புதுச்சேரி: கேலோ இந்தியா - மல்லர் கம்பம் போட்டியில் முதன்முறையாக வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ஓவியா சாதனை படைத்துள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 6-வது கேலோ இந்தியா-மல்லர் கம்பம் போட்டிகள் ஜன. 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் நிலை மல்லர் கம்பம், தொங்கும் மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் ஆகிய மூன்று விதங்களில் ஆண்கள், தனிநபர், ஒட்டுமொத்த செயல்பாடு என 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 217 பேர் 23 அணிகளாக கலந்து கொண்டனர். அணிப் பிரிவு போட்டிகளில் மகாராஷ்டிரா அணி தங்கமும், தமிழக அணி வெள்ளியும், மத்திய பிரதேச அணி வெண்கலமும் வென்றன.
தனி நபர் ஆண்களுக்கான போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தஷர்துல் வைசாலி ருஷிகேஷ் தங்கமும், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மோனுநேடம் வெள்ளியும், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தேவேந்திர பட்டிதார் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
இதுபோல் தனிநபர் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரிவு போட்டியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ப்ரணலி சகிப்ரா மோர் 16.95 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்து தங்கமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த பாலக் சந்தோஷ் சவுரி 16.90 புள்ளிகள் எடுத்து 2-ம் இடம் பிடித்து வெள்ளியும், புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியா 16.85 புள்ளிகள் எடுத்து 3-ம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
இதன் மூலம் ஓவியா முதன்முறையாக கேலோ இந்தியா-மல்லர் கம்பம் போட்டியில் வெண்கலம் வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது குறித்து ஓவியா கூறுகையில், புதுச்சேரி முருங்க ப்பாக்கத்தில் உள்ள சத்ரிய அகாடமியில் சேர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக மல்லர் கம்பம் பயிற்சி பெற்று வருகிறேன். பயிற்சியாளர் கணேஷ் சிறந்த முறையில் பயிற்சி கொடுத்து வருகிறார். கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்று 0.10 புள்ளிகள் வித்தியாசத்தில்தான் தங்கப் பதக்கத்தை இழந்துள்ளேன். இருப்பினும் புதுச்சேரி மாநிலத்துக்காக முதல் முறையாக பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்ல வேண்டும் என்பது தான் எனது அடுத்த இலக்காக உள்ளது. எனக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளித்த பெற்றோர், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.
பயிற்சியாளர் கணேஷ் கூறும்போது, ஜிம்னாஸ்டிக், மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம், ஏரியல் சில்க் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.
பதக்கம் வென்ற ஓவியா கடந்த 6 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கெனவே உஜ்ஜைனியில் 67-வது பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது. அதில் ஓவியா கலந்து கொண்டார். தற்போது சிறந்த செயல்பாட்டின் காரணமாக கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் தனிநபர் ஒட்டுமொத்த பிரிவில் வெற்றி பெற்றுள்ளார்.
குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கத்தை இழந்தாலும் அவரது வெற்றி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரி பதக்கப் பட்டியலில் கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் ஓவியா வென்றது தான் முதன்முதலில் இடம் பெற்றுள்ளது. ஒருமுறை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் முன்னிலையில் ஓவியா மல்லர் கம்பம்செய்து அசத்தினார். அப்போது ஆளுநர் தமிழிசை ஓவியாவை சுட்டிக்காட்டி பேசி வெகுவாக பாராட்டினார்” என்றார்.
புதுச்சேரி சுதானா நகரைச் சேர்ந்த ராஜா - சவுமியா தம்பதியரின் மகளான ஓவியா, புதுச்சேரியில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வருகிறார். கற்றல் பணிக்கு நடுவே மல்லர்கம்ப பயிற்சியையும் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
க்ரைம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
கல்வி
7 hours ago
தமிழகம்
8 hours ago