ஒலிம்பிக் நினைவலைகள் - 5: ஒரே ஒருவர் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி!

By மிது கார்த்தி

1908 லண்டன் ஒலிம்பிக்கில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடைபெற்றது. அப்போதெல்லாம் ஓட்டப் பந்தயப் போட்டிகள் மைதானத்தைச் சுற்றி வரும்படி அமைக்கப்படவில்லை. நேராக ஓடி இலக்கை அடைய வேண்டும். அப்படித்தான் தடகளம் 400 மீட்டர் ஓட்டப் பந்தய இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி நடக்கும்போது இங்கிலாந்து வீரர் வெய்ண்டம் ஹால்ஸ்வெலேவை, அமெரிக்க வீரர் ஜான் கார்பெண்டர் முந்தவிடாமல் தள்ளிவிட்டார்.

இதனால் இப்போட்டி சர்ச்சையானது. 'அமெரிக்காவில் தடகளப் போட்டிகளில் விளையாடும்போது, இப்படி நடந்துகொள்வது வழக்கம்தான். அமெரிக்க தடகள விதிப்படி தள்ளிவிட்டது தவறில்லை' என்று கார்பெண்டரும் அவருக்கு ஆதரவாக அமெரிக்கர்களும் வாதம் செய்தனர். ஆனால், 'இங்கிலாந்து தடகள விதிப்படி முந்தவிடாமல் செய்யும் செயல்கள் தவறு' என்று இங்கிலாந்து வீரர் ஹால்ஸ்வெலேவும் அவருக்கு ஆதரவாக இங்கிலாந்து நாட்டினரும் மல்லுக்கட்டினர்.

இரு தரப்பும் விடாமல் மல்லுக்கட்டியதால், இறுதிப் போட்டி மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் போட்டி நடந்தபோது மைதானத்தில் இங்கிலாந்து வீரர் ஹால்ஸ்வெலே மட்டும் போட்டிக்கு வந்திருந்தார். அமெரிக்க வீரர் கார்பெண்டரும் பிற வீரர்களும் வரவில்லை. அவர்கள் அனைவரும் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். என்றாலும் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கியதும் பந்தத்தில் தனி ஒருவனாக ஹால்ஸ்வெலே மட்டும் ஓடத் தொடங்கினார். இலக்கை அடைந்த அவருக்கு தங்கப் பதக்கம் அறிவிக்கப்பட்டது.

அந்தப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் யாருக்குமே வழங்கப்படவில்லை. ஒலிம்பிக் வரலாற்றில் போட்டி ஒன்றில் தனி ஒருவர் மட்டுமே பங்குபெற்ற இறுதிப் போட்டி இதுதான். ஒரே ஒருவருக்கு மட்டும் பதக்கம் வென்ற ஒலிம்பிக்கும் இதுதான். நூற்றாண்டைக் கடந்த பிறகும் ஒலிம்பிக் வரலாற்றில் நிலைத்து நிற்கும் நிகழ்வாக இது பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

12 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்