ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை அலசுவோம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். இதே தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் துணை கேப்டனாக செயல்படுவாரா என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை. அது குறித்த முடிவை கேப்டன் ரோகித் சர்மா எடுப்பார் எனத் தகவல்.
பயிற்சியாளர் ராகுல் திராவிட் மற்றும் கேப்டன் ரோகித்தின் ஆதரவு ஒருபுறம் இருந்தாலும், இனி வரும் நாட்களில் அது ராகுலுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. ஏனெனில், அணியில் அவரது தேர்வு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என நீள்கிறது.
மோசமான ஃபார்ம்: கடந்த 2022 முதல் நேற்று முடிந்த டெல்லி டெஸ்ட் போட்டி வரையில் ராகுல் மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 11 இன்னிங்ஸ். அதில் முறையே 50, 8, 12, 10, 22, 23, 10, 2, 20, 17, 1 ரன்களை அவர் எடுத்துள்ளார்.
தொடக்க வீரராக களம் இறங்கும் அவர் விரைந்து விக்கெட்டை இழப்பது அணிக்கும் பாதகமாக அமைகிறது. அது தொடர்ந்து பேட் செய்ய வரும் வீரர்களுக்கு தடுமாற்றத்தை கொடுக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுவிட்ட காரணத்தால் இது தெரியவில்லை. ஆனால், இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் நடுவரிசையில் வரும் ஜடேஜா, அக்சர் போன்ற வீரர்களின் பேட்டிங் அதிகம் பேசியது.
ஓய்வு தேவை: அவரது தடுமாற்றம் அவருக்கு ஓய்வு தேவை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது. இந்த ஓய்வின்போது அவர் உள்ளூர் அளவில் டொமஸ்டிக் கிரிக்கெட் மற்றும் கவுன்டி கிரிக்கெட்டில் கவனம் செலுத்தலாம். இதற்கு முன்னர் இது மாதிரியான தடுமாற்றத்தின் போது இந்திய வீரர்கள் அதனை இந்த வழியின் மூலம் கடந்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ராகுல் ஐபிஎல் சீசனுக்கு பதிலாக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடலாம் என வலியுறுத்தி உள்ளார்.
ராகுல் இடத்தை பிடிக்க காத்திருக்கும் கில்: இளம் வீரர் சுப்மன் கில் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். முக்கியமாக தடுமாற்றம் இன்றி ரன் சேர்த்து வருகிறார். வேகம் மற்றும் சுழல் பந்துவீச்சுக்கு எதிரான தனது திறன் மற்றும் மனத்தின்மையை கில் வெளிப்படுத்தி வருகிறார். அஞ்சி அஞ்சி ஆடும் ராகுலை போல இல்லாமல் அஞ்சாமல் ஆடுகிறார் கில். முக்கியமாக கடந்த டிசம்பரில் கில், தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்திருந்தார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஆஸி.க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தத் தொடரில் மேலும் ஒரு வெற்றியை பெற்றாக வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
கல்வி
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago