நான் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். என்றாவது மன அமைதி இல்லாமலோ சிறிது ஓய்வு தேவைப்படுவதாக உணர்ந்தாலோ பாடப் புத்தகம் அல்லாத புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிடுவேன். அந்தப் புத்தகத்தை முடித்து விடவேண்டும் என்று மும்முரமாகப் படிப்பேன்.
கல்கியின் பொன்னியின் செல்வனில் இருந்துதான் என் வாசிப்புப் பாதை தொடங்கியது. அனைத்துப் பகுதிகளையும் பள்ளி கோடை விடுமுறை, கல்லுாரிக் காலம், கல்லூரி முடித்தபின் என்று மூன்று வெவ்வேறு பருவங்களில் படித்திருக்கிறேன். இறுதிப் பகுதியை இரண்டாம் முறை, சாப்பிடும்போதுகூடப் புத்தகத்தை மூடாமல் ஒரே நாளில் முழு மூச்சாகப் படித்தது இன்றும் நினைவில் உள்ளது. அருள்மொழிவர்மன் கதாபாத்திரம் எண்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும் கதையில் வரும் காட்சிகள் கண்முன் நிகழ்வது போலத் தோன்றும். சிவகாமியின் சபதத்தின் இறுதி வரிகள் என் கண்களைக் கலங்கவைத்தன. கல்கி, சாண்டில்யன், சுஜாதா எழுதிய நூல்கள், வேள்பாரி, துப்பட்டா போடுங்க தோழி போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை.
படிப்பதற்கும் உண்பதற்கும் செலவு செய்ய யோசிக்கக் கூடாது என்று என் அப்பா சொல்வார். என் அம்மாவும் எனக்குப் புத்தகங்களைப் பரிந்துரைத்துப் படிக்கச் சொல்வார். கல்லூரியில் கிடைத்த பரிசுத்தொகை யையும் புத்தகம் வாங்கவே பயன்படுத்தினேன். தினமும் 5-10 பக்கங்களாவது படித்துவிட வேண்டும் என்று பழக்கம் வைத்துள்ளேன். வாழ்நாளில் நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று குறிக்கோள் வைத்து அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன். - ப.நித்யஸ்ரீ (எ) மீனாட்சி, பெரவள்ளூர், சென்னை.