முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலைப் பொழுது, தஞ்சைப் பகுதிக்கே உரிய நாட்டு ஓடுகளைச் சுமந்த ஒரு சிறு வீடு... அதன் வெளிப்புறத்தில் சிறு கற்களைக் கொண்டு செய்யப்பட்ட அடுப்பு. சாதாரண கிராமத்துப் பெண்மணிபோல ஒருவர் தன்னுடன் சில இளைஞர்களை அழைத்துவந்தார்.
அருகில் சேகரித்த விறகுகளைக் கொண்டு சமைக்கத் தொடங்கினார். நானும் என்னுடைய நண்பர்களும் பெரும் காந்தியப் போராளியான ஜகந்நாதனைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் அமைப்பில் உள்ள களப்பணியார்களுக்கு வீதி நாடகப் பயிற்சி அளிக்கவே அங்கு சென்றிருந்தோம். அவர் அங்கு இல்லை. எங்களைப் பார்த்த அந்த அம்மையார், “வாங்க நீங்களும் சாப்பிடலாம்” என்று அழைத்தார்.
எங்களுக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவே இல்லை. எளிய கிராமத்துப் பெண் போன்ற தோற்றம், பழைய கதர்ச் சேலை, முகம் நிறையப் புன்னகை. “இவர்தான் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்” என்று நண்பர் திருநாவுக்கரசு எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவி, காந்தியடிகளை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைக்கச் சென்ற குழுவில் இருந்தவர், பூதான இயக்கத்தின் தளபதி ஜகந்நாதனின் துணைவியார். கீழத் தஞ்சையின் பண்ணையார்களைக் கதிகலங்க வைத்தவர். என்ன ஒரு எளிய தோற்றம். அவர்தான் கிருஷ்ணம்மாள் ஜகந்நாதன்!
வாழ்க்கையே செய்தி! - ஒரு கிராமத்துப் பெண்ணாக நின்று சமைத்துக்கொடுத்து ஊழியர்களுடன் ஒரு தாயாகத் தானும் உணவருந்திய காட்சி இன்றும் என் கண்ணைவிட்டு அகலவில்லை. இப்படியும் நம் நாட்டில் தலைவர்கள் இருக்கிறார்களா என்கிற வியப்பு தீரவே இல்லை. காலங்கள் ஓடினாலும் இன்றும் அவருடன் பயணிப்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவு. எளிமையின் வடிவம், கொண்ட கொள்கையில் விடாப்பிடித்தன்மை, அறப்போராட்டத்தில் சற்றும் பிறழாத உறுதி.
இவைதான் அவரது அடையாளங்கள். நோபல் பரிசுக்கு இணையான ‘சீரிய வாழ்வியல் விருது’ (Right livelihood Award), பத்மஸ்ரீ, பத்மபூஷண் என்று உயரிய விருதுகளைப் பெற்றபோதும் அவற்றைப் பற்றி சற்றும் பெருமிதம் கொள்ளாமல், ‘அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’ என்று முழங்கியவாறு எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தூயதொரு தவக்கொழுந்தாகத் திகழும் அன்னைக்கு நூறாண்டு அகவை தொடக்கம்.
அவரிடம் பேசிக்கொண்டிருந்தால் போதும், இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ளலாம். இந்த வயதிலும் சற்றும் நினைவு தவறாமல் துல்லியமாகத் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். காந்தியடிகளைச் சந்தித்த நிமிடங்கள், காந்தி கிராம நிறுவனர் சௌந்திரம் அம்மையார் தன்னை அரவணைத்து உருவாக்கிய காலச்சுவடுகள் என்று தனது இளமைக்கால நினைவுகளை கிருஷ்ணம்மாள் வெளிப்படுத்தும் விதம் அலாதியானது.
ஜகந்நாதன், பொருளியல் மேதை ஜே.சி.குமரப்பாவின் தளபதியாகத்தான் முதலில் இருந்தார். உழுபவர்களுக்கு நிலம் இருக்க வேண்டும் என்கிற உறுதியில் குமரப்பாவுடன் தோள் கொடுத்தவர். அவர் தலைமையில்தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் புரட்சிகரமான சாதி மறுப்புத் திருமணம். அதன் பின்னர் விநோபா அடிகளுடன் இணைந்து பூதான இயக்கத்தில் நடைபோட்ட இவ்விருவரும் அவரிடமே தமது வாழ்நாளையும் கொடுத்துவிட்டார்கள்.
மிக நீண்ட பயணம், கீழ வெண்மணியில் ஏழை மக்கள் எரித்துக்கொல்லப்பட்ட துயரம் இவரை அங்கு உந்தித் தள்ளியது. நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு நிலம் பெற்றுத் தருவதே தனது முதல் வேலை என்று தொடர்ந்து மக்களுக்கு நிலங்களைப் பெற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
கீழவெண்மணி மட்டுமல்லாது, பல ஊர்களில் உள்ள மக்களுக்கும் நிலம் கிடைத்திருக்கிறது. தன்னுடைய நூறாம் ஆண்டுப் பிறந்தநாளிலும்கூட 29 பேர்களுக்கு நிலத்தை வழங்கிடப் பதிவு அலுவலகத்தில் வந்து நின்றார். பதிவுசெய்து கொடுத்துவிட்டுத்தான் கிளம்பினார். அதுவே அவரது வாழ்வியல் செய்தி.
