செப்டம்பர் 19ஆம் நாள் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு தொடர்பான செய்திக்கு ஊடகங்கள் பலவாறாகத் தலைப்பிட்டன. அவற்றுள் சில, ‘இந்தியர்கள் மீது இறங்கிய இடி’, ‘அடைக்கப்படுகிறது அமெரிக்கக் கதவு’, ‘டிரம்ப் வீசிய அணுகுண்டு’ என்கிற ரீதியில் இருந்தன.
குழப்பமும் தெளிவும் ‘ஹெச்1பி’ விசா கட்டணத்தை 2,000 டாலரிலிருந்து ஒரு லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) உயர்த்தினார் டிரம்ப். விண்ணப்பிக்கும்போது மட்டும் செலுத்த வேண்டுமா அல்லது ஆண்டுதோறும் செலுத்த வேண்டுமா என்பது அறிவிப்பில் தெளிவாக இல்லை.
புதிய கட்டணம் இரண்டு நாள்களில் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்க வாழ் ‘ஹெச்1பி இந்தியர்’களைப் பரபரப்பு சூழ்ந்தது. விடுமுறைக்காக இந்தியா வந்திருந்த பலர், கிடைத்த விமானத்தைப் பிடித்து அவசரமாக அமெரிக்கா திரும்பினார்கள்.
அடுத்த இரண்டு நாள்களில், புதிதாக ‘ஹெச்1பி’ விசாவுக்கு விண்ணப்பிப்போர் மட்டும் ஒரு லட்சம் டாலர் கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது என்றது வெள்ளை மாளிகை. ஏற்கெனவே, ‘ஹெச்1பி’ விசாவில் பணியாற்றுவோரை இது பாதிக்காது. பலருக்கு நிம்மதி. ஆனாலும் இது இந்தியாவுக்குப் பாரதூரமான பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது.
அமெரிக்கக் கனவின் வழித்தடம்: ‘ஹெச்1பி’ விசா என்னும் ஏற்பாடு 1990இல் தொடங்கியது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (Science, Technology, Engineering, Mathematical - STEM) ஆகிய துறைகளில் திறன்மிக்க அயல் நாட்டவரை, அமெரிக்க நிறுவனங்கள் பணி அமர்த்திக்கொள்ள - உள்நாட்டில் நிலவிய திறன் பற்றாக்குறையை ஈடுசெய்ய - இது உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 85,000 பேருக்கு இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன. ‘ஹெச்1பி’ விசா, மூன்று ஆண்டுகளுக்குத் தற்காலிக வசிப்புரிமை (temporary residency) வழங்கும். மேலும், மூன்று ஆண்டுகளுக்கு விசாவை நீட்டிக்கக் கோரலாம்.
அடுத்த கட்டம், பச்சை அட்டை (green card). இது நிரந்தர வசிப்புரிமையை வழங்கும். இதற்கு ஊழியர்களின் சார்பாக அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட ‘ஹெச்1பி’ ஊழியருக்கு இணையான உள்நாட்டுப் பணியாளர் சந்தையில் கிடைக்கவில்லை என்று நிறுவ வேண்டும். பச்சை அட்டை பெற்றவர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களை மாற்றிக்கொள்ள முடியும்; தொழிலும் தொடங்கலாம்.
ஐந்தாண்டுக் காலம் பச்சை அட்டை தாங்கியவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். குடியுரிமை என்பது நவீன உள்கட்டமைப்பும் சட்டத்தின் மாட்சிமையும் பேணப்படுகிற ஒரு நாட்டில் வாழும் உரிமை. குடியுரிமையுடன் அமெரிக்கக் கடவுச் சீட்டும்வரும்.
அது 180 நாடுகளின் விசா இல்லாமல் கதவுகளைத் திறக்கும். குடியுரிமையானது வாக்குரிமை, ஓய்வூதியம் தரும்; பிள்ளைகளுக்கும் குடியுரிமை, கல்வி தரும். இதற்கான வாயிற்கதவுதான் ‘ஹெச்1பி’ விசா. 2024ஆம் ஆண்டுக் கணக்கின்படி, தற்சமயம் 7.3 லட்சம் இந்தியர்கள் ‘ஹெச்1பி’ விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். இது மொத்த ‘ஹெச்1பி’ விசாவில் 71%.
அமெரிக்காவில் அமைந்திருக்கும் ‘டி.சி.எஸ்’, ‘காக்னிசன்ட்’, ‘இன்போசிஸ்’ முதலான இந்திய நிறுவனங்களில் கணிசமான ‘ஹெச்1பி’ இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களைவிட அமேசான், மைக்ரோசாப்ட், மெட்டா முதலான அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம். கடந்த 30 ஆண்டுகளில் இந்த ‘ஹெச்1பி’ வழித்தடம் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியிருக்கிறது. இவர்களால் இந்தியாவுக்கும் பலன்; அமெரிக்காவுக்கும் பலன்.
