விளையாட்டு

கரோனா தனிமை: மெஜீஷியன் ஆன கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர்

ஐஏஎன்எஸ்

கரோனா வைரஸ் உலகெங்கும் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருவதால் உலகத்தில் விளையாட்டுப் போட்டிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் வீடுகளில் தங்களுக்கேயுரிய வகையில் பொழுதைப் போக்கி வருகின்றனர்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சமூக அன்னியமாதலை அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர் வீட்டில் சிலபல மேஜிக் விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக பிசிசிஐ சனிக்கிழமையன்று 91 விநாடி கால அளவு கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது, இதில் அய்யர் தன் சகோதரி நடாஷாவுடன் சீட்டுக்கட்டு மேஜிக்கில் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

“மெஜீஷியன் ஷ்ரேயஸ் அய்யர் நாம் வீட்டில் அடைந்து கிடக்கும் வேளையில் நம்மை கேளிக்கைக்கு இட்டுச் செல்கிறார், புன்னகையை கொண்டு வந்ததற்கு நன்றி சாம்பியன்” என்று பிசிசிஐ வாசகத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி உட்பட அனைவரும் அரசு வழிமுறைகளை குடிமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

நாளை ஞாயிறன்று பிரதமர் மோடி கோரிக்கைக்கு இணங்க ‘மக்கள் ஊரடங்கு’ காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT