சிறப்புக் கட்டுரைகள்

கவிஞர் சிற்பி 90

நா.முத்துநிலவன்

தமிழில் 60 ஆண்​டு​களாகப் படைப்​புல​கில் இருப்​போர், இரண்டு சாகித்​திய விருதுகள் பெற்​றோர், படைப்​பு​களுக்​காக பத்மஸ்ரீ விருது பெற்​றோர், சாகித்ய அகாதமி ஒருங்​கிணைப்​பாள​ரான தமிழாசிரியர், புதிய சிந்​தனை​களைப் படைப்​பில் தரும் தமிழாசிரியர், இதழ்​களின் ஆசிரியர் குழு​வில் உள்ள படைப்​பாளி​கள், தொண்​ணூறு வயதி​லும் தொடர்ந்து எழுது​வோர், மரபுக் கவிதையோடு, புதுக்​க​விதை​யும் எழுது​வோர் என்ற வகை​களில் தனித்​தனி​யாகப் பார்த்​தால் ஒவ்​வொரு வகை​யிலும் வெகுசிலரே இருப்​பார்​கள். ஆனால் இந்த வகைகள் அனைத்​தி​லும் இடம்​பெறக்​கூடிய பெரு​மைக்​குரிய​வர் கவிஞர் சிற்பி ஒரு​வரே எனலாம்.

இலக்​கிய அமைப்​பு​களோடு நட்பு பாராட்​டி, அமைப்​புக் கடந்த படைப்​பாளி​களை​யும் ஊக்​கு​வித்து வரு​வதே சிற்​பி​யின் சிறப்​பு. 1960கள் வரை பழந்​தமிழைப் பற்​றியே எழுதி வந்​தது தமிழ்க் கவிதை உலகம். இந்​நிலை​யில், பாரதி சொல்​வது போல, ‘எளிய பதம், எளிய சொற்​களில்’ உலகப் பார்​வையோடு உள்​ளூர் நடப்​பு​களை​யும் எழு​திய ‘வானம்​பாடிகள்’ எனும் கவிஞர் குழு தமிழுக்​குப் புதிய ரத்​தம் பாய்ச்​சி​யது. அதில் முதன்​மை​யானவர் சிற்​பி. ‘வானம்​பாடி’ - சிற்​றிதழ்​களைப் படித்த இளைஞர்​கள் புதி​தாய்ப் பிறந்​தனர்.

“கற்​பனைக்​குள்​ளும் காமத்​தினுள்​ளும், பிற்​போக்​குத் தனத்​தினுள்​ளும் புதைந்து புழுக்​களாக நெளி​கின்ற நிலை​யில், வானம்​பாடிகள் தமது சமூக நோக்​கில் பார​தி, பார​தி​தாசனின் தற்​கால வாரிசுகள்” என்று ‘வானம்​பாடிகள்’ குழு​வின் தொகுப்​பாக வந்த ‘வெளிச்​சங்​கள்’ (1973) நூலின் முன்​னுரை​யில் கவிஞர் ஞானி சரி​யாக மதிப்​பிட்டு எழு​தி​னார். அன்​னம் விடு தூது, வள்​ளுவம், கவிக்​கோ, கணை​யாழி, சக்​தி, இதழ்​களின் ஆசிரியர் குழுக்​களில் இருந்​து, புதிய படைப்​பாளி​களை எழுத வைத்​தார் சிற்​பி. ஞானி, புவியரசு, தமிழ்​நாடன், ஈரோடு தமிழன்​பன், மீரா, தமிழ​வன், இன்​குலாப், பாலா போன்​றவர்​களோடும், ‘வானம்​பாடிகள்’ இயக்​கக் கவிஞர்​களோடும், புதி​ய​வர் பலரோடும் இணைந்து செயல்​பட்​டார்.

“நான் மரபின் பிள்​ளை, புது​மை​யின் தோழன், என்​களம் – என்​மண், என் பாத்​திரங்​கள் - என் மனிதர்​கள், என் பின்​புலம் – தமிழ்​இலக்​கி​யம், மற்​றவை​யும் மற்​றவர்​களும் எனக்கு விருந்​தினர் மட்​டுமே!” (1996 - இறகு) என்று பிரகடன​மாகச் சொன்ன சிற்​பி, இன்று வரை அந்​தத் தடத்​திலேயே பயணம் செய்​கிறார். சிற்​பி்​யின் ‘சர்ப்​ப​யாகம்’ நூலில் உள்ள ‘சிகரங்​கள் பொடி​யாகும்’ கவிதை, சாதிக் கொடுமைக்கு எதி​ராகக் கிளர்ந்​தெழும் ஒடுக்​கப்​பட்ட மக்​களின் போர்​முரசு. இது ஒடுக்​கப்​பட்ட மக்​களுக்​கான புதுக்​க​விதை​யின் முதல் போர்க்​குரலாய் ஒலித்த வானம்​பாடிகளின் சிகரக் கவிதைகளில் ஒன்​று.

என்​ன​தான் பண்​ணை​யார் குடும்​பத்​தில் பிறந்​து, வசதி​யில் புரண்டு வளர்ந்​திருந்​தா​லும், மேல்​தட்டு வாழ்​வியலில் திளைத்​திருந்​தா​லும், “என்​குரல் மனிதக் கட்​டு​களை உடைத்​து, குரலற்​றவனின் குரலாய் ஒலிக்க வேண்​டும் என்று நினைத்​தேன்” என்​கிறார் சிற்​பி. தமிழ் இலக்​கிய வரலாற்​றில்சிற்​பி​யின் ‘மெளன மயக்​கங்​கள்’ (1982) புதுக்​க​விதை வடி​வில் வெளிவந்த முதல் கதைக் கவிதை (Fiction Poetry) என்ற சிறப்​பைப் பெறுகிறது. சிற்​பி​யின்முதல் கவிதைத் தொகுப்​பு, ‘நில​வுப்​பூ’ 1963-இல் வெளிவந்​தது. “ஏறத்​தாழ ஐம்​பது ஆண்​டு​களுக்​கும் மேலாக, ஒரு சிறிதும் இடைவெளி விடா​மல் ‘கவிதை’என்​கிற பிசாசோடு கூடிக் குலாவி வாழ்ந்து கொண்​டிருக்​கிறார் என்​பதேமிகப்​பெரிய சாதனை​தான்” என்​கிறார் இலக்​கிய விமர்​சகர் க.பஞ்​சாங்​கம்.

கவிதை, கவிதை நாடகம், சிறார் இலக்​கி​யம், கட்​டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்​கள், மொழிபெயர்ப்​பு​கள், நல்ல நூல்​கள் பதிப்பு என இவர் இயங்​கிய தளங்​கள் தமிழுக்கு வளம் சேர்த்​தன. 90 வயதுக்​குள் இவர் தந்த படைப்​பு​கள், ஏறத்​தாழ 90 என்​பது வியப்​பானது மட்​டுமல்ல, இளைய படைப்​பாளி​களுக்கு எடுத்​துக்​காட்​டும் ஆனது. கவிதைத் தொகுப்​பு​களை ஏராள​மாக வெளி​யிட்​டோர் தமிழில் பலருண்​டு.

ஆனால், “யாருக்​காக எழுதுகிறோம்? அதை எந்த வடி​வில் எழுது​வது?” எனும் தீர்க்​க​மான பார்​வையோடு சிற்பி எழுது​வதை, இளைய கவிஞர்​கள்கவனித்​துக் கற்​றுக் கொள்ள வேண்​டும்! “தமிழால் பாரதி தகுதி பெற்​றதும், தமிழ் பார​தி​யால் தகுதி பெற்​றதும்” என்ற பாரதி பற்​றிய பார​தி​தாசனின் வரி​கள்​ அப்​படியே சிற்​பிக்​கும்​ பொருந்​தும்​.

29-7-2025 கவிஞர்​ சிற்​பியின்​ 90வது பிறந்த நாள்

SCROLL FOR NEXT