சிறப்புக் கட்டுரைகள்

ஜிடிபி வளர்ச்சி விகிதம் மறைக்கும் உண்மைகள்

அ.நாராயணமூர்த்தி

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறியீடாகக் கருதப்படுகின்ற, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் செய்திகளில் ஒவ்வொரு வருடமும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஆளும் கட்சியும், அதன் அரசியல் தலைவர்களும் இதைத் தங்கள் சாதனை என்றும், இது சிறந்த பொருளாதார மேலாண்மைக்கான ஆதாரம் என்றும் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆண்டு, தமிழ்​நாடும் இந்தப் பட்டியலில் இணைந்து, 2024-25ஆம் நிதியாண்​டுக்கான இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பெருமை​யுடன் கொண்டாடிவரு​கிறது. பொதுவாக, 6-7% வளர்ச்சி விகிதம் என்பது சாதாரண மக்களை ஈர்க்​கக்​கூடிய​தாகத் தோன்றலாம். ஆனால், தரவுகளை​யும், வளர்ச்சி சார்ந்த யதார்த்​தங்​களையும் நன்கு அலசிப்​பார்த்​தால், வளர்ச்சிப் புள்ளி​விவரங்கள் எப்போதும் முழுமையான உண்மையைக் கூறுவ​தில்லை என்பது புரியும். வளர்ச்சி விகிதம் பொருளாதார முன்னேற்​றத்தின் ஒரு குறிகாட்​டியாக மட்டுமே இருக்க முடியும். அவை மட்டுமே, அனைத்துப் பிரிவினரின் வருமானமும் உயர்ந்துள்ளது என்பதை உறுதிப்​படுத்​தாது. உண்மையான வளர்ச்சி குறித்த நேர்மையான விவாதத்தை நாம் நடத்த வேண்டு​மா​னால், அந்த வளர்ச்சி விகிதத்​துக்குப் பின்னால் ஒளிந்துள்ள உண்மை​களைப் புரிந்து​கொள்வது அவசியம்.

கணக்கீட்டு முறைச் சிக்கல்கள்: வளர்ச்சி விகிதங்கள் கணக்கிடப்​படு​வதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. ஆளும் கட்சி​யினரும், ஆளும் அரசுக்கு ஆதரவான பொருளாதார ஆலோசகர்​களும், பெரும்​பாலும் ஆண்டுக்​காண்டு (Year-on-Year) வளர்ச்சியை ஒப்பிட்டு வெற்றிக் கோஷங்களை எழுப்பு​கின்​றனர். 2024–25ஆம் நிதியாண்டின் ஜிடிபி-யை2023–24ஆம் நிதியாண்​டுடன் ஒப்பிட்டு, ஆண்டுக்​காண்டு வளர்ச்சியைக் கணக்கிடு​கிறார்கள். ஆனால், இந்த அணுகுமுறை மூலம் அளவிடப்​படும் வளர்ச்சி விகிதம் புள்ளி​விவரரீ​தி​யாகச் சரியானதல்ல. பொருளா​தா​ரத்தின் செயல்​பாடு, பெருந்​தொற்று, வறட்சி, வெள்ளம், உலகளாவிய பொருளாதார மந்தநிலை போன்ற தற்காலிக மாற்றங்​களால், வளர்ச்சி விகிதம் ஆண்டுக்​காண்டு வேகமாக மாறுபடலாம்.

ஒருவேளை, அளவிடு​வதற்கு எடுக்​கப்​படும் அடிப்படை ஆண்டு (Base Year) மேற்கண்ட காரணங்​களால் மோசமான ஆண்டாக இருந்து, அதன் ஜிடிபி மதிப்பு குறைவாக இருந்​தால், அதைத் தொடர்ந்து வரும் ஆண்டில் மீட்பு இயல்பாகவே சதவீத அடிப்​படையில் பிரம்​மாண்​ட​மாகத் தோன்றும். இதற்கு நேர்மாறாக, அடிப்படை ஆண்டின் ஜிடிபி மதிப்பு மிக அதிகமாக இருந்​தால், அதற்கு அடுத்த ஆண்டில், மதிப்​பளவில் பொருளா​தாரம் கணிசமாக விரிவடைந்​திருந்​தா​லும், வளர்ச்சி விகிதம் குறைவான​தாகவே இருக்​கும்.

