விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்ததுபோலவே, 2025-26ஆம் ஆண்டு காரீஃப் பருவத்துக்கான 14 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலைகளை (Minimum Support Prices) மத்திய அரசு மே 28 அன்று அறிவித்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கிவிட்டதால், இந்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று சொல்ல வேண்டும்.
கடந்த ஆண்டைவிட, இந்தத் தடவை சராசரியாகப் பயிர்களுக்கு 7% விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் உற்றுநோக்கினால், இந்த அறிவிப்பானது பயிர்களின் சாகுபடிச் செலவையோ, அவற்றின் உள்நாட்டுத் தேவையையோ கருத்தில் கொள்ளாமல் விவசாயிகளின் பயிர்த் தெரிவுத் திட்டத்தைக் குழப்புகிறது என்றே சொல்ல வேண்டும்!
நெல்லுக்கு உயர்வில்லை: இந்தியாவின் முதன்மைப் பயிராக ஏறக்குறைய 470 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படும் பயிரான நெல்லைப் பற்றி முதலில் பார்ப்போம். மொத்த சாகுபடிப் பரப்பளவில் மட்டுமல்லாமல், அரசு மூலம் மேற்கொள்ளப்படும் கொள்முதல்களிலும் நெல் முதன்மைப் பயிராக உள்ளது.
ஆனால், நெல்லுக்கான எம்எஸ்பி கடந்த ஆண்டைவிட வெறும் 3% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது! சாகுபடிச் செலவு பிளஸ் 50% [(Cost A2+FL)+50%] என்ற எம்எஸ்பி விலைக் கொள்கையை 2018 முதல் மத்திய அரசு பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது. அப்படியானால், நெல்லுக்கான சாகுபடிச் செலவு கடந்த ஆண்டைவிட வெறும் 2%தான் உயர்ந்திருக்கிறதா என்னும் கேள்வி எழுகிறது.
டீசல், உரம், பயிர்ச் சாகுபடிக்குப் பயன்படுத்தப்படும் கூலி ஆள்களின் செலவுகள் உயர்ந்திருப்பது குறித்து அரசு ஏன் பரிசீலிக்கவில்லை என்னும் கேள்வியும் எழுகிறது. இவற்றோடு, பயிர்ச் சாகுபடிக்காக நிலத்தடி நீரைச் சமீபகாலமாக அதிகம் பயன்படுத்துவதால், நீர்ப்பாசனச் செலவுகளும் அதிகரித்து உள்ளன.
உண்மை நிலவரம் இப்படியிருக்க, வெறும் 3% உயர்வு என்பது எப்படி நெல் விவசாயிகளுக்கு லாபத்தைக் கொடுக்கும்? உண்மையான பயிர்ச் செலவு மதிப்பீடுகளைக் கணக்கில் கொள்ளாமலோ, 2018 முதல் பயன்படுத்தப்படும் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தாமலோ நெல்லுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டதுபோல் தெரிகிறது.
நெற்பயிருக்கான உயர்வுபோல் அல்லாமல் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் போன்ற ஊட்டச்சத்து தானியங்களுக்குச் சராசரியாக 9.36% விலை உயர்த்தப்பட்டுஉள்ளது. இதில் கேழ்வரகுக்கு மட்டும் 13.89% விலை உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குச் சரியான காரணமும் சொல்லப்படவில்லை.
தவறான சமிக்ஞை: பருப்புப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு விவசாயிகளுக்குத் தவறான சமிக்ஞையைக் கொடுக்கிறது. இந்தியாவில் பருப்புப் பயிர்களுக்கான தேவை பல காரணங்களால் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேவேளை, நம்முடைய உள்நாட்டு உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளி விரிந்துகொண்டே செல்கிறது.
இதன் விளைவாக, பருப்பு இறக்குமதியும், அதற்காகச் செய்யப்படும் செலவும் உயர்ந்து வருகின்றன. நம் நாட்டில் பருப்புப் பயிர்களின் தேவை அதிகரித்து வருவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் அல்லவா? ஆனால், காரீஃப் பருவத்தில் பயிரிடப்படும் மூன்று முக்கியப் பருப்புப் பயிர்களான துவரை, உளுந்து, பச்சைப் பயறு ஆகியவற்றுக்கான எம்எஸ்பி சராசரியாக வெறும் 4.12% மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
பச்சைப் பயறுக்கு வெறும் 1% உயர்வு மட்டுமே! பச்சைப் பயறு சாகுபடிச் செலவு 0.5% மட்டுமே உயர்ந்துள்ளது என்று எந்தப் புள்ளிவிவரம் சொல்கிறது? நாம் அதிகளவு பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் இந்நேரத்தில், பச்சைப் பயறுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, எப்படி அரசின் நல்ல கொள்கை முடிவாக இருக்க முடியும்?
எண்ணெய்வித்துப் பயிர்களின் நிலையும் சற்று விசித்திரமாக இருக்கிறது. இந்தியாவில் சுமார் 13 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படும் மிகப்பெரிய எண்ணெய்வித்துப் பயிரான சோயாபீன்ஸுக்கு ஒப்பீட்டளவில் பார்த்தால், அதிக எம்எஸ்பி உயர்வு (8.91%) கிடைத்துள்ளது.
ஆனால், பாரம்பரிய எண்ணெய்வித்துப் பயிர்களான நிலக்கடலை (7.08%), எள் (6.25%) போன்ற பயிர்களுக்கு மிதமான உயர்வு மட்டுமே கிடைத்துள்ளது. 2023-24இல் மட்டும் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவு ரூ.1.4 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டதாகத் தரவுகள் கூறுகின்றன.
இந்த வெளிநாட்டுச் சார்பைக் குறைக்க வேண்டுமென்றால், எண்ணெய்வித்துப் பயிர்களுக்கான விரிவான உற்பத்திக் கொள்கை தேவை. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் ஒரு முக்கியக் கருவியாக எம்எஸ்பியைக் கருத வேண்டுமென்றால், நிலக்கடலை, எள் பயிரிடும் விவசாயிகளுக்கும், சோயாபீன்ஸ் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதுபோல் விலை உயர்வு கொடுப்பது அவசியம்.
எம்எஸ்பி நிர்ணயத்தில் குழப்பம்: காரீஃப் பருவத்துக்கான 14 பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு, எம்எஸ்பியை நிர்ணயிப்பதில் குழப்பம் உள்ளது தெளிவாகிறது. இதைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு, எம்எஸ்பி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். பயிர்களின் உற்பத்திச் செலவு, உள்நாட்டுத் தேவை, உலகச் சந்தையின் விலை போன்ற காரணிகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பயிருக்கும் எம்எஸ்பி விலை பல காலமாக நம் நாட்டில் நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இந்திய வேளாண் விலைக் கொள்கையில் முக்கியத் திருப்பமாக, 2018 முதல் பயிர்களுக்கான எம்எஸ்பி விலைக் கணக்கீட்டு முறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, வேளாண் செலவுகள் - விலைகள் ஆணையத்தால் (CACP -Commission for Agricultural Costs and Prices) பயன்படுத்தப்படும் A2+FL செலவுக் காரணியான, “விவசாயிகளால் பயிர்ச் சாகுபடிக்குச் செலுத்தப்படும் உற்பத்திச் செலவுகளுக்கு (குடும்ப உறுப்பினர்களின் உழைப்புக்கான கூலிச் செலவையும் சேர்த்து)” மேலாக 50% கூட்டப்பட்டு [(A2+FL)+50%] எம்எஸ்பி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி பார்த்தால், தற்போதைய எம்எஸ்பி விலை நிர்ணயத்தில் குழப்பம் இருப்பது தெரியவரும். மொத்தச் சாகுபடிச் செலவுகள் பயிர்களுக்கு இடையில் அதன் தன்மையைப் பொறுத்து மாறுபடும். ஆனால் கூலி, டீசல், உரம் போன்ற முக்கிய இடுபொருள்களின் விலை அதிகரிப்பு, எல்லாப் பயிர்களுக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில், ஒவ்வொரு பயிருக்கும் எம்எஸ்பி சதவீத உயர்வு இவ்வளவு வேறுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
எம்எஸ்பி விலைக் கொள்கையில் தெளிவற்ற நிலை இருந்தால், விவசாயிகள் எந்தப் பயிரை எவ்வளவு விதைப்பது, எவ்வளவு வளங்களை ஒதுக்குவது, எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். பெரும்பாலான விவசாயிகளுக்கு, எம்எஸ்பி என்பது வெறும் ஆதார விலை மட்டுமல்ல; அது ஒரு எதிர்காலப் பயிர்த் திட்டத்துக்கான வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
அந்தக் கலங்கரை விளக்கம் தெளிவற்றோ சீரற்றதாகவோ இருந்தால், அது குழப்பத்தை உருவாக்கி, அரசாங்கத்தின் விலைக் கொள்கை மீதுள்ள நம்பிக்கையைக் குலைத்துவிடும். கள யதார்த்தங்களுடன் தொடர்பில்லாத அல்லது தன்னிச்சையாகக் கொடுக்கப்படும் விலை உயர்வுக்கு விவசாயிகள் தங்கள் பயிர்த் திட்டங்களை மாற்றி அமைப்பார்கள் என்று அரசாங்கம் நினைத்தால் அது தவறு.
கொள்கை வகுப்பாளர்களின் கவனத்துக்கு... பயிர்களுக்கான எம்எஸ்பி விலை அறிவிப்பு விவசாயக் கொள்கையின் ஓர் அங்கமாகவும், அரசியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கருவியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே, இது வெறும் வருடாந்திர அறிவிப்பாக மட்டும் இல்லாமல், உண்மையான செலவுப் போக்குகளையும், கொள்கை முன்னுரிமைகளையும் பிரதிபலிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அது வெளிப்படையானதாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
முடிவாக, ஒவ்வொரு பயிரின் விலை உயர்வுக்கும் பின்னால் ஏன் இந்த உயர்வு செய்யப்படுகிறது என்பதில் தெளிவு இல்லை என்றால், விவசாயிகளுக்கு எம்எஸ்பி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, கொள்கை வகுப்பாளர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிடும். பசுமைப்புரட்சி தொடங்கிய காலத்திலிருந்து நெல்லுக்கும் கோதுமைக்கும் சாதகமாகச் செயல்படுத்தப்பட்ட தவறான விலைக் கொள்கையால், பருப்பு - எண்ணெய்வித்துப் பயிர்களுக்கு நாம் இன்றுவரை வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருக்கின்ற சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
விவசாயிகள் வேளாண் பொருள்களின் கடந்தகால விலை மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்பத் தங்கள் பயிர்த்திட்டங்களைத் தெரிவுசெய்கிறார்கள் என்கிற வேளாண் பொருளாதார மேதை மார்க் நெர்லோவின் முக்கியமான கோட்பாட்டைத் தற்போதுள்ள கொள்கை வகுப்பாளர்கள் மறந்துவிடக் கூடாது.
- தொடர்புக்கு: narayana64@gmail.com