இந்திய அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதை நம்பாவிட்டால் அஸ்வின், நடராஜனிடமே கேட்டுப் பாருங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐபிஎல் தொடர் நடந்துகொண்டிருந்தபோது சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக நடராஜன் விளையடிக் கொண்டிருந்தார். அப்போது தமிழகத்தில் இருக்கும் அவரின் மனைவிக்குக் குழந்தை பிறந்தது. ஆனால், நடராஜனுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தவுடன், தனது குழந்தையைக் கூட பார்க்காமல் துபாயிலிருந்துபடியே ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியோடு சென்றார்.
இந்திய டி20 அணியில் சிறப்பாகச் செயல்பட்ட நடராஜன் மேட்ச் வின்னராக ஜொலித்தார். டி20, ஒருநாள் தொடர் முடிந்தாலும், இன்னும் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில், பந்துவீச்சுப் பயிற்சியில் நடராஜன் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்காக விடுப்பு எடுத்துக்கொண்டார். அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. அடிலெய்டில் ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கோலி இந்தியாவுக்குப் புறப்பட்டுவிட்டார்.
இதைக் குறிப்பிட்டுத்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தி ஸ்போர்ட் ஸ்டார் இதழில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் நடராஜனுக்கு ஒரு நியாயம், கோலிக்கு ஒரு நியாயமா, அஸ்வின் ஏன் அணியில் ஓரங்கப்பட்டுள்ளார் தெரியுமா என்று பல்வேறு விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''இந்திய அணியின் ஓய்வு அறையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு வீரர் விதிமுறைகளைக் கேட்டு வியப்படைகிறார். மற்றொரு அறிமுக வீரரோ விதிமுறையைப் பற்றியே எந்தவிதமான கருத்தும் இல்லாமல் மவுனமாக இருக்கிறார். அந்த மவுனமாக இருக்கும் வீரர்தான் நடராஜன்.
டி20 போட்டியில் அருமையாகப் பந்துவீசிய இடதுகை வேகப்பந்துவீச்சாளர், யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கலாம். டி20 தொடரில் சிறப்பாக ஆடிய அவரின் ஆட்டத்தைப் பார்த்த ஹர்திக் பாண்டியாவே தனது தொடர் நாயகன் விருதை நடராஜனுடன் பகிர்ந்து கொண்டார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்று முதல் முறையாக நடராஜன் இருந்தபோது அணி ப்ளே ஆஃப் சென்றபோது அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையைப் பார்க்க முடியாமல், ஆஸ்திரேலியாவில் வலைப்பயிற்சியில் பந்துவீச இந்திய அணியுடன் நடராஜன் அழைத்துச் செல்லப்பட்டார்.
கற்பனை செய்து பாருங்கள். நடராஜன் ஆஸி.க்கு எதிரான டி20 தொடரில் ஒரு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் தற்போது வலைப் பயிற்சியில் பந்துவீச அமர்த்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியத் தொடர் முடிந்து, அதாவது ஜனவரி மூன்றாவது வாரத்துக்குப் பின்புதான் நடராஜன் தனது குழந்தையைப் பார்க்க முடியும்.
ஆனால், கேப்டன் விராட் கோலி, தனது மனைவிக்கு முதல் குழந்தை பிறப்பதற்கு முன்பே, முதல் டெஸ்ட் முடிந்தவுடன் விடுப்பு எடுத்து இந்தியா சென்றுவிட்டார்.
ரவிச்சந்திர அஸ்வினை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் சரியாகப் பந்துவீசவில்லை என்பதால் அவர் அணியிலிருந்து ஓரங்கட்டப்படவில்லை. அஸ்வினின் பந்துவீச்சு திறமையைக் காரணம் காட்டி அவரை ஓரங்கட்டுவதற்கு நீண்டகாலமாகும்.
அணி சார்பில் ஏதேனும் கூட்டம், ஆலோசனைக் கூட்டம் ஏதாவது நடந்தால், அதில் பங்கேற்பவர்கள் தங்களுக்கு முரணான கருத்தாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு தலையாட்டிவிடுவார்கள். ஆனால், அஸ்வின் அப்படியில்லாமல் நேர்மையாக தனது மனதில் உள்ளவற்றைப் பேசுவார். நேர்மையாக நடந்து கொள்ளக்கூடியவர்.
அதனால்தான் ஏதாவது ஒரு போட்டியில் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும் நேர்மையால் ஓரங்கட்டப்படுகிறார். ஆனால், வளர்ந்த பேட்ஸ்மேன்களுக்கு இதுபோன்று ஓரங்கட்டப்டுவது நடப்பதில்லை.
இதுதான் இந்திய கிரிக்கெட். வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விதிமுறைகள். நீங்கள் நம்பாவிட்டால், அஸ்வினிடமும், டி.நடராஜனிடமும் கேட்டுப்பாருங்கள்''.
இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
இந்தியா
25 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago