கோடை ஆரம்பிப்பதற்கு முன்னரே வெயில் தகிக்கிறது. பிப்ரவரி மத்தியில் டிசம்பர் மாதக் கடுங் குளிரைக் கொட்டிய இயற்கை, சில நாட்களிலேயே மே மாத அக்கினி வெயிலால் சுட்டெரிக்கிறது.
நீர்நிலைகள் வறண்டுவிட்டன. ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிலையைச் சரியாக்க நாம் என்ன செய்யலாம்?
இந்திய சுற்றுச்சூழலியலாளர் அறக்கட்டளை (EFI) இதற்கான தொடக்கத்தை முன்னெடுத்திருக்கிறது. கடந்த 8 வருடங்களாக சூழலியல் சார்ந்து இயங்கி வரும் இஎஃப்ஐ, தென்னிந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களை மறுசீரமைத்து வருகிறது.
தற்போது தமிழக அரசின் அனுமதியுடன் கோயம்புத்தூரின் கிணத்துக்கடவு பகுதியைச் சுற்றியுள்ள 7 குளங்களைச் சீரமைத்து வருகிறது இஎஃப்ஐ.
அதன் செயல்பாடுகள் குறித்து நிறுவனர் அருணிடம் பேசினோம்.
காட்டம்பட்டி குள சீரமைப்பு
''முதல்கட்டமாக கிணத்துக்கடவு மக்களின் நீராதாரமாகத் திகழும் கோதவாடி குளம் மற்றும் காட்டம்பட்டி குளம் ஆகிய இரண்டு குளங்களும் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளன. சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டம்பட்டி, செங்குட்டை குளத்தில் சீரமைப்புப் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளோம். குளத்தை ஆக்கிரமித்திருந்த செடிகளும் களைகளும் அகற்றப்பட்டுள்ளன.
நீரைத் தேக்கி வைப்பதோடு, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காக நீர்த்தேக்கக் குழிகளை உருவாக்கியுள்ளோம். குளத்தின் கரையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக நீக்கிவிட்டு, மண் திட்டுகளைப் பலப்படுத்தி இருக்கிறோம். குளத்துக்கு வரும் தண்ணீர்ப் பாதைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
மன்றாம்பாளையம் குளம்
அதேபோல மன்றம்பாளையம் குளத்தின் அங்கமான மாரியம்மன் குளத்தை மீட்டுவிட்டோம். அரை ஏக்கர் அளவிலான குளத்தின் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, தூர் வாரப்பட்டுள்ளது. அத்துடன் கரைகள் பலப்படுத்தி இருக்கிறோம். நீர்வழிப் பாதைகளையும் தூய்மையாக்கி உள்ளோம்.
இதேபோல, 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெட்டுவாவி குளத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த வேலைகள் அனைத்தையும் மற்றவர்களின் உதவியுடனே நடத்தி வருகிறோம். பணமாக எங்கும் வாங்குவதில்லை. சீரமைப்பு இயந்திரங்கள், எரிபொருள்களை தனியார் நிறுவனங்கள் வழங்கிவிடுகின்றன. தன்னார்வலர்களின் உதவியுடன் எவ்வித விளம்பரமும் இல்லாமல் குளங்களை மீட்டுவருகிறோம்.
புவியியல் மற்றும் அறிவியல் வகையிலான குள சீரமைப்பை விரும்பும் நபர்கள் களத்துக்கே வந்து பார்வையிடலாம், விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.
ஏரி/ குளங்களைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த அறிவை ஊட்ட தன்னார்வலர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். ஏனெனில் குளங்களை மீட்பது ஒருமுறை நடக்கும் செயல்பாடு. அதைத் தொடர்ந்து பாதுகாக்க அருகில் வசிக்கும் மக்களின் ஆதரவு அவசியம். சனி, ஞாயிறுகளில் தன்னார்வலர்கள் எங்களுடன் இணைந்து இயற்கை அன்னையைப் பசுமையாக்கலாம்'' என்கிறார் அருண்.
தன்னார்வலர்களின் செயல்பாடுகள் என்னென்ன?
1. நீர் மேலாண்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
2. மாணவ, மாணவிகள் தெருக்கூத்து, நாடகங்கள் நடத்துதல்.
3. பொது சுவர்களில் நீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஓவியங்கள் வரைதல்.
4. சீரமைக்கப்பட்ட குளத்தில் தேங்கும் குப்பைகளைச் சேகரித்து அப்புறப்படுத்த மாதாமாதம் குளக் கரைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதல்
5. மழைக் காலங்களில் மரம் வைத்தல்.
ஆர்வத்துடன் இருக்கும் மக்கள் இதில் இணைந்து, நம் ஊருக்கு நம்மால் ஆனதைச் செய்யலாம், புதர் மேடுகளாகவும், கான்கிரீட் காடுகளாகவும் மாறிவிட்ட நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளித்து, அவற்றைப் பாதுகாக்க தன்னார்வலர்கள் தயாரா?
பதிவு செய்ய: info@indiaenvironment.org
தொடர்புக்கு: 9787302646
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago