சுற்றுச்சூழல் பற்றிய சொல்லாடல் மெதுவாக உருவாகிவரும் அதேநேரம், காட்டுயிர், இயற்கை சார்ந்த கவனம் அதில் மைய அம்சமாக இன்னும் மாறவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் பிரச்சினைகள் என்பவை நகர்ப்புறச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், மாசுபாடு மட்டுமல்ல. சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதன் மையப்புள்ளி இயற்கையைப் பாதுகாப்பதுதான். இந்தப் பின்னணியில் துறைசார்ந்து இயங்கிவரும் பேராசிரியர்கள் தமிழில் அதிகமாக எழுதுவதில்லை. அதிலிருந்து மாறுபட்டு காட்டுயிர் உயிரியல் சார்ந்த பேராசிரியரான ச.சாண்டில்யன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
நாம் அறிந்த வரையில் பால்வீதி, சூரியக் குடும்பம் எனப் பிரம்மாண்டமான இயற்கை அம்சங்களில் உயிருள்ள கோளம் புவி மட்டுமே என்பதை உணர்த்தியுள்ளார். தேசிய உயிர்ப்பன்மை ஆணையத்தின் சார்பில் ஆக்கிரமிப்புத் தாவரங்கள்-உயிரினங்கள் குறித்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாகச் சில கட்டுரைகள் உருவாகியுள்ளன. அதிகம் கவனம் செலுத்தப்படாத ஒளி மாசு உள்ளிட்ட அம்சங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார். உயிர்ப்பன்மை குறித்த ஓர் அறிமுக நூலாக இது பயன்படும்.
காலநிலை மாற்றத்தின் பின்னணியில் இயற்கை, காட்டுயிர்கள் சார்ந்த விழிப்புணர்வும் பாதுகாப்பும் முதன்மைக் கவனம் கோரி நிற்கின்றன. துறைசார்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பினருக்கும் இது குறித்த ஆர்வமும் கற்பித்தலும் தேவைப் படுகிறது. அந்த வகையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டும் பேராசிரியர்கள், பொது மக்களும் அறியும் வகையில் எழுதுவதும் பேசுவதும் அவசியமாகிறது. அந்த வகையில் இது வரவேற்கத்தக்க ஒரு நூல்.- அன்பு
பல்லுயிர் போற்றுவோம்,
ச.சாண்டில்யன்,
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், தொடர்புக்கு: 99404 46650