குலதெய்வம், இஷ்டதெய்வம், வீட்டு தெய்வ வழிபாடு; சித்ரா பெளர்ணமியில்... தரித்திரம் போக்கும் தயிர்சாதம் தானம்!   

By வி. ராம்ஜி

எல்லா பெளர்ணமியும் விசேஷம்தான்.முக்கியத்துவம் வாய்ந்ததுதான். முக்கியமாக, அமாவாசையில் மகாளய அமாவாசை போல, தை அமாவாசை போல, ஆடி அமாவாசை போல, சித்திரை மாதத்தின் பெளர்ணமி, ரொம்பவே மகத்துவம் வாய்ந்தது.


சித்ரா பெளர்ணமியில், வீட்டில் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையால், வீட்டில் இதுவரை இருந்த கடன் தொல்லையில் இருந்தும் பணக் கஷ்டத்தில் இருந்தும் மீள்வீர்கள். நாளைய தினம் சித்ரா பெளர்ணமி (7.5.2020). வியாழக்கிழமையான குருவார நன்னாளில், வீட்டில் பூஜையிலும் வழிபாட்டிலும் ஈடுபடுங்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சித்ரா பௌர்ணமி எல்லோரும் சிறப்பாக கொண்டாடுகிற வைபவம். இந்த நாளில், ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. கோயிலின் சாந்நித்யமும் சக்தியும் சித்திரை மாதத்தின் பெளர்ணமி நாளில், இன்னும் வீறுகொண்டு வெளிப்படும் என்பதாக ஐதீகம். ஆகவே, அந்தநாளில், கோயிலுக்குச் செல்லும் போது நல்ல அதிர்வலைகள் நம் மீது பட்டு, நம்மை செம்மையுறச் செய்யும் என்பது நம்பிக்கை. ஆனால் தற்போது ஆலயங்கள் திறக்கப்படாத நிலையில், வீட்டுப் பூஜையறையையே ஆலயமாக பாவித்து, நாமே பூஜைகளும் வழிபாடுகளும் செய்வோம். சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு வீரியம் அதிகம்.

சரி... சித்ரா பெளர்ணமி நாளில், வீட்டில் என்ன செய்யவேண்டும்?

‌சி‌த்ரா பௌர்ண‌மி அ‌ன்று அதிகாலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்துவிடுங்கள். முதல்நாளே, இல்லத்தை தூய்மையாக்கி, தண்ணீர் விட்டு, நன்றாகத் துடைத்துவிடுங்கள். அதேபோல், பூஜையறையில் உள்ள சுவாமி படங்களையும் துடைத்து வைத்திருங்கள். பிறகு, சுவாமி படங்களுக்கு, சந்தனம் குங்குமம் இடுங்கள். பூக்களால் அலங்கரியுங்கள்.

சித்ரா பெளர்ணமி நாளில், உங்கள் ‌குலதெய்வத்தை வணங்குங்கள். அதேபோல், உங்களுக்கான இஷ்ட தெய்வத்தை, உகந்த மலர்களைக் கொண்டு அலங்கரியுங்கள்.
அடுத்து, வீட்டு தெய்வம் என்பார்கள். அதாவது, வீட்டில் எவரேனும் கடந்த தலைமுறைகளில், கன்னிப்பெண்ணாகவோ கர்ப்பிணியாகவோ இருந்து இறந்திருப்பார்கள். அவர்களின் படங்கள் இருந்தால், அந்தப் படங்களுக்கும் சந்தனம் குங்குமம் இடுங்கள். மலர்களால் அலங்கரியுங்கள்.

குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வம் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்வதுதான் சித்ரா பெளர்ணமி நாளின் மிக முக்கியமான வழிபாடு. எனவே இந்தநாளில், மறக்காமல் விளக்கேற்றி, இந்தத் தெய்வங்களை வழிபடுங்கள். காலை வழிபாட்டின் போது, சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்யுங்கள். காகத்துக்கு உணவிடுங்கள். அக்கம்பக்கத்தாருக்கு நைவேத்தியப் பிரசாதத்தை வழங்குங்கள்.

அதேபோல், மாலையில் பூஜையறையில் விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகள் கொண்டு விளக்கேற்றுங்கள். மீண்டும், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்யுங்கள். முடிந்தால், குடும்பத்தார் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.


மாலை பூஜையில், பயறு வகைகள் கொண்டு சுண்டல் மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். அப்படியே வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்யுங்கள். மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.


முக்கியமாக, சித்ரா பெளர்ணமியான நாளைய தினம் (7.5.2020) இயலாதவர்களுக்கு தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அன்னதானமாக வழங்குங்கள். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும். இல்லத்தில் இதுவரை இருந்த சண்டை சச்சரவெல்லாம் போய், சந்தோஷமும் குதூகலமும் குடிகொள்ளும். எனவே, முடிந்தவரை, தயிர்சாதம் அன்னதானம் செய்யுங்கள்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்