‘ஆந்திர மாநிலத்தில் அரசுப் பணியில் சேர வயது உச்ச வரம்பு 40’ செய்தி படித்தேன். மகிழ்ச்சியான விஷயம். ஆனால், நம் தமிழ்நாட்டுப் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, காத்திருப்போர் ஏராளம். அதிலும் பொதுப்பிரிவு தவிர, மற்ற பிரிவுகளில் உள்ள பிள்ளைகள், அரசுச் சலுகைகள் காரணமாக எப்படியோ பணியில் சேர்ந்துவிடுகிறார்கள்.
முற்படுத்தப்பட்டவர்கள் பிள்ளைகள் படும்பாடு சொல்லி மாளாது. அரசுப் பணி கிடைக்கப் போராடுவார்கள், வேலை கிடைக்காமல் ஓய்ந்து போகும்போது வயதாகிவிடும். இனி, அரசுப் பணிக்குப் போக முடியாது. சரி, தனியாரிடம் கேட்கலாம் என்றால், புதியவர்களுக்கே வாய்ப்பு என்பார்கள். இந்த அவலம் போக்க தமிழக அரசு, ஆந்திர மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் வயது உச்சவரம்பை 40 ஆக உயர்த்துவார்களா என நம் பிள்ளைகள் காத்திருக்கிறார்கள்.
- குருஜி சிவகுமார்,அரூர்.