வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டை செய்து, தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோயில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஒரு சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளன. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.
கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோயில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம். கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன – நிலம். கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறது. கல்லில் காற்று இருப்பதால்தான் தேரை கூட உயிர் வாழ்கிறது. ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோயில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.
திருவையாறு ஐயாரப்பன் கோயிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம். இக்காரணங்களால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகளை முறைப்படி செய்யும்போது, ஒரு கோயிலின் பஞ்சபூதத் தன்மை அதிகரிக்கிறது. அக்கோயிலில் நாம் வணங்கும்போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படும்.