பெண்கள் 360: ஆஸ்கர் பெண்கள்!

By செய்திப்பிரிவு

‘ஆஸ்கர்’ பெண்கள்!


ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2023 மார்ச் 13ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தின் முதுமலையில் தாயைப் பிரிந்து வாடிய குட்டி யானைகளைப் பராமரிக்கும் பொம்மன் - பெள்ளி இணையர் குறித்த ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணக் குறும்படம் ஆஸ்கர் விருது வென்றது. இப்படத்தை உதகையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சால்வஸ் இயக்க, குனீத் மோங்கா தயாரித்துள்ளார். இந்திய நிறுவனம் ஒன்றின் தயாரிப்பில் ஆஸ்கர் வென்ற முதல் ஆவணக் குறும்படம் இது. இந்த வெற்றி குறித்துப் பேசிய குனீத் மோங்கா, “இரண்டு பெண்கள் இதைச் செய்திருக்கிறார்கள். விருது விழாவைப் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் துணிச்சலான எதிர்காலம் இங்கே இருக்கிறது. வாருங்கள் முன்னேறலாம்” என்றார்.


வன்முறைக்கு முடிவு எப்போது?


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த கலிவரதன் என்பவரின் மனைவி ஆண்டாள். இவர் தன் சகோதரரின் மகள் கிருத்திகாவைத் தன்னுடைய மகன் முகேஷ் ராஜுவுக்குத் திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பமாக இவர்கள் வசித்துவந்த நிலையில் மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ஆண்டாள், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது கழிவறைக்குப் பயன்படுத்தும் ஆசிட்டை வீசியுள்ளார். வலியால் கதறிய கிருத்திகாவின் அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்குப் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் கிருத்திகாவை மீட்டுத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆசிட் வீசியதால் வலது கண் பார்வையை அவர் இழந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ஆண்டாளைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்ப அமைப்புக்குள் நிகழும் வன்முறைகளுக்கு எப்போது முடிவு?


‘வந்தே பாரத்’தை இயக்கிய முதல் பெண்


1989ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநராக வரலாற்றைப் படைத்தவர் மும்பையைச் சேர்ந்த சுரேகா யாதவ். 1996இல் சரக்கு ரயில் ஓட்டுநராகவும் 2000இல் பயணிகள் ரயில் ஓட்டுநராகவும் இருந்த அவர், 2020இல் சவால் நிறைந்த மும்பை - புனே மலைப்பாதையில் டெக்கான் ரயிலை இயக்கினார். இந்நிலையில் ‘வந்தே பாரத்’ ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்கிற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். மார்ச் 13ஆம் தேதி மும்பையிலிருந்து சோலாப்பூர் சென்ற ‘வந்தே பாரத்’ ரயிலை வெற்றிகரமாக இயக்கிய சுரேகாவுக்கு ரயில் நிலையத்திலேயே பாராட்டு விழா நடத்தி மத்திய ரயில்வே அவரைக் கெளரவித்தது.


நீதிமன்றத்தில் பெண்களை அவமதிக்கும் சொல்லுக்கு ‘நோ’


நீதிமன்ற உத்தரவுகளிலும் சட்ட ஆவணங்களிலும் பெண்களை அவமதிக்கும் சொற்கள் இடம்பெறாமல் இருப்பதைத் தடுக்க ‘உபயோகிக்கக் கூடாத சொற்கள்’ அடங்கிய தொகுப்பை அறிமுகம் செய்யவிருப்பதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தின விழா ஒன்றில் பேசிய அவர், பெண்களைக் குறிவைத்துப் பேசப்படும் இழிசொற்களை ஒருபோதும் நீதிமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது என்றார். மேலும், சட்டத்துறை வல்லுநர்களால் உருவாக்கப்படும் இந்தத் தொகுப்பு நீதித்துறையை சேர்ந்த அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் விரைவில் இத்தொகுப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


- ராகா

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE