லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆறு பவானி. இந்த ஆற்றின் மீது இரண்டு வகைக் கொடுந்தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. ஒன்று, கொடிய நச்சுக்கழிவுகளைச் சுத்திகரிக்காமல் ஆற்றில் கலப்பதன் மூலம் ஊரெங்கும் புற்றுநோய்க்கான சூழலை உருவாக்குகின்றன ஆலை நிர்வாகங்கள்.
இரண்டு, நடைபெறாத வேலைகளுக்கு ‘அணைகள் புனரமைப்பு - மேம்படுத்துதல் திட்டம்’ (Dam Rehabilitation and Improvement Project - DRIP) என்று பெயர் சூட்டி, உலக வங்கி மூலம் கடன்களை வழங்கி ஆற்று நீரை வசப்படுத்த முனைகின்றன பெரு நிறுவனங்கள்.
பவானி ஆறு 18க்கும் மேற்பட்ட திட்டங்கள் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கும் பவானிதான் ஒரே நீராதாரம்.
ஆக, பவானி ஆறு சார்ந்த பொருளாதாரச் சுழற்சி ஒட்டுமொத்தத் தமிழகப் பொருளாதாரத்துக்கும் துணை செய்யக்கூடியதாகும். இப்படி மக்களுக்கு வாழ்வளிக்கும் ஆற்றின் கரையோர ஊர்களெல்லாம் மரண பயத்தில் உறைந்து கிடப்பதுதான் பேரவலம். காரணம் புற்றுநோய்.
கண்டுகொள்ளாத அரசுகள்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரைக்கும் ஆற்றின் ஓரத்திலேயே அமைந்திருக்கிற சிறிதும் பெரிதுமான ஆலைகள் வெளியேற்றுகிற கழிவுகளால்தான் புற்றுநோய் பாதிப்பு பரவலாக இருக்கிறது என்பதற்குச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. ஆலைக் கழிவுகளில் அளவுக்கு அதிகமான ஈயம், ஆர்சனிக், காட்மியம், குரோமியம் போன்ற நச்சுக் கனிமக் கழிவுகள் கலந்திருக்கின்றன.
இதனால் புற்றுநோய் மட்டுமல்ல, நரம்பு மண்டலப் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறுகள், தோல் நோய்கள் போன்றவற்றுடன், குழந்தைகளின் குறைவளர்ச்சி, திறன் குறைபாடு எனப் பேரழிவுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள கொத்தமங்கலம் என்னும் பஞ்சாயத்துக்குள் அடங்கிய 36 கிராமங்களில் நுழைந்து பார்த்தால், வீதிக்கு ஒரு புற்றுநோயாளி இருப்பதையும், வீட்டுக்கு ஒருவர் இந்நோயால் இறந்துபோயிருப்பதையும் தெரிந்துகொள்ளலாம். இதை ‘ஜீவநதியின் தீராவலி’ ஆவணப்படம் மூலமாகப் பதிவு செய்திருக்கிறோம்.
அழியும் கொடை: ஆலைகளின் நச்சுக் கனிமக் கழிவுகளுக்கு மனிதர்கள் மட்டும் பலியாகவில்லை, விளைநிலங்களும் விளைச்சலும் நஞ்சாகின்றன. கால்நடைகளும் சேர்ந்தே பலியாகின்றன. பவானி ஆற்றை ஒட்டிய காட்டுப் பகுதி உயிர்ப்பன்மை மிக்க பொக்கிஷம். ஏராளமான தாவரங்களும் விலங்குகளும் நிறைந்த இயற்கையின் கொடை. ஆற்றில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகளால் இவையும் அழிந்துகொண்டிருக்கின்றன.
இதில் கொடுமை என்னவென்றால், இவையெல்லாம் மத்திய– மாநில அரசுகளுக்கு நன்றாகவே தெரியும். சொல்லப்போனால், தமிழ்நாட்டில் புற்றுநோய் அதிகமாக இருக்கும் மாவட்டம் ஈரோடு என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அதற்கான காரணத்தைத்தான் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முதல் உலக நாடுகளின் நிதி ஆதாரத்தில் இயங்கும் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) போன்ற தொண்டு நிறுவனங்கள் வரை தொடர்ச்சியாக பவானி ஆற்றை ஆராய்ச்சி செய்து அறிக்கைகளை வெளியிடுகின்றன. அரசுகள் இவற்றைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
ஆபத்தான திட்டம்: இந்தச் சூழலில், பவானி ஆற்றின் மீது உலக வங்கி செய்யும் முதலீடு அச்சுறுத்துகிறது. ‘அணைகள் புனரமைப்பு - மேம்படுத்துதல் திட்டம்’ என்கிற பெயரில் நாடு முழுவதும் முக்கிய அணைகளின் மீது உலக வங்கி முதலீடு செய்கிறது. முதல் கட்டம் என்று சொல்லப்படுகிற 2012 – 2021 காலத்தில் 2,567 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக, 2021 – 2027 எனக் கால வரையறை செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள வைகை (மதுரை மாவட்டம்), ஆனைக்குட்டம் (விருதுநகர் மாவட்டம்), மிருகந்தா (திருவண்ணாமலை மாவட்டம்), அமராவதி (திருப்பூர் மாவட்டம்) ஆகியவற்றோடு பவானிசாகர் என ஐந்து பெரிய அணைகளில் உலக வங்கி முதலீடு செய்திருக்கிறது. பவானிசாகர் அணையில் மட்டும் 19 கோடியே 89 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
திட்டத்தின் நோக்கமாக நீர்த்தேக்கப் பகுதியில் வண்டல் - கழிவு தேங்காவண்ணம் சுத்தம்செய்வது, நீர்ப்பிடிப்புப் பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் / உயிர்ப்பன்மையைப் பாதுகாப்பது முதலியவை கூறப்படுகின்றன. ஆனால், இதுவரைக்கும் திட்டவட்டமாக வேலைகள் எதுவும் நடந்ததுபோல் தெரியவில்லை. நீர்த்தேக்கப் பகுதியில் வண்டல் - கழிவு அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டிருந்தால், உறைந்து கிடக்கும் நச்சுக்களும் அவற்றுடன் அகற்றப்பட்டிருக்கும். இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதலாவது கிடைத்திருக்கும்.
