நான் ஓர் அரசுப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். சிறு வயது முதலே வாசிப்பின் மீது அளவற்ற ஆர்வமும் ஈடுபாடும் பற்றும் எனக்கு உண்டு. கிடைக்கும் புத்தகங்களை எல்லாம் வாசித்து முடிக்கவேண்டும் என்கிற எண்ணம் என்னை மேலும்மேலும் வாசிக்கத் தூண்டும். என்னுடைய கணவரும் வாசிப்பின் மீது அளவற்ற ஈடுபாடும் பற்றும் கொண்டவர் என்பது, வாசிப்பின் மீது கூடுதல் ஆர்வத்தை உருவாக்கிவிட்டது.
அண்மையில், ‘இக்கிகய்’ என்கிற ஜப்பானிய மொழிபெயர்ப்பு நூலைப் படித்தேன் ஒருவருடைய ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களைச் செயல்படுத்துவதற்கு என்னென்ன வழிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை இந்த நூலின் மூலம் அறிந்துகொண்டேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘இக்கிகய்’ (வாழ்க்கையின் நோக்கம்) இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தவும் செயல்படுத்தவும் பயிற்சிகள் தேவை. பரபரப்பான சூழலில் இயங்கிக்கொண்டிருக்கும் நாம் அனைவரும் நம்முடைய எண்ணங்களுக்கும் விருப்பங்களுக்கும் மாறாக ஏதோவொரு வகையில் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கிறோம்.
ஒரு நூல் என்ன செய்துவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு ஒரு நூல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தது என்று சொல்லலாம். வாசிப்பின் மீது அளவற்ற ஈடுபாடும் பற்றும் கொண்டு செயல்படுவதன் மூலமாகக் கிடைக்கும் நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. அவ்வப்போது புதிதுபுதிதாக வெளிவரும் நூல்களை வாசிக்கும்போது எனக்குள் புதிய உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படுகின்றன.
நமக்கான இக்கிகய் என்ன என்பதை இந்த நூல் எனக்கு உணர்த்தியது. வாசிப்பு ஒன்றே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதை நான் நன்கு உணர்ந்த காரணத்தால்தான், ஒவ்வொரு நாளும் வாசிப்பிற்காக என்னால் நேரம் ஒதுக்கி வாசிக்க முடிகிறது. வாசிப்பு என்பது ஒரு வரம். அதை ஒவ்வொரு நாளும் தவறாமல் மேற்கொள்வது எனக்கு உரம். வாசிப்பு என்பது நம் சுவாசம்போல இருந்துவிட்டால், வாசிப்பின் பலன் நம்மை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். - மா. கல்பனா பழனி, பென்னாகரம்