திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 
ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியையொட்டி லட்சக் கணக்கான பக்தர்கள் நேற்று கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப் பெற்றதாகும். அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று அதிகாலை தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து, ‘மலையே மகேசன்' என போற்றப்படும் திரு அண்ணாமலையை 14 கி.மீ., தொலைவு வலம் வந்து கிரிவலம் சென்றனர்.

அப்போது, ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தப்படி சென்றனர். இதேபோல், அண்டை மாநிலங் களான ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங் களிலும் இருந்தும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இவர்களில், சபரிமலை பக்தர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு செல்லும் செவ்வாடை பக்தர்களும் கணிசமாக இருந்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பக்தர்களின் கிரிவலம் 2-வது நாளாக இன்று காலை வரை நீடித்தது. மேலும், அண்ணாமலையார் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதின. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 4 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர். பவுர்ணமியை யொட்டி சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டன.

SCROLL FOR NEXT