வளர்ச்சி விகிதத்தைக் கண்டறியப் பயன்படுத்​தப்​படும் முறைகளிலும் (Methodology) பல கேள்விகள் உள்ளன. வளர்ச்சி விகிதத்தைப் பல வழிகளில் கணக்கிடலாம், ஒவ்வொன்றும் வெவ்வேறு வளர்ச்சி எண்ணை உருவாக்​கும். ஒரே அளவிலான தரவுத் தொடருக்கு, அதிகமாகப் பயன்படுத்​தப்​படும் லாக்-லீனியர் (Log-Linear) முறையைப் பயன்படுத்திப் பெறப்​படும் வளர்ச்சி விகிதம், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைப் (CAGR) பயன்படுத்தி கணக்கிடப்​படு​வ​திலிருந்து மிகவும் வேறுபடும். இதேபோல், நடப்பு விலை அடிப்​படையில் அளவிடப்​படும் ஜிடிபி வளர்ச்சி விகிதம், பணவீக்​கத்தைக் கணக்கில்​கொண்டு, நிலையான விலையின் (Constant Prices) அடிப்​படையில் அளவிடப்​படு​வ​திலிருந்து வேறுபடும். உதாரணமாக, 2024-25ஆம் ஆண்டில் இந்தியாவின் நடப்பு விலை (Current Prices) மதிப்பில் ஜிடிபி வளர்ச்சி 9.9%. ஆனால், நிலையான விலையில் கிடைக்​கப்​பெற்ற வளர்ச்சி விகிதம் 6.5% மட்டுமே.

துறைகளின் பங்கை மறைப்பதா? - எந்தத் துறையின் பங்களிப்பால் ஜிடிபி வளர்ச்சி அடைகிறது என்பது பொது விவாதங்​களில் பெரும்​பாலும் புறக்​கணிக்​கப்​படு​கிறது. ஜிடிபி என்பது மூன்று முக்கியத் துறைகளின் (விவசாயம், தொழில், சேவைகள்) பங்களிப்பால் உருவாக்​கப்​படும் ஒரு கூட்டு மதிப்பு. வளர்ச்சி விகிதக் கணக்கீடு​களில் விவசாயத் துறையை நீக்கி​விட்​டால், மொத்த வளர்ச்சி விகிதம் எப்போதும் அதிகமாகவே இருக்​கும். ஏனெனில், விவசாயத் துறை பல காலமாக மெதுவாக வளர்ந்து வருவது மட்டுமல்​லாமல், சில வருடங்​களில் குறைவான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு போல் அல்லாமல், மொத்த ஜிடிபியில் விவசாயத் துறையின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும் மாநிலங்​களில், இத்துறையின் குறைவான வளர்ச்சி ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து​விடும்.

வளர்ச்சி எந்தத் துறையி​லிருந்து வருகிறது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில், அந்த வளர்ச்சியின் பலன்கள் எவ்வளவு பரவலாகப் பகிரப்​படு​கின்றன என்பதை அதுவே தீர்மானிக்​கிறது. ஆய்வுகள் கூறுவது என்னவென்​றால், உற்பத்தி - சேவைத் துறைகளுடன் ஒப்பிடும்​போது, விவசா​யத்தில் ஏற்படும் வளர்ச்சிக்​குத்தான் ‘அதிக பரவல் விளைவு’ (Percolation Effect) உள்ளது. விவசாய வளர்ச்சியின் பலன்கள், ஏழ்மையான குடும்​பங்​களுக்கு அதிகமாகச் சென்றடைகின்றன. ஒரு நல்ல விவசாய ஆண்டு, கோடிக்​கணக்கான சிறு, குறு விவசா​யிகளின் வருமானத்தை உயர்த்து​கிறது, வேலைவாய்ப்பை அதிகரிக்​கிறது, நுகர்வைக் கூட்டு​கிறது, வறுமையைக் குறைக்​கிறது. விவசாயத் துறைக்கு அடுத்​த​படியாக, உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் கணிசமான பலன் பகிர்வு விளைவைக் கொண்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் மிகப்​பெரிய பங்களிப்​பாளராக இருக்கும் சேவைத் துறையின் வளர்ச்சி, குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு எந்தப் பரவல் விளைவையும் ஏற்படுத்து​வ​தில்லை.

