திரைப்படத் துறையில் சாதனைக்குரிய பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருதை மோகன்லால் பெற்றிருக்கிறார். மலையாளத் திரைப்படக் கலைஞர் ஒருவர் இந்த விருதைப் பெறுவது இது இரண்டாவது முறை. 2004இல் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டது.
இரண்டு முறையும் விருதுகள் ஏகோபித்த ஆமோதிப்புக்கு உரியனவாக இருந்தன. மோகன்லாலுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது மலையாளத் திரையுலகின் பெரும் கொண்டாட்டத்துக்கும் காரணமாகி இருக்கிறது. எளிய ரசிகர்கள் முதல் கறாரான விமர்சகர்கள்வரை அனைத்துத் தரப்பினராலும் மகிழ்வுடன் வரவேற்கப்படுகிறது.
நடிப்பின் அற்புதம்: மோகன்லால் ஏறத்தாழ அரை நூற்றாண்டாக மலையாளத் திரையுலகில் செயல்பட்டுவருகிறார். 400 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை மலையாளப் படங்கள். பிற தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பைத் தவிர்த்து சினிமாவின் பிற துறைகளிலும் பங்களித்திருக்கிறார்.
எனினும் நடிப்பே அவரது முதன்மையான ஈடுபாடு. 1978இல் 18 வயதில் நண்பர்களின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட ‘திரைநோட்டம்’ படம் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமான மோகன்லால், தனது நடிப்புக் காலம் முழுவதும் அயராது உழைத்திருக்கிறார்.
பார்வையாளருக்கு நடிப்பில் ஏமாற்றம் அளிக்காத கலைஞர் என்கிற பெயரையும் நிலைநிறுத்தியிருக்கிறார். இந்த அர்ப்பணிப்பும் நம்பகத்தன்மையுமே அவரை மலையாள சினிமாவின் தவிர்க்கவியலாத நடிகர் ஆக்கியிருக்கின்றன; ‘நடன விஸ்மயம்’ (நடிப்பின் அற்புதம்) என்று பாராட்ட வைத்திருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் கலை நிகழ்வு மோகன்லால். மலையாளத் திரைப்படங்கள் இந்திய அளவிலும் உலக அளவிலும் கவனத்துக்கு உரியவையாக மாறிவந்த கடந்த நூற்றாண்டின் 70களில் அவரது திரை நுழைவு நிகழ்ந்தது. அந்தத் திசைதிருப்பக் கட்டத்தில், மலையாளத்தில் யதார்த்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் சீரிய கலைப் படங்கள் உருவாகி, சர்வதேசப் புகழ்பெற்றன. ஆட்டம், பாட்டு, அடிதடி, உருக்கம், நகைச்சுவை என்ற வெகுமக்கள் சினிமா சூத்திரங்களுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட படங்களும் எடுக்கப்பட்டன. அதேவேளையில், இரண்டு போக்குகளும் இணைந்த இன்னொரு வகைப் படங்களும் உருவாயின.
ஓரளவு கலைத்தன்மையும் நடைமுறைச் சித்தரிப்பும் கொண்ட அதேநேரம், ரசனைக்கேற்ற கேளிக்கை அம்சங்களும் சேர்ந்த ‘இடைநிலைத் திரைப்படங்கள்’ (middle cinemas) வெளியாயின. பரதன், பத்மராஜன், வேணு நாகவள்ளி, மோகன், சத்தியன் அந்திக்காடு போன்ற இயக்குநர்கள் இடைநிலைப் படங்களை நோக்கிக் கணிசமான பார்வையாளர்களை ஈர்த்தார்கள். மோகன்லாலை ஒரு நடிகராக அறியவைத்தவை பெரும்பாலும் இந்த வகையிலான படங்களே. சினிமா ஒரு கலைவடிவம் என்பதோடு, பொழுதுபோக்கு ஊடகம் என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொண்ட நடிகராக மோகன்லால் தன்னை உருவாக்கிக்கொண்டார்.
முழுமையான நடிகர்: எல்லாருக்கும் அறிமுகமான நடிகராக மோகன்லால் கவனம் பெற்ற படம் ‘மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள்’. அதில் அவருக்கு எதிர்நாயகப் பாத்திரம். தொடர்ந்தும் அதே மாதிரியான பாத்திரங்களே அவருக்கு அளிக்கப்பட்டன. அந்த வாய்ப்புகளைத் திறம்படப் பயன்படுத்தித் தன்னை முக்கியமான நடிகராக நிறுவினார்.
அதேநேரத்தில், இடைநிலைப் படங்களிலும் நடித்துத் தனித்துவத்தை உருவாக்கிக்கொண்டார். வெகுமக்கள் ரசனைக்கான படங்களில் நடித்துத் தன்னை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திக்கொண்ட அதேவேளை, எந்தக் கதாபாத்திரத்தையும் அநாயாசமாக ஏற்றுக்கொள்பவராகவும் இருந்தார். முழுமையான நடிகர் (The Complete Actor) என்று அவர் மதிக்கப்படுவதன் பின்னணி இதுதான்.
ஒரு நடிகரின் உடலே கேளிக்கை ஊடகம்தான். அதன் வழியாக வெளிப்படுத்தப்படும் கதாபாத்திரங்கள்தாம் ரசிகர்களை ஈர்க்கின்றன. அதுவே வணிக வெற்றிக்கும் கலைப் பெறுமதிக்கும் கருவியாகின்றன. இதைத் துல்லியமாக உணர்ந்தவர் மோகன்லால்.
அதனால்தான் அவரால் ‘நரசிம்மம்’, ‘புலி முருகன்’, ‘லூசிஃபர்’ போன்ற மசாலாப் படங்களில் அதிசாகச நாயகனாகவும், ‘தன்மாத்ர’, ‘பிரணயம்’ போன்ற இடைநிலைப் படங்களில் சாதாரண மனிதராகவும், ‘வானப்ரஸ்தம்’, ‘வாஸ்துஹாரா’ முதலான கலைப்படங்களில் சீரிய நிகழ்த்துநராகவும் பங்களிக்க முடிந்தது. இவை எதிலும் அவரது நடிப்பு சோடை போனதில்லை.
அந்தந்தப் படங்களின் தேவைக்கேற்ற பரிமாணத்தில், தனது நடிப்பை வடிவமைத்திருக்கிறார். எல்லா வகையான இயக்குநர்களின் விருப்பத் தேர்வாகவும் இருந்துவருகிறார். மலையாள சினிமாவின் முதல் நட்சத்திர நடிகராகக் கருதப்படும் திக்குரிசி சுகுமாரன் நாயர் முதல் மோகன்லால் வரையிலான நடிகர்கள் ஒரு பொது இலக்கணத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லலாம். தாங்கள் முதன்மையாக நடிகர்கள்; நட்சத்திரங்கள் அல்லர் என்கிற இயல்புணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கதைச் சூழலில் ஒரு மனிதன் என்னென்ன செய்கைகளை மேற்கொள்வானோ, அதை வெளிப்படுத்துவதே நடிப்பு என்கிற போதத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதை மீறியவகையில் நடிப்பை வெளிப்படுத்தவும், அதன் மூலம் நட்சத்திரத் தகுதியை அடையவும் செய்திருக்கிறார்கள். இருப்பினும் முன் சொன்ன இலக்கணத்தை அநேகமாகக் கைவிட்டதில்லை.
மோகன்லாலுக்கும் இது பொருந்தும். சினிமாவுக்குரிய சூத்திரத்தின்படி வார்க்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்கும்போதும், அதில் இயல்பான நடத்தை வெளிப்படுமாறு நடிக்கிறார். ‘சாகர் ஏலியாஸ் ஜாக்கி: ரீலோடட்’ படத்தில் அவருக்கு அதிசாகசமான பாத்திரம். ஆனால், அதிலும் எதார்த்தமான மனிதச் செய்கைகளுக்குத் தனது நடிப்பில் முன்னுரிமை அளிக்கிறார்.
தனக்குள் இருந்து கதாபாத்திரத்தை உருவாக்குவது என்பதைவிடவும், ஒரு கதாபாத்திரத்தில் தன்னைப் புகுத்தி கதாபாத்திரக் குணத்தை வெளிக்கொணர்வதையே மோகன்லால் தனது நடிப்புத் திறனாக வெளிப்படுத்துகிறார். இதுவே அவரது நடிப்பைத் தனித்துக் காட்டுகிறது.
நேர்காணல் ஒன்றில் அவர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்: “எனக்கு நடனமாடத் தெரியாது. ஆனால் ‘கமலதளம்’ படத்தில் நாட்டியக் கலைஞராக நடித்திருக்கிறேன். நான் கதகளி பயின்றவன் அல்ல. ‘வானப்ரஸ்த’த்தில் கதகளிக் கலைஞராக நடித்திருக்கிறேன்.
யேசுதாசைப் போன்ற தேர்ந்த பாடகர் அல்ல நான். ஆனால், ‘பரதத்’தில் சங்கீதக்காரன்.” இந்தப் படங்களில் நாம் பார்ப்பது நடிகரை அல்ல. அந்தந்தக் கதாபாத்திரங்களையே. அந்த அளவுக்கு நடிப்பைத் துறந்த தன்வயப்பட்ட நடிப்பு அவருடையது. ‘திருஷ்யம்’ படத்தில் நாம் பார்ப்பது மோகன்லால் என்கிற நடிகரை அல்ல; ஜார்ஜ் குட்டி என்கிற கதாபாத்திரத்தைத்தான். சமீபத்திய ‘துடரும்’ படத்தில் நாம் பார்ப்பது டாக்சி ஓட்டுநர் சண்முகத்தைத்தான். இந்தக் கூடுவிட்டுக் கூடும் பாயும் மாயமே இந்திய சினிமாவின் மகத்தான நடிகர்கள் வரிசையில் அவரைக் குறிப்பிட வைக்கிறது.
ஏறத்தாழ 400 படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். அவற்றில் கணிசமான படங்களில் அவர் நடிப்பு மெச்சத்தகுந்தது என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவருடைய நடிப்புப் பாணி இயற்கையானது. எந்த விதமான கதாபாத்திரத்தையும் தன்னால் ஏற்று நடிக்க முடியும் என்று தன் நீண்ட நடிப்புக் காலத்தில் நிரூபித்திருக்கிறார்.
ஒரே பிறவியில் நூற்றுக்கணக்கான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் நல்வாய்ப்பு ஒரு நடிகருக்கு எளிதில் கிடைக்கிறது. சில நடிகர்களே அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக வெளிப்படுத்துகிறார்கள். அதை அனுபவித்து உணர்ந்திருக்கும் நடிகர் மோகன்லால். “நடிப்பு என்பது என் ஆன்மாவின் துடிப்பு” என்று தாதா சாகேப் பால்கே விருது ஏற்புரையில் அவர் குறிப்பிட்டார். அது வெறும் மேடைச் சொல் அல்ல... அனுபவத்திலிருந்து அந்தக் கலைஞர் அளிக்கும் வாக்குமூலம்.
- தொடர்புக்கு: nsukumaran@gmail.com