அப்படியானால், முறையாக நடக்காத பணிகளுக்கு உலக வங்கி கடன் அளிப்பது ஏன்? உலக வங்கி கடன் அளிப்பது ஒரு நாட்டைக் கடன் வலைக்குள் சிக்கவைத்து, அதன் வளங்களைப் பெரு நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பதுதான் நோக்கம் என்று முன்வைக்கப்படும் விமர்சனம் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது.
நெருக்கடி தரும் ஒப்பந்தம்: நமது நாடு கையெழுத்திட்டுள்ள காட்ஸ் (GATS) ஒப்பந்தத்தின்படி, நிலத்தடி நீர், ஆறுகள், குளங்கள், ஏரிகள் முதலான நீராதாரங்கள் அனைத்தையும் படிப்படியாகப் பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்; அதன் மூலம் குடிநீர், பாசனப் பயன்பாட்டுக்கான நீரை விற்பனைப் பொருளாக்க வேண்டும் என்பதும் நிபந்தனையாகும். மத்திய அரசும் மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு உலக வங்கியிடம் கடன் வாங்குகின்றன.
அதனால், உலக வங்கியின் நிர்ப்பந்தத்தை நிறைவேற்றியே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. அதனால்தான் நாடெங்கும் குடிநீர் என்பது விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டுவிட்டது. வீடுகளுக்கான குடிநீர் விநியோகமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
கோவையில்கூட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இனி, இது நாடெங்கும் விரிவுபடுத்தப்படலாம். இப்படிக் குடிநீரையும் விரைவில் விவசாயத்துக்கான நீரையும் ஆக்கிரமித்துக்கொண்டு விற்பனை செய்வதற்கு அடிப்படை என்ன? அதற்குத்தான் ஆற்றுநீர் விஷமாக்கப்படுவது அனுமதிக்கப்படுகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதுபோலவே ஆற்றையும் அணையையும் பாதுகாப்பதன் பேரில் கடன் அளிப்பதும் தொடர்கிறது.
ஒரு கட்டத்தில் நமது அரசுகளிடமிருந்து, “கடுமையான நிதிச்சுமையால் ஆற்றைப் பராமரிக்க முடியவில்லை; கூடவே, நஞ்சாகிவிட்ட ஆற்றைச் சுத்தப்படுத்தக் கூடுதல் நிதி தேவைப்படுகிறது; மக்களுக்குச் சுத்தமான குடிநீர் வேண்டும், விவசாயத்தைப் பாதிக்காமல் ஆற்றுநீர் பராமரிக்கப்படவும் வேண்டும்; எனவே, வேறு வழியின்றி ஆற்றைத் தனியாரிடம் ஒப்படைக்கிறோம்” என்றொரு அறிவிப்பு வரலாம்.
அதன் பிறகு குடிநீரோடு, விவசாயத்துக்கான பாசன நீருக்கும் நாம் கட்டணம் செலுத்துவது கட்டாயமாக மாறலாம். பஹல்காம் தாக்குதலையொட்டி, நமது நாடு பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உலக வங்கியின் இன்னொரு பிரிவான பன்னாட்டு நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு மீண்டும் கடனுதவி அளித்தது. அதை எதிர்த்த இந்தியா, கடனோடு சேர்ந்து விதிக்கப்பட்ட 11 நிபந்தனைகளைப் பாராட்டியது.
உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் சேர்ந்து மொத்தம் 50 நிபந்தனைகளை விதித்துள்ளன. அவற்றில் விவசாயம், குடிநீர், மின்சாரம் மொத்தத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதும் அடங்கும். ஆம்! உலக வங்கிக்கு இந்தியா – பாகிஸ்தான் என்கிற பாகுபாடு எதுவும் கிடையாது.
- தொடர்புக்கு: drsjeeva15@gmail.com