இந்திய அணியில் இரு கோஷ்டிகள்: கோலி கேம்ப், ரோஹித் சர்மா கேம்ப்- ஆர்.ஸ்ரீதரின் அதிர்ச்சிகர தகவல்

By ஆர்.முத்துக்குமார்

சமூக ஊடகங்களின் வரவினால் உலகில் நட்புகள் உருவாகவும் செய்கின்றன, பல ஆண்டுகால நட்புகளும் துயரத்திலும் முடிந்து விடுகின்றன. இது சாதாரண மனிதர்களுக்கே நிகழ்கிறது எனும்போது சூப்பர் ஸ்டார்களான ரோஹித் சர்மா, விராட் கோலிக்கும் இடையேயான் நட்பிலும் நிகழாதா? அப்படித்தான் நிகழ்ந்தது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் “கோச்சிங் பியாண்ட்” என்ற புதியப் புத்தகத்தில் இந்திய அணியில் கோஷ்டி மோதல் பற்றிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ரவி சாஸ்திரியினால் தான் அந்த கோஷ்டி மனோபாவம் முடித்து வைக்கப்பட்டதாக ஆர்.ஸ்ரீதர் எழுதியுள்ளார். இதுவரை ஆர்.ஸ்ரீதர் எழுதியதில் வெளிவந்ததில் அவர் ரவி சாஸ்திரியின் புகழ்பாடுபவர் என்ற ஒன்று வெளிப்பட்டுள்ளது. ஆனால் அவர் எழுதும் இத்தகைய விஷயங்களில் உண்மை இல்லாமல் இல்லை.

விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் 2008ம் ஆண்டு முதலே இந்திய அணியில் ஆடிவருபவர்கள். இவர்கள் இருவரும் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்பு பெரிய விஷயம், டெஸ்ட் போட்டிகளில் பெரிய ஆட்கள் என்று சொல்வதற்கு இருவரது பங்களிப்புகளும் பெரிய அளவில் போதாது என்பதையும் நாம் கூற வேண்டியுள்ளது.

இருவருக்குமான நட்பில் விரிசல் விழுந்து இந்திய அணியில் விராட் கோலி கேம்ப், ரோஹித் சர்மா கோஷ்டி என்று இரு பிரிவுக்ள் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தருணத்தில்தான். 2021-ல் டி20 உலகக்கோப்பை தோற்ற பிறகு கோலி கேப்டன்சியிலிருந்து விலக வைக்கப்பட்ட தருணத்தில் கோலி-ரோஹித் மோதல் உச்சம் பெற்றது. கோலி கோஷ்டி, ரோஹித் கோஷ்டி என்பதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்றால் ஆமாம் என்கிறார் முன்னாள் பீல்டிங் கோச் ஆர்.ஸ்ரீதர்.

இனி அவர் எழுதியதையே பார்ப்போமே: “2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகே நிறைய செய்திகள் விமர்சனப்பூர்வமாக எழுந்தன. அணியில் ரோஹித் முகாம் கோலி முகாம் என்று இரண்டு பிரிவுகளாக வீரர்கள் கோஷ்டி அமைத்திருப்பதாக எங்களுக்கு செய்தி எட்டியது. சமூக ஊடகத்தில் ஒருவர் இன்னொருவரை பின் தொடர்வதை நிறுத்தி விட்டார் என்பது பெரிய விஷயமாகிக் கொண்டிருந்தது. இந்தப் போக்கை வளரவிட்டால் மோசமாகிவிடும் என்ற நிலைதான்.

உலகக்கோப்பை முடிந்த பிறகு யுஎஸ்-க்குச் சென்றோம் அங்கு மே.இ.தீவுகளுக்கு எதிராக டி20 தொடர். அப்போது ரோஹித்-கோலி மோதலை அறிந்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரையும் தன் அறைக்கு அழைத்து தெளிவு படுத்தினார். அதாவது இந்திய கிரிக்கெட் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ’சமூக ஊடகத்தில் நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.

நீங்கள் இருவரும் மூத்த கிரிக்கெட் வீரர்கள் எனவே இதனை உடனே நீங்கள் நிறுத்த வேண்டும். நீங்கள் இருவரும் இந்த விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு அணியின் முன்னேற்றத்திற்காக இணைந்து செயல்பட வேண்டும் என்று ரவிசாஸ்திரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சாஸ்திரி சமாதானம் செய்யவில்லை எனில் இந்த விவகாரம் நீண்ட கால சேதத்தை ஏற்படுத்தி விடும் என்ற கவலைகள் இருந்தன. சாஸ்திரி இல்லாவிட்டால் நிச்சயம் நிலைமை இப்போது போல் இருந்திருக்காது. ரவி சாஸ்திரியின் தலையீடு மிகவும் உடனடியாக நடந்ததால் விஷயங்கள் தேறின. இருவரையும் அழைத்து நேருக்கு நேர் பேச வைப்பது என்பதில் ரவி சாஸ்திரி நேர விரயம் செய்யவில்லை. இருவருமே இதை உணர்ந்தனர். அணிதான் அனைத்திற்கும் மேலானது என்பதை உணர்ந்தனர், அவர்களிடையேயான உறவும் மேம்பட்டது.

இவ்வாறு எழுதியுள்ளார் ஆர்.ஸ்ரீதர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்