அதாவது, மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகளவில் இருந்​தா​லும், அந்த வளர்ச்சி பெரும்​பாலும் சேவைத் துறை அல்லது மூலதனச் செறிவுமிக்க தொழில்​களால் இயக்கப்​படும்​போது, அதன் தாக்கம் வறுமைக் குறைப்பு, வருமான சமத்து​வத்தில் குறைவாகவே தாக்கம் செலுத்​தும். 2024-25ஆம் நிதியாண்​டில், தமிழ்​நாட்டின் மொத்த ஜிடிபியில் சேவைத் துறை மட்டும் 53.63% பங்களித்​து உள்ளது. அதேவேளை, விவசாயத் துறையின் பங்களிப்பு வெறும் 13% மட்டுமே. இத்தகைய வளர்ச்சி அமைப்பு, பணக்காரர்​களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வருமான ஏற்றத்​தாழ்வுகளை அதிகரிக்​கும். தமிழ்​நாட்டின் மொத்த மக்கள்​தொகை​யில், 55 சதவீதத்​துக்கும் மேல் வேளாண் துறையை இன்றும் சார்ந்துள்ள மக்களுக்கு இதனால் பெரிய பலன்கள் எதுவும் கிடைக்​காது. உதாரணமாக, தமிழ்நாடு மொத்த வளர்ச்சியில் பல ஆண்டுகளாக இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்த​போ​தி​லும், பயிர்ச்​சாகுபடி மூலம் வேளாண் குடும்​பங்​களுக்குக் கிடைக்கும் மாத வருமானத்தில் 21ஆவது இடத்திலேயே இருக்​கிறது.

புள்ளி​விவரங்​களில் அரசியல்: வளர்ச்சிப் புள்ளி​விவரங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து​வரு​கிறது. அதிக வளர்ச்சி என்பது ஆளும் அரசாங்​கத்தின் கொள்கைகள் சிறப்​பாகச் செயல்​படு​கின்றன என்பதற்கான ஆதாரம் எனக் கூறுபவர்கள், குறைந்த வளர்ச்சியை நிர்வாகத் திறனின்​மைக்கான சான்றாக ஒப்புக்​கொள்​வ​தில்லை. ஆச்சரியமாக, இதுபோன்ற விவாதங்​களில் உலக வர்த்​தகத்தின் நிலை, பருவமழையின் பங்கு, மாநிலத்தின் அமைவிடம் போன்ற காரணி​களின் செல்வாக்கு பெரும்​பாலும் விவாதிக்​கப்​படு​வ​தில்லை. இக்காரணிகள், உள்நாட்டுக் கொள்கைகளைப் போலவே வளர்ச்சி முடிவு​களைத் தீர்மானிப்​பதில் முக்கியப் பங்கு வகிக்​கின்றன. மேலும், ஜிடிபி வளர்ச்சி மட்டுமே ஊட்டச்​சத்து, சுகாதாரம், வறுமை, வேலைவாய்ப்பில் முன்னேற்​றங்​களுக்கு உத்தர​வாதம் அளிப்​ப​தில்லை.

உதாரணமாக, நிதி ஆயோக் வெளியிட்​டுள்ள தேசியப் பல பரிமாண வறுமைக் குறியீட்டு அறிக்கைப்படி, 2015-16 மற்றும் 2019-21க்கும் இடையில், தமிழ்​நாட்டில் சென்னை, திண்டுக்கல் மாவட்​டங்​களில் வறுமை அதிகரித்​துள்ளது. முடிவாக, பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய​மானது என்றாலும், அது மட்டும் போதாது. ஒரு மாநிலம் நீடித்த உயர் வளர்ச்சியைப் பெற வேண்டு​மா​னால், அந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்​கிய​தாக​வும், வேலைவாய்ப்புகளை உருவாக்கு​வ​தாக​வும், எல்லாப் பிரிவினரின் வருமானத்தை உயர்த்து​வ​தாகவும் இருக்க வேண்டும். இவை இல்லாத​போது, வளர்ச்சி பற்றிய புள்ளி​விவரங்கள் யதார்த்​தத்​திலிருந்து துண்டிக்​கப்பட்ட ஒரு புள்ளி​விவர​மாகவே இருக்க முடியும். ஆளும் அரசியல் கட்சிகள், வளர்ச்சி விகிதம் பற்றிப் புகழ்பாடி ஆதாயம் பெறுவதற்கு முன்னால், அதற்குப் பின்னால் உள்ள ஆழமான உண்மை​களைப் புரிந்து​கொள்ள வேண்டும். வளர்ச்சி குறித்த விவாதம், யாருடைய சதவிகிதப் புள்ளி அதிகமாக உள்ளது என்ற போட்டி​யாகச் சுருங்​கி​னால், நம் மாநிலத்​துக்குத் தேவையான வளர்ச்சி என்ன, அது யாருக்​கானது என்கிற ஆழமான கேள்விகளை நாம் தவறவிட்​டுவிடுவோம்​.

கட்டுரையாளர்
மூத்த பேராசிரியர்,
இந்திய விவசாயச் செலவுகள்-விலைகள் ஆணையத்தின் முன்னாள் முழுநேர உறுப்பினர், புதுடெல்லி.
தொடர்புக்கு: narayana64@gmail.com

SCROLL FOR NEXT