மார்கழியைத் தொடரும் தை மாதத்தில் தரையும் குளிர்கிறது. வெயில் வறுத்தெடுக்கிற ஊர்களில்கூடச் சில நாட்களில் காலை ஏழு மணிவரையிலும் பனி போர்த்தியபடி இருக்கிறது. குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக அடிக்கடி சாப்பிட வேண்டும் என பலருக்கும் தோன்றும். சிலர் சளி, இருமல் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். இவை அனைத்துக்கும் வீட்டில் உள்ள பொருட்களிலேயே தீர்வு இருக்கிறது என்கிறார் சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சீதா சம்பத். குளிர்காலத் தொற்று நோய்கள் அண்டாமல் இருக்கவும் புத்துணர்வு பெறவும் சாப்பிடக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.
திப்பிலி சூப்
அரிசி திப்பிலி - 8
கண்டந்திப்பிலி - 4
மிளகு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - ஒன்றரை டீஸ்பூன்
மிளகுத் தூள்
- அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை
- சிறிதளவு
இரண்டு வகை திப்பிலி, மிளகு இவற்றை வாணலியில் நெய்விட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் நன்றாகப் பொடித்துக்கொள்ளுங்கள். அதே வாணலியில் தக்காளி, உப்பு சேர்த்து வதக்குங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். திப்பிலியின் வாசனை வந்ததும் கறிவேப்பிலை போட்டு இறக்கிவிடுங்கள். மேலே மிளகுத் தூள் தூவிப் பரிமாறுங்கள்.