பா
டத் திட்டங்களையும் தாண்டி, இயற்கையை நேசிப்பது, பறவைகளை பாதுகாப்பது போன்ற இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான சூழலியல் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பெத்தநாயக்கனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி.
பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து பசுமையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அந்த மரங்களால் கூடிவரும் பலவகைப் பறவைகளின் கீச் சொலி சங்கீதமாகக் கேட்கிறது. காக்கை, ஆள்காட்டி குருவி, புழுதிக் குருவி, மயில், மைனா, சிட்டுக் குருவி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவைகளின் குரல்களை கேட்டபடியேதான் மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளிச் சுற்றுச் சுவர் ஓரத்தில் மாணவர்கள் கொட்டும் மீதமான மதிய உணவை உட்கொண்டு ராகம் பாடித் திரிந்தன பறவைகள். கோடையில் பறவைகளுக்கு நீர் கிடைக்காது. குடிநீர் கிடைக்காமல் இறந்துபோகும் பறவைகளின் எண்ணிக்கையும் இந்தக் காலகட்டத்தில் அதிகரிக்கும். இதையடுத்து சுழற்சி முறையில் பறவைகளுக்கு உதவ ஒரு குழுவை உருவாக்கினர் இப்பள்ளி ஆசிரியர்கள். பாடப்புத்தகங்களோடு தினமும் வீட்டில் இருந்து ஒரு கைப்பிடி அரிசி, கம்பு, சோளம் உள்ளிட்ட தானியங்களை மாணவர்கள் எடுத்து வரத் தொடங்கினர். பின்னர் மரங்களின் கீழ் தட்டுகளில் தானியங்களையும், தண்ணீரையும் வைத்துவிட்டுச் சென்றனர். தினமும் வந்து பழகிய பறவைகள் பசியுடன் ஏமாறக் கூடாது என்பதற்காக தற்போது விடுமுறை நாட்களிலும் மாணவர் குழு இரை பணியை தொடர்கிறது.
பறவைகளின் மீதான பரிவை ஏற்படுத்திய தமிழ் ஆசிரியர் என். பாலமுருகனை சந்தித்தோம்.
“2009-ல் பள்ளி வளாகம் மரங்களின்றி வெறுமையாக இருந்தது. இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களின் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அங்கு நட்டு வளர்த்தோம். இதனால் பறவைகள் வரத்து அதிகரித்தது. தினமும் அவற்றுக்கு இரையும் தண்ணீரும் வைத்து பராமரிக்கிறோம்” என்றார்.