சிறப்புக் கட்டுரைகள்

நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப்படுமா?

அருண் அசோகன்

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்கள்தான் சர்வ வல்லமை படைத்தவர்கள். இந்த அடிப்படையில், மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மூலமாகத் தங்களின் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் அத்தகைய மன்றம்தான் நாடாளுமன்றம். அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இத்தகைய நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப்படுமா என்னும் கேள்வி நீண்ட காலமாக ஒலிக்கிறது.

ஜன​நாயகம், பிரதி​நி​தித்துவ அமைப்பு​களின் (Representative Institutions) சாராம்​சத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மையான நிர்வாக அமைப்பு​களின் வேர்களிலும் நம்மால் காண முடிகிறது. எனினும், 1950 ஜனவரி 26இல்​தான், முதல் முறையாக, நவீனக் கட்டமைப்பு​களைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக நாடாக இந்தியத் துணைக் கண்டம் பிரகடனப்​படுத்​தப்​பட்டது. இந்திய அரசமைப்​பின்படி, ‘ஒன்றியச் சட்டமன்றம்’ (Union Legislature) தான் நாடாளு​மன்றம் என்று அழைக்​கப்​படு​கிறது. நாடாளு​மன்றம் என்னும் புள்ளியை மையமாகக் கொண்டே இந்திய அரசியல் இயங்கு​கிறது.

இந்திய அரசமைப்பில் நாடாளு​மன்றம்: மிக விரிவான முறையில் உருவாக்​கப்​பட்​டுள்ள இந்திய அரசமைப்​பில், நாடாளு​மன்​றத்தின் அமைப்பு, அதிகாரம், இயங்கு​முறை, சிறப்புநிலை ஆகியவை குறித்து மிக விரிவான முறையில் வரையறுத்துச் சொல்லப்​பட்​டிருக்​கிறது. சட்டக் கூறுகள் 79 முதல் 122 வரையில் நாடாளு​மன்றம் தொடர்பான அனைத்து முக்கிய அம்சங்​களும் மிகத் துல்லியமாக எடுத்​துரைக்​கப்​பட்​டிருக்​கின்றன.

குடியரசுத் தலைவரும் இந்திய நாடாளு​மன்​றத்தின் ஓர் அங்கம் என்று சட்டக் கூறு 79 கூறுவ​திலிருந்தே நாடாளு​மன்​றத்தின் முக்கி​யத்து​வத்தை எளிதில் புரிந்து​கொள்ள முடியும். கால மாற்றம், சமூகச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால் ஏற்படும் புதிய தேவைகளை, மக்களின் விருப்​பங்களை நிறைவேற்றும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்; அல்லது நடைமுறையில் உள்ள பழைய சட்டங்​களைத் திருத்த வேண்டும்.

சட்டங்களை இயற்றும் (அல்லது) திருத்தும் அவசியமான பணியை நாடாளு​மன்​றத்​திட​மும், மாநிலச் சட்டமன்​றங்​களிடமும் இந்திய அரசமைப்பு அளித்​துள்ளது. நாடாளு​மன்​றமும் மாநிலச் சட்டமன்​றங்​களும் எந்தெந்தத் துறைகள் தொடர்​பாகச் சட்டங்களை இயற்றலாம், அவற்றின் வரம்புகள் குறித்து இந்திய அரசமைப்பின் அட்டவணை 7 மிக நேர்த்தியான மூன்று (மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல்) பட்டியல்​களையும் வழங்கு​கிறது.

சட்டங்களை இயற்றும் மன்றமாக மட்டுமே நாடாளு​மன்றம் இருந்து​வி​டாமல் தேர்ந்​தெடுக்​கப்பட்ட அரசாங்​கங்​களின் கொள்கை முடிவுகள், திட்டங்கள், வரவு - செலவு உள்ளிட்ட அறிக்கைகள், மக்கள் நலன் - தேச நலன் சார்ந்த முக்கியப் பிரச்சினைகள் குறித்து வெளிப்​படையான, நியாயமான, ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொள்ளும் மன்றமாக நாடாளு​மன்றம் செயல்​படு​வதற்கான வழிவகைகளை இந்திய அரசமைப்பு உருவாக்கி அளித்​திருக்​கிறது.

மொழி ஒரு தடையாகலாமா? - பன்மைத்து​வத்தின் புகழ்​மிக்க புகலிடமாக இந்தியத் துணைக்​கண்டம் திகழ்​கிறது. அதன் தாக்கம் இந்திய நாடாளு​மன்​றத்​திலும் பிரதிபலிக்​கிறது; பல்வேறு மொழி பேசும் மாநிலங்​களில் இருந்தும் மக்கள் பிரதி​நி​திகள் தேர்ந்​தெடுக்​கப்​படு​கிறார்கள். தற்போதுள்ள நிலவரப்படி, இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக இந்திய அரசாங்​கத்தால் அங்கீகரிக்​கப்​பட்​டுள்ளன.

மேலும், 38 மொழிகளை அட்டவணை 8இல் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்​பெற்று வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, நாடாளுமன்ற அலுவல்கள் அனைத்தும் (கடிதப் போக்கு​வரத்து உள்பட) இன்றளவும் இந்தி அல்லது ஆங்கில மொழியின் மூலமாக மட்டுமே மேற்கொள்​ளப்​படு​கின்றன.

நாடாளுமன்ற மக்களவை / மாநிலங்​களவையில் இந்தி அல்லது ஆங்கிலம் மூலமாகத் தங்கள் கருத்து​களைத் திறம்பட முன்வைப்​பதில் சிரமங்களை எதிர்​கொள்ளும் உறுப்​பினர்கள், அவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று, அவரவர் தாய்மொழி​யிலேயே பேசலாம் என்று இந்திய அரசமைப்பின் கூறு 120 கூறுகிறது. இந்தப் பிரிவின்படி, இந்திய நாடாளு​மன்​றத்தில் மொழிப் பன்மைத்துவம் முழு அளவில் பாதுகாக்​கப்பட வேண்டும்.

தமிழ்​நாட்டில் இருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள மக்களவை உறுப்​பினர்களான கே.சுப்​ப​ராயன், தொல்.​திரு​மாவளவன், சு.வெங்​கடேசன் உள்ளிட்ட ஆளுமைகள், விவாதங்​களில் தொடர்ந்து தாய்மொழியாம் தமிழ் மொழியிலேயே பேசிப் பங்கேற்று வருகிறார்கள்; மக்கள் கோரிக்கைகளைத் தமிழ் மொழியிலேயே அழுத்​தந்​திருத்தமாக முன்வைத்து வாதிடு​கிறார்கள்.

இதன் மூலம், இந்தியும் ஆங்கிலமும் அறிந்​திராத - தமிழ் மட்டுமே அறிந்துள்ள பெரும்​பகுதி மக்கள், தங்கள் தாய்மொழி​யிலேயே தங்கள் கோரிக்கைகள் நாடாளு​மன்​றத்தில் முன்வைக்​கப்​படு​வதைத் தெரிந்து​கொள்ள முடிகிறது. தற்போதுள்ள மொழிபெயர்ப்பு ஏற்பாட்டின் உதவியால், அரசாங்கத் தரப்பினர் இந்தி அல்லது ஆங்கிலத்தின் வழியாக மக்கள் பிரதி​நி​தி​களின் வாதங்​களை​யும், கோரிக்கைகளையும் புரிந்து​கொண்டு பதிலுரைக்க முடிகிறது.

ஆனால், அரசாங்கத் தரப்பினர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் அளிக்கும் பதில்களை இந்தி​யும், ஆங்கிலமும் அறிந்​திராத, பிற மொழியைத் தாய்மொழி​யாகக் கொண்ட உறுப்​பினர்கள் எவ்வாறு உடனடி​யாகப் புரிந்து​கொண்டு விவாதத்தைத் தொடர முடியும்? எவ்வாறு மக்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்த முடியும்? மக்கள் பிரதி​நி​திகள், தங்கள் கடமைகளை முழு அளவில் நிறைவேற்ற மொழி ஒரு தடையாக இருந்​திடக் கூடாது.

தமிழ்நாடு வழிகாட்டு​கிறது... நாடாளு​மன்​றத்தில் மக்கள் பிரதி​நி​திகள் அவரவர் மொழியில் கோரிக்கைகளை முன்வைத்திட வழிவகை காண வேண்டும்; கேள்வி நேரம், விவாதங்​களில் தொடர்ச்சி​யாகப் பங்கேற்றுத் தங்களின் கடமைகளை நிறைவேற்று​வதற்கு ஏற்ப இந்திய அரசமைப்பின் 8ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நிகழ்நேர மொழிபெயர்ப்​புக்கான (Real-time Bi-directional Interpretation) ஏற்பாடுகள் மேற்கொள்​ளப்பட வேண்டும்;

அமைச்​சகங்கள், அரசாங்கத் துறைகள் ஆகியவற்றுடனான கடிதப் போக்கு​வரத்து அனைத்​திலும் மக்கள் பிரதி​நி​திகள் பயன்படுத்தும் மொழியிலேயே பதிலளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2021ஆம் ஆண்டு மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் தமிழ்​நாட்டைச் சார்ந்த மூத்த உறுப்​பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவருமான கே.சுப்​ப​ராயன் பேசியுள்​ளார்.

பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்​சகம், மக்களவை, மாநிலங்களவைச் செயலகம் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலமாகக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். இந்தக் கோரிக்கையின் ஜனநாயகத்​தன்மையை மத்திய அரசாங்கம் உணர வேண்டும்; மேலும், காலம் தாழ்த்​தாமல் மாநில மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டி, மக்கள் பிரதி​நி​திகள் தங்கள் பணிகளை, மொழி தொடர்பான எவ்விதச் சிரமங்​களும் இன்றி, மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இது போன்ற சிக்கல் நிறைந்த பிரச்சினையைத் தமிழ்நாடு சட்டப்​பேரவை 70 ஆண்டு​களுக்கு முன்பே எதிர்​கொண்டு முன்னு​தாரணம் படைத்து வழிகாட்டி இருக்​கிறது. 1952இல் சென்னை மாகாணச் சட்டப்​பேர​வையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைத் தாய்மொழி​யாகக் கொண்ட​வர்கள் உறுப்​பினர்களாக இருந்​தார்கள். அதனால், உறுப்​பினர்​களின் தாய்மொழி விவாதங்களை மொழிபெயர்ப்​ப​தற்கு உரிய பணியாளர்களை நியமிப்​ப​தற்கு சென்னை மாகாண அரசு ஒரு தீர்மானம் கொண்டு​வந்தது.

அந்தத் தீர்மானத்தின் மீது 1952 டிசம்பர் 4இல் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா பேசிய​போது:‘மக்களால் தேர்ந்​தெடுக்​கப்பட்ட பிரதி​
நி​திகள், தாங்கள் எடுத்​துக்​கொண்ட பிரதிக்​ஞைக்குக் குந்தகமில்​லாமல் சட்டமன்​றத்தில் பணியாற்று​வதற்காக சர்க்கார் பணம் செலவழித்தால் தவறு ஆகாது. இதை ஒரு செலவு என்று கருதக் கூடாது’ என்று குறிப்​பிட்​டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தற்போதுள்ள தகவல் தொழில்​நுட்ப முன்னேற்​றத்தைப் பயன்படுத்தி மிக எளிதாக, நேர்த்தியாக மொழிபெயர்ப்​புக்கான ஏற்பாடுகளை நடைமுறைப்​படுத்திட இயலும்.

அந்த வகையில் மாநில உரிமைகள் நிலைநிறுத்​தப்​படும்​பட்​சத்​தில், இந்தியக் கூட்டாட்சி முறை (Federalism) மேலும் வலுப்​பெறும் என்பதை மத்திய அரசாங்கம் உணர வேண்டும். ஏறத்தாழ 145 கோடி மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப்​பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளு​மன்​றத்​தில், மாநில மொழிகளுக்கான உரிய அங்கீ​காரம் உறுதிப்​படுத்​தப்பட வேண்டும்​.

- தொடர்புக்கு: ashokan.arun@gmail.com

SCROLL FOR NEXT