கடந்த அக்டோபர் 8ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் மின்தூக்கி கட்டுமானப் பணியின்போது நேர்ந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். செப்டம்பர் 30இல் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 40 அடி உயரத்தில் கட்டுமானப் பணியின்போது திடீரென சாரம் சரிந்ததில், ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் ஜூலை 1இல் ஏற்பட்ட விபத்தில் எட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஒரு நாள் முன்னர் தெலங்கானாவில் உள்ள தனியார் வேதிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 40 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இப்படி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியிடங்களில் ஏற்படும் விபத்துகளால் தொழிலாளர்கள் படுகாயமடைவதும் பலியாவதும் தொடர்கதையாக உள்ளது. அமைப்புசாராத் தொழிலாளர்கள் பணியிடத்தில் மரணித்தால் வழக்குகள்கூட பல நேரங்களில் பதிவு செய்யப்படுவதில்லை.
ஏனெனில், அவர்களுக்குச் சட்டரீதியிலான பாதுகாப்பு இல்லை. உலகெங்கிலும் பணியிடங்களில் நிகழக்கூடிய விபத்துகளில் நான்கில் ஒன்று இந்தியாவில் மட்டுமே ஏற்படுகிறது என பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சிலின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பணியிட விபத்துகள் எதனால்? - தொழிலாளர்களை முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் பாதுகாக்கத் தவறுவதுதான் இத்தகைய விபத்துகளுக்கு முதன்மையான காரணம். முறையான பணியிட வடிவமைப்பு, இயந்திரப் பராமரிப்பு, பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட அம்சங்களை முறையாகப் பின்பற்றுதல், அபாயகரமான சூழலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல் போன்றவற்றை நிறுவனங்கள் செய்யத் தவறுகின்றன.
தெலங்கானா வேதி உலை வெடி விபத்தில் அனுமதிக்கப்பட்ட வெப்பநிலையைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதல் வெப்பநிலையில் உலை இயக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்டக் காலாவதியான இயந்திரமாக அது இருந்துள்ளது.
பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. உலை வெடித்துச் சிதறிய நேரத்தில் தொழிற்சாலையின் சுவர் ஏறிக் குதித்து உயிர்தப்பத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். தொழிற்சாலைத் தளத்தில் எந்நேரமும் முதலுதவிக்காக இருந்திருக்க வேண்டிய ஆம்புலன்ஸ் சம்பவ நேரத்தில் அங்கு இல்லை.
விபத்து ஏற்பட்டு ஒரு வார காலத்துக்குப் பிறகும்கூட இதனால் பாதிக்கப்பட்டு ‘காணாமல்’ போனவர்கள் எத்தனை பேர் என்கிற அடிப்படைத் தகவலைக்கூட அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இதிலிருந்து, அந்த வேதி உலையில் விதிமுறைகளுக்குப் புறம்பாகத் தொழிலாளிகள் பணியமர்த்தப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. எண்ணூரில் ஏற்பட்ட சம்பவமும் கிட்டத்தட்ட இதேபோன்றதுதான்.
தொழிற்சாலை விபத்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்பாராமல் நடப்பவை அல்ல என்றே சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. பன்மடங்கு லாப நோக்கில் தொழிலாளர் பாதுகாப்புக்கான செலவினத்தை நிர்வாகங்கள் மிகவும் குறைப்பதன் பின்விளைவுதான் தொழிற்சாலை விபத்துகள்.
‘மனிதப்பிழை’ எனச் சாக்குப்போக்கு சொல்லி இதிலிருந்து நிறுவன உரிமையாளர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். கூடுதல் பணி நேரம், ஓய்வின்மை, கடுமையான வேலைப் பளு, சொற்ப ஊதியத்தினால் கூடுதல் முறைமாற்றுப் பணிகள் (shifts) தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் நிலை ஆகியவையே உண்மைக் காரணிகள்.
தொழிலாளர் நலச் சட்டங்கள்: தொழிற்புரட்சிக் காலம் தொட்டே பாதுகாப்பான பணியிட வசதி கோரித் தொழிலாளர்கள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்தியாவின் முதல் தொழிற்சாலைச் சட்டம் 1881இல் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு தொழிற்சாலைச் சட்டம் 1948 தொழிலாளர் பாதுகாப்புக்குச் சீரான அடித்தளமிட்டது.
