நாடு முழுவதும் இன்றைக்குத் தெரு நாய்க்கடிப் பிரச்சினை பேசப்படுகிறது. தெரு நாய்களுக்கு எதிர்ப்பு ஒரு புறம், ஆதரவு ஒருபுறம். வழக்கு உச்ச நீதிமன்றம்வரை போய்விட்டது. இந்தச் சூழலில், நாய்களின் வளர்ப்பு முறை தவறா, நாம் வாழும் முறை தவறா என்கிற கேள்வி எழுகிறது.
நாய்களுக்கும் எல்லைகள் உண்டு: ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன், கிராமப்புறங்களில் இரவில் வீட்டுக் காவலுக்கும் தோட்டம், வயல்வெளிகளில் பயிர்களை மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்றவும், காடுகளில் வேட்டைக்குப் பயன்படுத்தவும் அதிக எண்ணிக்கையில் நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை அனைத்தும் நாட்டு நாய்கள். ஒவ்வொரு வீட்டிலும் நாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டன. ஆனால், எந்தக் காரணம் கொண்டும் வீட்டுக்குள் நாய்களை வர விடமாட்டார்கள்.
எவ்வளவு பாசமாக வளர்த்தாலும் வீட்டுக்கு வெளியே ஏதோ ஒரு மரத்தடி நிழல்தான் நாய்க்கான இடமாக இருக்கும். எப்போதாவது வீட்டுக்குள் வந்தாலும் அடி வாங்கி, கத்திக்கொண்டே வெளியே ஓடிப்போகும். நாய் மூலமாக எந்த ஒரு நோய்க் கிருமியும் வீட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால்தான், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இப்படித்தான் கிராம மக்கள் நாட்டு நாய்களை வளர்த்தார்கள்.
என்னதான் வீட்டுக்குள் விடாமல் நாய்களை அடித்து விரட்டினாலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் ‘விசில்’ சத்தம் கேட்டால்போதும், அவற்றுக்குத் தெரிந்துவிடும். வீட்டுக்காரர்கள் வேட்டைக்குத் தயாராகிவிட்டார்கள் என. ஊரில் உள்ள நாய்கள் மொத்தமும், முயல் உள்ளிட்ட சிறு விலங்குகளை வேட்டையாடக் கூடிவிடும். வேட்டையாடும் நாய்களுக்குள் எந்தச் சண்டை சச்சரவும் வந்ததில்லை.
வெறிநாயும் கடிநாயும்: ஏதேனும் ஒரு நாய் வாயில் கோழை நீரை வடித்துக்கொண்டு ஆடுகளையும் கோழிகளையும் கடித்துக் குதற ஆரம்பித்துவிட்டால், நாய்க்கு வெறி பிடித்திருக்கிறது என மற்ற நாய்கள் அறிந்துகொண்டுவிடும். அந்த நாயிடம் கடி வாங்காமல் இருக்க அவை விலகியே இருக்கும். வெறிநாய் மனிதர்களைக் கடித்து யாரேனும் இறப்பதற்கு முன்பே, அதை ஊர் மக்கள் சேர்ந்து அழித்துவிடுவார்கள். ஆட்களைக் கடித்துப் பழக்கமாகிவிட்ட நாய்களைக் கொல்லத் தயங்க மாட்டார்கள். நாய்களை மக்கள் பிரியப்பட்டு வளர்த்தாலும், மனித உயிர் முக்கியம் என அப்போது மக்கள் நினைத்தனர்.
ஏன் தெருநாய் ஆனது? - காலமாற்றத்தில் நாட்டு நாய்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டோம். இப்போது வீடுகளில் எத்தனை நாட்டு நாய்கள் வளர்க்கப்படுகின்றன? நீங்கள் வளர்க்கும் நாயின் உண்மையான இனம் எது? அல்லது அது எந்த நாட்டு இனம்? லட்ச ரூபாய்வரைகூட விலை கொடுத்து வாங்கி, மாதந்தோறும் பல ஆயிரம் செலவு செய்து இன்றைக்கு இவை பராமரிக்கப்படுகின்றன; பாதுகாக்கப்படுகின்றன. நாட்டு நாய்களோ, உள்ளூர் நாய்களோ கவனிப்பார் அற்ற தெருநாய்கள் ஆகிவிட்டன.
நாய்களின் உணவுமுறை: தெருவில் அல்லது இயல்பாக வாழும் நாய் உள்ளிட்ட எத்தனை உயிரினங்கள் நம்மிடம் வந்து உணவு கேட்டன? நம்மில் எத்தனை பேருக்கு நாய்களின் உணவு முறை தெரியும்? நம் நாட்டில் நாய்களுக்கான உணவு, வீட்டில் எஞ்சிய உணவுதான். விருந்துச் சாப்பாடு, எச்சில் சோறு என்கிற பேதம் எல்லாம் நாய்க்கு இல்லை. என்றைக்கு நாய்கள் வீடுகளிலிருந்து வெளியே துரத்தப்பட்டனவோ, அன்றைக்கே அவற்றுக்கு நாகரிக வளர்ச்சி பெற்ற நகரங்களில் தெருக்களே வசிப்பிடம் ஆயின.
சுகாதாரம் இல்லாமல் கொட்டப்படும் கோழிக்கறிக் கழிவுகள், நகர்ப் பகுதி குப்பைகளும் தரம் பிரிக்க முடியாமல் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் குப்பைமேட்டில் உணவு தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவை முழு நேரமும் தெருக்களில் சுற்றித் திரிந்து இன்று ‘தெரு நாய்கள்’ ஆகிவிட்டன. இப்படி நாட்டு நாய்கள், உள்ளூர் நாய்கள் புறக்கணிக்கப்பட்டு தெரு நாய் என நாளிதழில் வாசிக்கையில் மனம் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது.
இதற்கு யார் காரணம்? நன்றியுள்ள நாட்டு நாய்களா? நாட்டு மக்களாகிய நாமா? புறாக்களுக்கு மூட்டை மூட்டையாகத் தானியங்களைச் சாலையில் மக்கள் கூடும் பகுதிகளில் கொட்டுகிறோம். மலைப் பிரதேச சுற்றுலாத் தலங்களில் குரங்குகளைப் பிச்சை எடுக்க வைக்கிறோம். பழங்களைத் தூக்கி எறிந்து நம் பிள்ளைகளுக்கும் தவறாகச் சொல்லிக் கொடுக்கிறோம். குஜராத் மாநிலத்தில் மாடுகளைக் கட்டிவைத்து பத்து ரூபாய்க்குத் தீனி வாங்கி அதிகாலையில் கொடுக்கிறார்கள். கருணையை வலிந்து திணித்து, குறிப்பிட்ட உயிரினத்தை அசாதாரணமாகப் பெருக வைக்கிறோம். அதன் இயல்பையும் வலிந்து மாற்றுகிறோம்.
கருத்தடை முறை: கிராமப்புறங்களில் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்த வரலாற்றைச் சற்றுப் புரட்டிப்பார்ப்போம். சாதாரணமாகவே நம் நாட்டு நாய்கள் குறைந்தபட்சம் ஆறு குட்டிகளையாவது ஈனும். அவற்றில் திடகாத்திரமான ஆண் குட்டிகள் எத்தனை என சோதித்துப் பார்ப்பார்கள். ஆறு குட்டிகளில் நான்கு ஆண் என்றால், தங்களுக்கு ஒன்றை எடுத்து வைத்துக்கொள்வார்கள்; நண்பர்களுக்குத் தேவைப்பட்டால் கொடுப்பார்கள். தேவைப்பட்டால் மட்டுமே பெட்டைக் குட்டியில் ஒன்றை விட்டுவைப்பார்கள்.
மீதமுள்ள குட்டிகள் அனைத்தையும், கண்விழிக்கும் முன் ஏதோ ஒரு பாழடைந்த கிணற்றில் தண்ணீரில் போட்டுவிடுவார்கள். இது கருணை அற்ற பழக்கமாகத் தோன்றலாம். ஆனால், இப்படித்தான் நாய்களின் பெருக்கம் முறையாகக் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அன்று ஒரு பெட்டை நாய் பின்னால் இருபது ஆண் நாய்கள் இனப்பெருக்கக் காலத்தில் சுற்றித் திரியும்.
இன்றைக்குச் சம அளவு பெட்டை நாய்களும் ஆண் நாய்களும் சுற்றித் திரிகின்றன. நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டவட்டமான நடவடிக்கை தேவை. மனிதச் சமூகத்தில் அவர்களின் பாதுகாப்புக்கு எதிராக நாய் உள்பட எந்த உயிரும் தொடர்ந்து அச்சுறுத்தலாக நீடிப்பது சரியல்ல.