வி.ஐ.பி.யோ, விருந்தினரோ, திருமண நாளுக்கோ, காதலிக்கோ தரப்படும் வரவேற்பு-பரிசுப் பொருளாகப் பொக்கே எனப்படும் பூங்கொத்து நிரந்தர இடம் பிடித்திருக்கிறது. விலை அதிகமாகக் கொடுத்து வாங்கப்படும் இந்தப் பூங்கொத்தை அதிகபட்சமாக இரண்டு நாட்கள் வைத்து அழகு பார்க்கலாம். அதற்கு மேல் அதைப் பாதுகாப்பது சாத்தியமில்லை, குப்பைத்தொட்டிக்குத்தான் போகும்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது பழைய பழமொழி. அந்தப் புல்லினத்தைச் சேர்ந்த தாவரப் பேரினம்தான் பனை. அந்தப் பனை ஓலையைக் கொண்டு கண்கவர் உலர் பூங்கொத்துகளைத் தயாரித்துவருகின்றனர் நெய்வேலி என்.எல்.சி. தோட்டக்கலை ஊழியர்கள். புத்துயிர் பெற்ற இந்தப் பூங்கொத்துகள் விருந்தினர் வீடுகளில் மகிழ்ச்சியை ஞாபகமாகத் தேக்கி வைக்கின்றன.
இயற்கை அழகு
நூறாண்டுகளுக்கு முன்புவரை கற்பகவிருட்சம் என்ற பெயருடன் நமது வாழ்க்கையெங்கும் வியாபித்திருந்த பனைமரம், இன்றைக்குப் பயனற்ற மரமாகக் கருதப்படுவது காலத்தின் கோலம். பனை மரம் தரும் நேரடி பயன்கள் மாறிவிடவில்லை. அதேநேரம் நேரடி பயன்பாடு அற்றவை என்று ஒதுக்கப்படும், பனைமரக் கழிவுகளைக்கூடக் கலையழகுமிக்க கைவினைப் பொருட்களாக இவர்கள் மாற்றுகிறார்கள்.
பனையோலையை விதவிதமாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்த வாடாத உலர் பூங்கொத்துகளே நெய்வேலிக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கின்றன. நீண்ட நாட்கள் வைத்திருக்கக்கூடிய, இயற்கைக்கு இணக்கமான இந்த உலர் பூங்கொத்துகளின் தயாரிப்பில் பனங்காய்கள், வில்வக் காய், தாமரை விதை ஓடு, பீர்க்கங்காய், குதிரைக் காய் விதை ஓடு, பனங்காய் காம்பு, தென்னங்குச்சி,
மூங்கில் பிரம்பு உள்பட நூற்றுக்கு நூறு இயற்கையான பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.
வித்தியாச முயற்சி
நெய்வேலி என்.எல்.சி. வளாகத்தில் நடைபெறும் விழாக்களில் இந்தப் பனை ஓலை பூங்கொத்துகளை அடிக்கடி பார்க்க முடியும். "எங்கள் ஊழியர்களின் மாறுபட்ட சிந்தனை, வித்தியாசத்தைத் தேடும் முயற்சியில் உருவானதுதான் பனைப் பூங்கொத்து.
மலர் பூங்கொத்தைக் காட்டிலும் உலர் பூங்கொத்தின் தயாரிப்புச் செலவும் மிகவும் குறைவு. அது மட்டுமில்லாமல், இந்த உலர் பூங்கொத்தைக் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள்வரை வைத்து அலங்கரிக்கலாம்.
மரக் கழிவுகளைக் கொண்டுதான் இந்த உலர் பூங்கொத்துகளைத் தயாரிக்கிறோம். இதன்மூலம் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையை மீட்டெடுக்கும் பணியில் எங்களால் முடிந்த முயற்சி இது" என்கிறார் என்.எல்.சி. தோட்டக்கலைத் துறை முதன்மை மேலாளர் செந்தில்குமார்.
நமது பாரம்பரிய அடையாளமாகவும், மாநில மரமாகவும் இருக்கும் பனையை இப்படிப் பயன்படுத்துவதன் மூலம், அதன் பாதுகாப்புக்கும் இவர்கள் பங்காற்றிவருவது வரவேற்கத்தக்க விஷயம்.