இதன்படி கண்ணியமான பணிச்சூழலுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய தொழிற்சாலை உரிமம், இயந்திரப் பராமரிப்பு, பணிநேரம், இடைவேளை, பணியிட உணவகம், மழலையர் காப்பகம் முதலான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன. காலச்சூழலுக்கு ஏற்ப இரு முறை சட்டத்திருத்தங்களும் இதில் கொண்டுவரப்பட்டன. இதில் 1976இல் முதல் திருத்தமும், போபால் விஷவாயுக் கசிவு பேரழிவுக்குப் பிறகு 1987இல் இரண்டாம் சட்டத்திருத்தமும் நிறைவேற்றப்பட்டன.
இதுபோன்ற சட்டதிட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை முழுமையாக மீட்டுத் தந்துவிட்டன எனச் சொல்வதற்கில்லை. இருப்பினும், தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களான தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகள் பறிக்கப்படும்போது, புகார் அளிக்கவும் முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் இந்தச் சட்டம் கைகொடுத்தது. ஆனாலும், வரலாற்றின் கறுப்புப் பக்கமான போபால் பேரழிவு, தொழிலாளர் சட்டத்தின் ஓட்டைகளை அம்பலமாக்கியது.
சோதனை நடத்தி உண்மை அறிய வந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் விதிமீறல்கள் நிகழ்ந்ததைக் கண்டுகொள்ளவில்லை. லஞ்சம் பெற்றுக்கொண்டு, பொய்த் தரவுகள் அடங்கிய, உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டனர். பணியிடத்தில் காயமடைந்தவர்கள், மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு வாழ்நாள் ஊதியம் வரையிலான இழப்பீடுகளை வழங்க வேண்டும் எனத் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் (1923), ஊழியர்களுக்கான மாநிலக் காப்பீட்டுச் சட்டம் (1948) ஆகியவை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால், நடைமுறையில் இவை அரிதாகவே கடைப்பிடிக்கப்படுகின்றன.
இவை தவிர, நடந்த சம்பவத்துக்கு நிறுவன உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கிற நிபந்தனையை இதுபோன்ற சட்டங்கள் விதிக்கவே இல்லை. ஒருவேளை, இத்தகைய சம்பவங்கள் ஊடக வெளிச்சத்துக்கு வரும்பட்சத்தில், பொது நிதியிலிருந்து அரசுகளே இழப்பீடுகளை வழங்கிவருகின்றன.
இன்றைய சூழ்நிலை: 90களிலிருந்து தொழிலாளர் பாதுகாப்பு நீர்த்துப்போக வைக்கப்பட்டுவருகிறது. தொழிலாளர்களைப் பணியில் நியமித்தல், பணிநீக்கம் செய்தல், உழைப்பைக் கண்மூடித்தனமாகப் பெறுதல் முதலானவற்றில் தங்களுக்கு ‘நெகிழ்வுத்தன்மை’ அவசியம் என நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன.
இதற்கு வளைந்து கொடுக்கும் அரசுகள் அமலில் உள்ள சட்டங்கள், விதிமுறைகளில் சமரசம் செய்துகொள்ளும் போக்கு நிலவுகிறது. பாதுகாப்பு விதிமுறைகளைத் தொழில் நிறுவனங்கள் பின்பற்றும்படி நிர்ப்பந்திப்பதே வணிகத்துக்குப் போடும் முட்டுக்கட்டை என்னும் பொதுக்கருத்து ஏற்படுத்தப்படுகிறது.
தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலன், வேலை நிலைமைகள் குறியீடு, 2020 (OSHWC) நடைமுறைக்கு வரும்பட்சத்தில் தொழிற்சாலைச் சட்டம் முழுவதுமாகக் காலாவதியாகிவிடும். ஒரு காலத்தில் தொழிலாளரின் உரிமையாக இருந்தவை, இனிமேல் அரசின் கரிசனமாக மாறிப்போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.