என்ன பிரச்சினை? - ‘அமெரிக்கக் குடிமக்களின் வேலைவாய்ப்பை அயல்நாட்டவர் பறிக்கிறார்கள். இதைத் தடுப்பதற்குத்தான் இந்தக் கட்டண உயர்வு’ என்கிறது டிரம்ப்பின் புதிய அறிவிப்பு. சில நிறுவனங்கள் அமெரிக்கப் பணியாளர்களை நீக்கிவிட்டு, குறைந்த ஊதியத்தில் அயல்நாட்டினரை நியமித்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
‘ஹெச்1பி’ விசாவில் பணியாற்றிவரும் இந்தியர்களில் 60%க்கும் மேற்பட்டோர் பெறும் ஆண்டு ஊதியம் ஒரு லட்சம் டாலரைவிடக் குறைவு. இவர்களைப் பணியமர்த்த ஓராண்டு ஊதியத்துக்கும் மேலான தொகையைக் கட்டணமாகச் செலுத்த எந்த நிறுவனமும் முன்வராது.
இதில் அதிகமும் பாதிக்கப்படப்போவது அமெரிக்காவில் ஸ்டெம் துறைகளில் படித்து, ஹெச்1பி வரிசையில் இணையக் காத்திருக்கும் இளைஞர்கள்தான். இவர்கள் இந்தியாவில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றவர்கள். கடன் வாங்கியோ, பெற்றோரின் சேமிப்பைப் பெற்றோ, பெருந்தொகையான கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்தியவர்கள். மூன்றாண்டுகள்வரை களப்பயிற்சி (optional practical training-OPT) மேற்கொள்பவர்கள். இந்த அதீதக் கட்டணம் அமலில் இருக்கும்வரை இவர்களின் அமெரிக்கக் கனவு எளிதில் நனவாகாது.
என்ன செய்யலாம்? - இது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்டமல்ல; இதை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்று சிலர் நம்புகிறார்கள். இன்னும் சிலர், திறன் மிகுந்தவர்களுக்கு விதிவிலக்கு இருக்கிறது; பெரிய நிறுவனங்கள் இதைப் பயன்படுத்தும்; அப்படியாகச் சிலருக்கு விசா கிடைக்கும் என்கிறார்கள்.
“இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதைத்தானே தடை செய்ய முடியும்? அமெரிக்கக் கணினி நிறுவனங்கள் தங்கள் பணிகளை இந்தியாவில் சகாயமாகச் செய்துகொள்ளலாமே?” என்று சிலர் சொல்கிறார்கள். ஏற்கெனவே, இது இந்தியாவில் பெரிய அளவில் நடந்துவருகிறது. இது இன்னும் விரிவாக்கப்படலாம் என்பதுதான் ஆலோசனை.
ஆனால், இந்த வணிகத்துக்கு எதிராகக் குடியரசுக் கட்சியின் செனட்டர் பெர்னி மொரேனோ என்பவர் HIRE (Halting International Relocation of Employment) என்னும் மசோதாவைத் தாக்கல்செய்திருக்கிறார். இதன்படி அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்டு, அயல்நாடுகளில் சேவைபெறும் நிறுவனங்கள், இதற்காக அயல்நாட்டு நிறுவனங்களுக்குச் செலுத்தும் கட்டணத்தின் 25% தொகையை அமெரிக்க அரசுக்குச் சுங்க வரியாகச் செலுத்த வேண்டும். இதற்கும் சேர்த்து வருமான வரி கட்ட வேண்டும். இப்படிக் கருமேகங்கள் சூழ்ந்துதான் இருக்கின்றன.
மேற்கு நாடுகளிலும் ஜப்பான், தென் கொரியா முதலிய கீழை நாடுகளிலும் ஸ்டெம் விற்பன்னர்களுக்குத் தேவை இருக்கிறது. இது இடைக்கால நிவாரணம். நமது திறனாளர்கள் ஏன் அமெரிக்கா போக வேண்டும், அவர்கள் ஏன் இந்தியாவிலேயே பணியாற்றக் கூடாது - இப்படிச் சிலர் கேட்கிறார்கள். நிச்சயமாகச் செய்யலாம்.
ஆனால், அதற்கேற்றாற்போல் நமது கல்விப் புலத்தையும் ஆய்வுப் புலத்தையும் வளப்படுத்த வேண்டும். ஆழ்கற்றல் (deep learning) தொழில்நுட்பம் நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), செமி கண்டக்டர் என்று அதன் வீச்சு பெரிது. இந்தியாவில் அதை இனியேனும் நிகழ்த்த வேண்டும். சீரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு, போதிய நிதியும் ஒதுக்கப்பட்டால், இந்தத் துறைகளில் நமது இளைஞர்கள் சாதிப்பார்கள். அவர்களின் கனவு இந்தியாவிலேயே மெய்ப்படும்.
- தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com