கீழப்பாவூர் கி.ஸ்ரீமுருகன்
சென்னை மாதவரத்தில் கனகவல்லிநாயகா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மூலவராக ஸ்ரீபெருந் தேவித் தாயாரும், வேங்கட வரதராஜனும் வீற்றிருந்தாலும் உற்சவர் பெயராலேயே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது.
புராண காலத்தின்போது வியாச மகரிஷி உள்பட பல முனிவர்கள் இப்பகுதியில் தவம்புரிந்து இறைவனைக் கண்டு பேரின்பம் பெற்றுள்ளனர். நான்கு வேதங்களைக் கற்றறிந்த அறிஞர்கள் வாழ்ந்ததால் ‘ஏகதீர சதுர்வேதிமங்கலம்’ என்றும், எந்த நேரத்திலும் உச்சரிக்கக் கூடிய பெருமாளின் திருநாமமான ‘மாதவன்’ நாமத்தையே உச்சரித்து இறைவனை வழிபடும் மெய்யன்பர்கள் வாழ்ந்த காரணத்தால் ‘மாதவரம்’ என்றும், மன்னர்கள் காலத்தில் ‘மகாதேவமங்கலம்’ என்றும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்துள்ளது.
முற்காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சிசெய்த இரண்டாம் நந்திவர்மப் பல்லவ அரசன், திக்விஜயம்செய்து இப்பகுதியில் தங்கியிருந்து, கொள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டு, விரட்டியடித்து மக்களைக் காத்துள்ளான். அப்போது வியாசர் உள்ளிட்ட முனிவர்கள் வழிபாடுசெய்த பெருமாளின் விக்கிரகம் பூமிக்குள் புதையுண்டுக் கிடப்பதை அறிந்த இரண்டாம் நந்திவர்மன் அதனை மீட்டு கி.பி. (பொ.ஆ.) 676-ல் கோவில் அமைத்து பெருமாளைப் பிரதிஷ்டைசெய்து வழிபாடு நடத்தியுள்ளான். அதன்பிறகு, சண்டை சச்சரவு இன்றி அமைதி நிலவிய இப்பகுதி, பெருமாளின் அனுக்கிரகத்தால் வேளாண்மைச் சிறப்பும், செல்வச்செழிப்பும் கொண்டு விளங்கியுள்ளது.
இங்குள்ள உற்சவர் கனகவல்லித் தாயார் மகா கருணை வாய்ந்தவர். இவரை வழிபட்டோருக்குத் தடைப்பட்டதெல்லாம் தடைகள் நீங்கி இனிதே நிறைவேறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. காலையில் நீராஞ்சன தீபமேற்றி, கனகவல்லித் தாயாருக்கு மஞ்சள் மாலை சாற்றி வழிபட்டுப் பயன்பெறுகின்றனர்.
திருப்பதியைப் போல் இடக்கரம் கடிகஹஸ்தம் கொண்ட கோலத்தில் இங்குள்ள மூலவர் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருப்பதால் வேங்கடவரதன் என்னும் திருநாமத்தால் அழைக்கப்பெறுகிறார். பீஜாட்சர மந்திரம் பொறிக்கப்பட்டுள்ள சுதர்சனர் - நரசிம்மர் சன்னிதி, தன்வந்திரி பகவான், லக் ஷ்மிஹயக்ரீவர், லக் ஷ்மி வராகர் சன்னிதிகளும் இங்குள்ளன. ஆலய முகப்பில் 21 அடி உயரத்தில் சுதை ரூபத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
1,400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த அபிமானத்தலமான இவ்வாலயத்தில், பாஞ்ச ராத்ர ஆகம விதிப்படியும், ‘எம்பெருமானார் தரிசனம்’ என்று நம்பெருமாளால் பெயர் சூட்டப்பட்ட வழிமுறையிலும் எல்லாப் பூஜைகளும் உற்சவங்களும் நடைபெற்றுவருகின்றன.
தமிழ் வருடப் பிறப்பு, ராமானுஜ ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, வசந்த உற்சவம், அவதார உற்சவம், பெருமாள் ஜேஷ்டாபிஷேகம், ஸ்ரீஜெயந்தி, நவராத்திரி, டோலோற்ஸவம், திருக்கார்த்திகை, நம்மாழ்வார் மோட்சம், பொங்கல் பண்டிகை, தவனோற்சவம், திருமலைபோல் ஒரு நாள் உள்பட 37-க்கும் மேற்பட்ட பண்டிகைகள் இவ்வாலயத்தின் முக்கிய விழாக்கள் ஆகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
30 mins ago
கருத்துப் பேழை
26 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
10 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago