சிறப்புக் கட்டுரைகள்

கல்விச் செலவில் நீடிக்கும் பாலினச் சமத்துவமின்மை | சொல்... பொருள்... தெளிவு

ம.சுசித்ரா

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியப் பள்ளிக்கூடங்களில் படித்துவரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய தேதியில் இந்தியப் பள்ளிக்கூடங்களில் கல்வி பெற்றுவரும் மாணாக்கர்களில் 48% மாணவிகள். அதிலும் உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் மாணவிகளின் மொத்தச் சேர்க்கை விகிதம் மாணவர்களைக் காட்டிலும் சற்றே கூடியிருக்கிறது.

இருப்​பினும், பெண் கல்வி என்னும் கோணத்தில் அணுகும்போது இன்றளவும் பாலின இடைவெளி மறைமுகமாக இந்தியக் குடும்பங்​களால் கட்டிக்​காக்​கப்​படு​கிறது. மகள்களின் கல்விக்குச் செலவழிப்​பதைக் காட்டிலும் மகன்களுக்கே அதிகம் நிதி ஒதுக்கும் வழக்கம் நம் சமூகத்தில் வாழையடி வாழையாகப் பின்பற்​றப்​பட்டுவருவதைத் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு சுட்டிக்​காட்டு​கிறது.

கல்வியில் பாகுபாடு: 80ஆவது தேசிய மாதிரி ஆய்வின் ஒரு பகுதி​யாகக் கடந்த ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை சேகரிக்​கப்பட்ட புள்ளி​விவரங்​களின் அடிப்​படை​யில், விரிவான கூறுநிலை சார்ந்த கல்வி ஆய்வறிக்கை (Comprehensive Modular Survey on education) அண்மையில் வெளிவந்தது.

இதில் பள்ளிக் கல்வியின் அனைத்துக் கட்டங்​களிலும் ஆண் குழந்தை​களுக்கு இந்தியக் குடும்​பங்​களால் ஒதுக்​கப்​படும் செலவினத்தைக் காட்டிலும் பெண் குழந்தை​களுக்குக் குறைவாக இருப்பது உறுதி​செய்​யப்​பட்​டிருக்​கிறது. தொடக்கப் பள்ளிக் காலத்தில் தொடங்கி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை இந்தப் போக்கு தொடர்​வதைக் காண முடிகிறது.

அதிலும் நகரங்​களைக் காட்டிலும் கிராமங்​களில் இத்தகைய பாகுபாடு கூடுதலாகவே நீடித்து​வரு​கிறது. நாட்டின் 2,384 கிராமங்கள், 1,982 நகர்ப்புறத் தொகுதி​களைச் சேர்ந்த 52,085 குடும்​பங்​களிடம் நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் 57,742 மாணவ, மாணவி​களிடம் தகவல்கள் சேகரிக்​கப்​பட்டன.

இதில் கிராமப்புறப் பகுதி​களைச் சேர்ந்த குடும்​பங்கள் பள்ளிக்​கூடக் கட்டணம், பாடப்புத்​தகம், எழுதுபொருள்கள், சீருடை, போக்கு​வரத்து வசதி என வரும்​போது, பெண் குழந்தை​களுக்குச் செலவிடு​வதைக் காட்டிலும் 18% (ரூ.1,373) கூடுதலாக ஆண் குழந்தை​களுக்குச் செலவிடுவது தெரிய​வந்துள்ளது. நகர்ப்பு​றங்​களைப் பொறுத்​தமட்டில் ஆண் குழந்தை​களுக்கு 30% வரை கூடுதலாகக் கல்வி நிதி ஒதுக்​கப்​படு​கிறது.

அதாவது, நகர்ப்புறப் பெண் குழந்தை​களுக்கு ரூ.2,791வரை ஆண் பிள்ளை​களைக் காட்டிலும் குறைவாகவே செலவிடப்​படு​கிறது. பள்ளி தொடர்பான இதர செலவு​களைத் தவிர்த்து​விட்டு, கல்விக் கட்டணத்தை மட்டுமே எடுத்​துக்​கொண்​டால், தேசிய அளவில் மாணவி​களைக் காட்டிலும் மாணவர்​களுக்கு 21.5% கூடுதல் நிதி அந்தந்தக் குடும்​பங்​களால் செலவிடப்​படு​கிறது.

தங்கள் குழந்தைகள் எந்தப் பள்ளிக்​கூடத்தில் படிக்க வேண்டும் என்பதைத் தெரிவு செய்​வ​திலேயே இத்தகைய பாரபட்சம் தொடங்கி​விடு​கிறது. அதீதக் கட்டணம் வசூலிக்கும் செலவுமிகுந்த தனியார் பள்ளிக்​கூடங்​களில் 29.5% பெண் குழந்தைகளே சேர்க்​கப்​படும் நிலையில், 34% ஆண் குழந்தைகள் இத்தகைய பள்ளி​களில் சேர்க்​கப்​படு​கின்​றனர்.

பள்ளிக்​கூடங்​களைத் தாண்டித் தனி வகுப்பு​களுக்குக் கட்டணம் செலுத்தித் தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்பு​வ​திலும் இதேரீதியிலான பாலின ஏற்றத்​தாழ்வு நீடிக்​கிறது. தனி வகுப்பு​களுக்குப் பெற்றோரால் 27.8% ஆண் குழந்தைகள் அனுப்​பப்​படும் அதேவேளை​யில், 26% பெண் குழந்தைகள் மட்டுமே அனுப்​பப்​படு​கின்​றனர்.

அதிலும் மேல்நிலை வகுப்பு​களில் பயிலும் குழந்தை​களுக்கு அதிகக் கட்டணம் செலுத்தித் தனிவகுப்பு​களுக்கு அனுப்புதல் என வரும்​போது, பெண் குழந்தை​களைக் காட்டிலும் ஆண் குழந்தை​களுக்கு 22% கூடுதலாகச் செலவிடப்​படு​கிறது.

மாநில வாரியான நிலவரம்: பாலின இடைவெளி தேசிய அளவிலான சிக்கலாக இருந்த​போ​திலும் மாநில வாரியாக அதில் மாறுபாடுகள் காணப்​படு​கின்றன. உதாரணமாக, மகன், மகளைச் சேர்ப்பது அரசுப் பள்ளியிலா அல்லது தனியார் பள்ளியிலா எனும்போது டெல்லியில் 54% மாணவர்கள், 65% மாணவிகள் அரசுப் பள்ளி​களுக்கு அனுப்​பப்​படு​கின்​றனர்; அதுவே கட்டண வசூலில் ஈடுபடும் தனியார் பள்ளி​களில் 38.8% மாணவர்கள், 26.6% மாணவிகள் சேர்க்​கப்​பட்​டிருக்​கின்​றனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்​தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்​களிலும் இந்த விவகாரத்தில் 10%க்கும் கூடுதலாகப் பாகுபாடு நிலவுகிறது. குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் நகர்ப்பு​றங்​களில் உச்சபட்ச பாரபட்சம் கடைப்​பிடிக்​கப்​படுவது தெரிய​வந்துள்ளது.

தமிழ்​நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்​களிலும் சம எண்ணிக்கையில் ஆண், பெண் குழந்தைகள் அரசுப் பள்ளி​களிலும் தனியார் பள்ளி​களிலும் படித்து​வரு​கின்​றனர். வடகிழக்கு மாநிலங்​களில் உள்ள தனியார் பள்ளி​களில் மாணவர்​களை​விடவும் மாணவி​களின் சேர்க்கை விகிதம் கூடுதலாக இருப்பது கவனிக்​கத்தக்க விஷயம்.

உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: உயர்நிலை வகுப்பு​களைப் பொறுத்​தமட்டில் தமிழ்​நாட்டில் ஆண் குழந்தை​களுக்கு ரூ.22,593 வரையிலும், பெண் குழந்தை​களுக்கு ரூ.23,796 வரையிலும் செலவிடப்​படு​கிறது. அந்த வகையில், தமிழகக் குடும்​பங்கள் உயர்நிலை வகுப்பு​களில் பயிலும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஆண் குழந்தை​களைக் காட்டிலும் சராசரியாக ரூ.1,203 கூடுதலாகச் செலவிடு​கின்றன.

ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய மேல்நிலை வகுப்பு​களில் ஆண் குழந்தை​களுக்கு ரூ.35,973 வரை செலவழிக்கும் தமிழகக் குடும்​பங்கள் பெண் குழந்தை​களுக்கு ரூ.19,412 மட்டுமே செலவிடு​கின்றன. இதற்கு இரு வேறு காரணங்கள் இருப்​ப​தாகத் தெரிய​வந்துள்ளது.

ஒன்று, இன்றளவும் பெண் குழந்தைகள் மத்தியில் இடைநிற்றல் சிக்கல் தமிழ்​நாட்டின் புறநகர்ப் பகுதி​களில் ஆங்காங்கே காணப்படு​கிறது. மற்றொன்று, உயர்கல்​வியில் மாணவி​களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரக்கூடிய ‘புதுமைப் பெண்’ உள்ளிட்ட உதவித்​தொகை​யுடன் கூடிய திட்டங்கள் குடும்​பங்​களின் தோள்களில் இருந்து கல்விக் கட்டண பாரத்தைப் பெருமளவில் குறைத்​திருப்பது தெரிய​வந்துள்ளது. இதுதவிர ஆந்திரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்​களிலும் பெண் குழந்தை​களின் மேல்​நிலைக் கல்விக்கு ​முக்​கி​யத்துவம் அளிக்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT