பெண் இன்று

அப்பாவிடம் இருந்து கிடைத்த சொத்து! | வாசிப்பை நேசிப்போம்

செய்திப்பிரிவு

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அப்பாவை அவரது ஓய்வு நேரத்தில் புத்தகமும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன். அப்பா ஆசிரியர் என்பதால் பள்ளி செல்லும் நேரம் தவிர, மற்ற நேரத்திலும் விடுமுறை நாள்களிலும் உள்ளூர் நூலகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்பாவின் அந்த வாசிப்புப் பழக்கமும் தமிழ்ப்பற்றும் எனக்கும் வந்துவிட்டன.

நான் படித்த பள்ளியில் அப்பா தலைமையாசிரியர் என்பதால் சிறுவர் கதைப்புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்து படிப்பேன். அப்பா தமிழாசிரியர் என்பதால் என்னையும் தமிழ் வழியில் படிக்க வைத்தார். நான் பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அப்பா நன்றாகக் கவிதை எழுதுவார். அப்பாவின் கவிதை அன்றைய நாளில் அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற கல்கியின் ‘பீலிவளை’ என்னும் கதையும், கதைமாந்தரும் எனக்கு மிகவும் பிடிக்கும். அக்கதையை நான் மீண்டும் மீண்டும் வாசித்தேன். அது ஒரு அரசக் குடும்பத்தைப் பற்றிய கதை.

நான் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து, வேலைக்குச் சென்று, திருமணம் முடிந்த பிறகும் வாசிப்பதை நிறுத்தவில்லை. நூலகத்திற்குச் சென்று படிக்க முடியாத சூழ்நிலையில் நாளிதழ்களையும் அவற்றின் இணைப்பிதழ்களையும் படிப்பேன். புத்தகக் காட்சிக்குச் செல்லும் போதெல்லாம் நாமும் ஒரு புத்தகக் கடையும் வீட்டிலேயே ஒரு நூலகமும் அமைக்க வேண்டும் என்கிற ஆசை தோன்றும். ஆனால், என் வீட்டில் இடவசதி இல்லாததால் அந்த ஆசை ஏக்கமாகத் தேங்கிவிட்டது.

வீட்டில் நான் அமைக்கும் நூலகத்தைப் பார்க்கும் என் வருங்காலச் சந்ததியினர் தமிழ்ப் பற்றுடனும் வாசிப்பின் மீது ஆசையோடும் என்னைப் போல் அவர்களது சந்ததியினருக்கு இதன் அருமை, பெருமைகளை எடுத்துக் கூற வேண்டும். நூலகம் பற்றிய விழிப்புணர்வைப் பெறவேண்டும். என் கனவும் லட்சியமும் நிறைவேறும் அந்தப் பொன்னாளுக்காகக் காத்திருக்கிறேன். - ச.சங்கீதா, நாமக்கல்.

SCROLL FOR NEXT