அச்சமில்லை அச்சமில்லை! - இறால் பண்ணைத் தொழிலுக்கு எதிராக இவர்கள் செய்த அளப்பரிய போராட்டங்கள் வீரஞ்செறிந்தவை. பெரிய டிராக்டர்களுக்கும் லாரிகளுக்கும் முன்பாக படுத்துக்கொண்டு ‘அருட்பெருஞ்சோதி..’ என்று முழக்கமிடும் மக்களைப் பார்த்துக் காவல் துறை ஒன்றும் செய்ய முடியாமல் திணறியது.
கண்கள் சரியாகத் தெரியாத நிலையிலும், காதுகள் சரியாகக் கேட்காத நிலையிலும் ஜகந்நாதனின் போராட்டம் தொடர்ந்தது. ‘ஓடி வந்து காவலரைத் தாக்கினார்’ என்று அவர் மீது வழக்கு போடப்பட்டது. அந்தக் கடுமையான காலத்தில் கிருஷ்ணம்மாள் மனந்தளராமல் போராடினார்.
நான் அப்போது தகவல்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பும் பணிகளைச் செய்துவந்தேன். களப்போராட்டம் மட்டுமல்ல, சட்டரீதியிலும் சளைக்காமல் போராடினார்கள். உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடை பெற்றுவந்து, தங்களது செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள்.
உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றபோது வழக்கறிஞர் மாரியப்பனும், சர்வோதயத் தலைவர் க.மு. நடராசனும் இவர்களுடன் சென்று வழக்காடினார்கள். எனக்கும் உடன் செல்ல ஒரு வாய்ப்புக் கிட்டியது. வழக்கறிஞர் எம்.சி.மேத்தா நீதிபதியிடம் முரண்பட்டு நீதிமன்றத்துக்கு வராமல் போக, கிருஷ்ணம்மாள் - ஜகந்நாதன் தம்பதி சென்று வழக்காடிய காட்சி கண்முன் நிற்கிறது. எதற்கும், எப்போதும் அவர்களிடம் அச்சம் இருந்ததில்லை.
நடமாடும் பல்கலைக்கழகம்: போராட்டத்தையே தங்களது வாழ்க்கையாகக் கொண்ட இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இளைஞர்களுக்கு ஏராளம் இருக்கின்றது. பெரும் நிதி திரட்டல் இல்லாமல் எளிய முறையில் பெரும் மாற்றங்களைச் செய்ய முடியும் என்று கிருஷ்ணம்மாள் நமக்குக் காட்டிவருகிறார்.
பணம் படைத்த பண்ணையார்களிடம் சென்று எப்படிப் பேசி நிலத்தைப் பெறுவோம் என்பதை அவர் விளக்கும்போது சுவாரசியமாக இருக்கும். வன்முறையால் எதையும் நிரந்தரமாக வென்றெடுக்க முடியாது என்பதில் மிக உறுதியான கருத்து கொண்டவர். சில காலங்கள் மட்டுமே அந்த வெற்றி கைகூடும். பின்னர் பெரும் பின்னடைவு வரும் என்பார்.
தான் செய்த வேலைக்கு எந்த எதிர்பார்ப்பும் பாராமல் வாழும் ஒரு தவசியாக இவரைக் காண முடியும். சாதனையாளர் என்ற இறுமாப்பைத் துளியும் அவரிடம் காண முடியாது. ஒரு தெளிந்த நீரோடை செல்வதுபோல தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். இன்றைய அரசியல்வாதிகள் இவரிடம் இருந்து சிறிதாவது கற்றுக்கொள்ள வேண்டும். தன் பிள்ளைகள் மருத்துவர் பூமிக்குமார், மருத்துவர் சத்யா இருவரையும் பொதுவாழ்வுக்குக் கொடுத்துள்ளார்.
இன்றும் செய்தித்தாள்களையும் நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இவரிடம் உள்ளது. எவ்வளவு சிறிய கூட்டமானாலும் சரி, எவ்வளவு எளியவர்கள் நடத்தும் கூட்டமானாலும் சரி முதல் ஆளாக வந்து நின்று அருட்பெருஞ்சோதி அகவலைப் பாடிவிட்டுத்தான் அமர்வார்.
ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசும் திறன் பெற்றவர். பல வெளிநாட்டவர்கள் இவரது சீடர்கள். இத்தாலி பேராசிரியர்கள், காந்தியர்கள் என்ற பலரும் இவருடன் உரையாடிச் செல்வதில், இவரைச் சந்திப்பதில் பேரார்வம் கொண்டிருப்பார்கள். இவர் ஒரு நடமாடும் போராட்ட வாழ்வியல் பல்கலைக்கழகம். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் புதியதொரு போராட்டச் செய்தியைக் கூறுவார். வினோபாவின் திருவாசகம் பற்றிய பேச்சுகள், கடும் வெயிலில் அவருடன் நடக்கும்போது ஏற்பட்ட அனுபவங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ஒரு பக்கத்து வீட்டுப் பாட்டியின் நீர்மை, இவரைக் காணும்போது அவர்களுக்கு ஏற்படுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் கடல் கடந்து தேடி வருகிறார்கள். நாமும் இவருடன் வாழ்ந்தோம், இவரிடம் கற்றுக்கொண்டோம் என்பதைவிட வேறென்ன பேறு வேண்டும். நூறாண்டு காலம் நம்முடன் வாழும் அன்னையின் அறவழியில் நாமும் நடைபோடுவோம்.
- தொடர்புக்கு: pamayanmadal@gmail.com