நமக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதுபோல, ஒரு நிலத்தின் மண் வளத்தைப் பற்றி அறிந்துகொள்ள மண் பரிசோதனை மிகவும் அவசியம். உரங்களை நிலத்தில் தெளிக்கும்போது நீரில் கரைந்த பிறகே அந்த உரங்களைப் பயிர்கள் எடுத்துக் கொள்ளும். எவ்வளவு உரத்தைப் பயிர்கள் எடுத்தக் கொள்ளும் என்பது அந்த மண்ணின் அமில மற்றும் காரத்தன்மையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது. மண்ணின் அமிலத்தன்மை மற்றும் காரத் தன்மையின் அளவு, அந்த மண்ணில் இருக்கும் அங்கக கரிமங்களின் அளவைப் பொறுத்து அமைகிறது.
நமது மண்ணின் அமிலத்தன்மை, காரத்தன்மை மற்றும் அங்கக கரிமங்களின் அளவை தெரிந்துகொள்ள மண் பரிசோதனை உதவுகிறது. மேலும், பயிரின்வளர்ச்சிக்குத் தேவைப்படும் தழை (N), மணி (P), சாம்பல் (K) ஆகிய பேரூட்டச்சத்துக்கள் மற்றும் கந்தகச் சத்து ஆகியவையும், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, போரான், தாமிரம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களும் நமது மண்ணில் எவ்வளவு இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும். இந்த விவரங்களின் அடிப்படையில் நமது நிலத்துக்கான மண் வள அட்டை, மண் பரிசோதனை நிலையங்களில் இருந்து வழங்கப்படும்.
இந்த அட்டையில் உள்ள விவரங்களைக் கொண்டு, நம் மண்ணில் சேர்க்க வேண்டிய அங்கக் கரிமங்கள் பற்றி வேளாண் நிபுணர்கள் பரிந்துரை செய்வார்கள். நம் நிலத்தில் இருக்கும் பேரூட்டச் சத்துகள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் அளவு தெரிந்து விட்டதால், பற்றாக்குறையாக உள்ள சத்துகளை அதிகப்படுத்தத் தேவையான உரங்களை மட்டும் தூவினால் போதுமானது. இதனால் தேவையற்ற உரங்கள் மண்ணில் தூவுவதைத் தவிர்க்க முடிவதோடு, மண்ணின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.
நிலத்தில் ஓராண்டு, ஈராண்டு, பல்லாண்டு பயிர்கள் சாகுபடி செய்கிறோம். இதில் ஒவ்வொரு வகை சாகுபடிக்கும் ஏற்பதனித்தனி மண் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பரிசோதனை செய்வது அவசியம். இல்லையெனில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது கட்டாயம் மண் பரிசோதனை செய்தாக வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மாவட்டந் தோறும் மண் பரிசோதனை கூடங்களை அமைத்துள்ளன.
மண் பரிசோதனையோடு சேர்த்து, வயலுக்கு பாய்ச்சும் பாசன நீரில் உள்ள அமிலத்தன்மை, காரத்தன்மை மற்றும் பிற அம்சங்களை பரிசோதிப்பதன் மூலம், பாசனத்துக்கு ஏற்ற நீர் பற்றி தெரிந்துகொள்ளலாம். விவசாயிகள் இந்த 2 பரிசோதனைகளையும் செய்து பார்த்து, அதன் முடிவுகளுக்கு ஏற்ப விவசாயம் செய்தால் பொன் விளையும் பூமியைப் பெற முடியும்.
- தொடர்புக்கு: selipm2021@gmail.com